தைப்பூசத்தன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலுக்கு வருகை தந்த மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், “தடைகளைக் கடந்து சிறப்பான முறையில் இன்று அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இவ்விழா நாம் பெரும்துயரிலிருந்து மீண்டு வந்ததன் வெற்றியைக் குறிக்கிறது” என்று கூறினார்.
தான் சிறுவனாக இருந்த போது தைப்பூசத்தில் காவடிகள் எடுப்போரை சுற்றி வந்து ஆவலுடன் வேடிக்கைப் பார்த்த தருணங்களை நினைவுகூர்ந்த அவர், ஸ்ரீதெண்டாயுதபாணி கோயிலில் பால்குடம் ஏந்திச் சென்று முருகன் சந்நிதியில் சமர்ப்பித்தார்.
மேலும் இன்று ஒரு சீனர் பால்குடம் சுமந்து காணிக்கை செலுத்தியதை தான் கண்டது சிங்கப்பூரின் பல இன பல சமய மக்களின் நல்லிணக்கத்தையும் பிணைப்பையும் பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்தார்.
பிரதமர் லீ சியென் லூங்கும் தமது தைப்பூச வாழ்த்துகளை பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
“சிங்கப்பூரில் பல்லின மக்களின் பண்டிகைகள் சில நேரம் ஒரே நாளில் வருவதுண்டு.
இன்று இந்து சமயத்தினர் கடவுள் முருகனை வழிபடும் விதமாக தைப்பூசத்தைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் பாத ஊர்வலம், காவடி, இசை மீண்டும் இடம்பெற்றுள்ளது.
அதேபோல் இன்று சீனர்கள் சீனப் புத்தாண்டின் 15 வது மற்றும் கடைசி நாளான சாப் கோ மெய் கொண்டாடுகின்றனர்” என்றார் திரு லீ.