தமிழ்ப் பண்பாடு குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்குத் தமிழ்மொழி கற்றல் முதன்மையானதென நம்பும் திருமதி சுமதி, 45, சிறு வயதிலிருந்தே மாணவர்களிடம் தமிழ் மொழி ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கியேட் ஹாங் பாலர் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.
இத்துறையில் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அவர், தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியில் பேசாததை ஒரு பெரிய குறையாகக் கருதுகிறார்.
அந்த நிலையை சரிசெய்யும் முயற்சியில் வெவ்வேறு பின்னணியிலிருந்து வருகின்ற மாணவர்களிடையே தமிழ் மொழி ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் பல சுவாரசிய ஏற்பாடுகளைப் பாடங்களில் அவர் செயல்படுத்துகிறார்.
வெவ்வேறு நிலைகளில் தமிழ் மொழி ஆற்றலுள்ள மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்க, மூன்று நிலைகள் கொண்ட விளையாட்டுகள், நடவடிக்கைகளை தமது வகுப்புகளில் திருமதி சுமதி நடத்துகிறார்.
“எண்களைக் கற்றுக்கொள்ள எளிதான நிலை, கடினமான நிலை, ஆகக் கடினமான நிலை என மூன்று நிலைகளில் நடவடிக்கை களை நடத்துவேன்.
“தமிழில் பேசாத மாணவர்கள் சுலபமான நிலையை தாண்டும் பட்சத்தில் மற்ற மாணவர்களைப்போல் அடுத்த நிலைகளுக்கு விரைவில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில் சீக்கிரம் தமிழ்ச் சொற்களை கற்றுக்கொள்வார்கள்.
“இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தமிழ் மொழியை விரும்பிக் கற்க மாணவர்களை உற்சாகப்படுத்துவேன்,” என்ற திருமதி சுமதி, தாய்மொழிக்கான உன்னத விருது பிரிவில் ‘தகுதி’ (மெரிட்) விருதைப் பெற்றதில் மிகவும் பெருமை அடைவதாகவும் இதுபோன்ற விருதுகள் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்ய ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.