எத்தனை உடைகள், பொருட்கள் வீட்டில் இருந்தாலும் பண்டிகையின்போது புதிய ஆடைகள், புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் என்று எல்லாம் புதிதாக வாங்க வேண்டும் என்பது எல்லாருடைய விருப்பமும். அதேபோல் பண்டிகைக் காலத்தில் அதிக அளவிலான பல வகையான உணவுப் பொருட்களைத் தயார்செய்வார்கள் அல்லது வாங்கி வைப்பார்கள்.
இந்தப் போக்குடையவர்களிடம் வீண் விரயத்தைத் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்துவருகிறார் 34 வயது தொழில்முனைவர் வீரப்பன் சுவாமி நாதன்.
உபயோகிக்கக்கூடிய நல்ல நிலையில் இருக்கும் பொருட்களைத் தூக்கி எறியாமல், அவற்றைப் பயன்படுத்துவதால் நன்மை உண்டு என்று கூறும் வீரப்பன், சற்று பழுதான வீட்டு உபயோகப் பொருட்களைச் சீர்செய்து பயன்படுத்துவதற்குக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
‘தி மேகர் மூவ்மண்ட்’, ‘ரிப்பேர் கோபிதியாம்’ போன்ற இயக்கங்களைத் தொடங்கி அவற்றின் மூலம் சிங்கப்பூரின் மறுபயனீட்டு முயற்சியை மேம்படுத்த கடப்பாடு கொண்டுள்ளார் அவர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி அவர் எடுத்துவரும் முயற்சிகளுக்குச் சமூகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.
“நாம் வாழும் இந்த உலகத்தைப் பாதுகாப்பது நமது கடமை. பருவநிலை மாற்றம் உலகைப் பாதித்து வருவதை இன்னும் சிலர் உணராமல் உள்ளனர். அந்தப் போக்கு மாறவேண்டும். நமக்கு ஓர் உலகம் தான் உள்ளது. பொருளியல் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அளவற்ற முறையில் இயற்கை வளங்களை நம் சுயநலத்துக்காகப் பயன்படுத்த நினைக்கக்கூடாது,” என்று கூறினார் வீரப்பன்.
‘சஸ்டைனபல் லிவிங் லேப்’ எனும் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான வீரப்பன், வளர்ச்சியடைந்த நாடான சிங்கப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியில் பின் தங்கியுள்ளதாக எண்ணுகிறார்.
“நம்மைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளான ஆஸ்திரேலியா, தைவான், ஜப்பான், நியூசிலாந்து முதலிய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறியீட்டில் 70ஐ தாண்டியுள்ளன. ஆனால் சிங்கப்பூரின் குறியீடு 64. நாம் இன்னும் சில முயற்சிகளை முடுக்கவேண்டும்,” என்றார் அவர்.
“நகரங்கள் அடிப்படையில் பார்த்தால் பாலி, சீபு, தமிழ் நாடு, சுரபாயா முதலியவை ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளுக்குத் தடைவிதித்துள்ளன. அவற்றிலிருந்து நாம் பாடம் கற்கலாம்,” என்றும் வீரப்பன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் மக்களிடையே உணவுச் சிக்கனப் பழக்கத்தையும் அவர் ஊக்கப்படுத்துகிறார்.
“வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் பெரும்பாலானோர் வசிக்கிறோம். வீட்டிலேயே குப்பை போடுவதற்கான வசதி இருப்பதால் தூக்கி எறியவேண்டியவற்றை அவ்வப்போது நாம் வீசிவிடுகிறோம்.
“எவ்வளவு குப்பை சேர்கிறது என்பது நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது,” என்று கூறிய வீரப்பன், சிங்கப்பூரில் தூக்கி எறியப்படும் உணவின் அளவு மிக அதிகம் என்றார்.
“வீட்டிற்கு விருந்தினர்களை அழைத்து உணவு பரிமாறும்போது உணவு பற்றாமல் போய்விடக்கூடாது என்ற நோக்கத்தில் அளவுக்கதிகமாக உணவைத் தயாரிப்பது இயல்பு,” என்றார் வீரப்பன்.
அப்படிப்பட்ட போக்கு இருக்கக்கூடாது என்பது அவரது நிலைப்பாடு.
வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் உணவு தயாரிப்போர் அளவைக் கவனத்தில் கொள்வது நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.
நீடித்து நிலைத்திருக்கும் தன்மை, சமூக ஒற்றுமையை உருவாக்குதல், சமூக நிறுவனம் என பல சமுதாய முயற்சிகளில் உள்ளூரில் தடம்பதித்த இந்த நிறுவனம் வெளிநாடுகளுக்கும் தனது திட்டங்களை எடுத்துச் சென்றுள்ளது.
இயந்திரப் பொறியியலாளரான வீரப்பன், தொழில்நுட்பத்தைக் கொண்டு நிறைய புத்தாக்க முயற்சிகளிலும் இறங்கியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவை 13 முதல் 18 வயது மாணவர்களுக்குக் கற்றுத் தரும் பாடத்திட்டத்தை வீரப்பனின் ‘சஸ்டைனபல் லிவிங் லேப்’ நிறுவனம் உருவாக்கியுள்ளது.
அந்தப் பாடத்திட்டம் தென்கொரியா, போலந்து, இந்தியா போன்ற நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய உயர்நிலைக் கல்வி வாரியத்துடன் ‘சஸ்டைனபல் லிவிங் லேப்’ இணைந்து செயல்பட்டு இந்த ஆண்டு கிட்டத்தட்ட 380 இந்தியப் பள்ளிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தைக் கொடுத்துள்ளது.
“சஸ்டைனபல் லிவிங் லேப் நிறுவனத்தைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்கள் இந்தியாவிலுள்ள பள்ளி ஆசிரியர்களுக்கிடையே செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடத்தை கற்பித்தல், கற்றல் முறைகளைப் பகிர்வார்கள்.
“நவீன தொழில்நுட்ப உலகத்திற்குத் தயாராவதுடன் நீடித்துநிலைத்திருக்கும் மேம்பாட்டு இலக்குகளையும் மாணவர்கள் அறிந்துகொள்வார்கள். மின்னிலக்கப் பொருளாதாரம் அதிகரித்து வரும் உலகில் இவர்கள் பங்கேற்கலாம்,” என்றார் திரு வீரப்பன்.
தற்போது 7, 8ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் இந்த கல்வித் திட்டம் கூடிய விரைவில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார் அவர்.
“இந்தியாவில் நிச்சயமாக நமது முயற்சிகள் தீவிரப்படுத்தபடும். விவசாயத்திற்கு உதவும் செயற்கை நுண்ணறிவு முயற்சிகளை ஆராய்ந்து வருகிறோம்.
“தொழில்–நுட்–பத்–தைக் கொண்டு விளைச்–சலை அதி–க–ரிக்–க–லாம், இந்த துறையை மேம்–ப–டுத்–த–லாம்,” என்–றார் திரு வீரப்–பன்.