அழகுராணியாவோம், அனைத்துலகப் போட்டிகளில் கலந்துகொள்வோம் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை 24 வயது மோகனாபிரபா நினைத்திருக்கவில்லை.
குடும்பத்தின் ஆதரவுடன் இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது என்ற அவர், அழகுராணியாக தாம் தேர்வு பெற்ற அந்தத் தருணத்தை நெகிழ்வுடன் மீண்டும் அசை போட்டார்.
“ஸூக்கில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற இறுதிச்சுற்றுக்கு அப்பாவும் தம்பியும் வந்திருந்தார்கள். நிகழ்ச்சி முழுவதும் நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்கள். வெற்றியாளராக என் பெயர் அறிவிக்கப்பட்டபோது, என் கண்கள் அப்பாவைத் தேடின.
“என் தம்பியின் முதுகில் வேகமாகத் தட்டிய அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அப்பா இத்தனை உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததேயில்லை. நான் வெற்றிபெற்றதைவிட, இதில் அப்பா அடைந்த ஆனந்தம்தான் எனக்கு மிகப் பெரிய பரிசாகவும் மிகுந்த சந்தோஷமாகவும் இருந்தது,” என்றார் மோகனாபிரபா.
சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம், இன சமத்துவம், கலாசார பன்முகத்தன்மை ஆகியவற்றை வளர்ப்பதை இலக்காகக் கொண்ட மோகனாபிரபா, இந்தப் போட்டியில் எவருக்கும் தனிச் சலுகை இருக்கவில்லை என்றார்.
நமது நம்பிக்கையை நோக்கி உழைக்கவும், அதைவெளிப்படுத்த வும் பாதுகாப்பான தளமாக இந்தப் போட்டி இருந்தது என்றார் அவர்.
1.75 மீட்டர் உயரம், மெல்லிய உடல்வாகு, துருதுருப்பான கண்கள் என பார்ப்பவர்களைப் பரவசமாக்கும் மோகனாபிரபா மாடலிங்கில் கலந்துகொள்ளும் ஆர்வம் உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் ஏற்பட்டது. ஆனால் அப்பா வீரையா தாமரைச் செல்வம், அவரை அதற்கு அனுமதிக்கவில்லை. படிப்புதான் முக்கியம். பட்டம் வாங்கிய பிறகுதான் மற்றதெல்லாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
பலதுறை தொழிற்கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாடலிங் நிறுவனம் ஒன்றில் சேர்ந்த அவர், நியூபேப்பரின் ‘புதுமுகம்’ போட்டியில் பங்கேற்றார். அதில் இறுதிச் சுற்றுவரை வந்தார்.
தொடர்ந்து மிஸ் சிங்கப்பூர் அழகுராணிப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு அந்நிறுவனத்தின் தலைவர் வாட்சன் டான் கூறியபோது, ஓராண்டு இடைவெளி விட்டு தன்னை மேம்படுத்திக்கொள்ள நினைத்திருந்த மோகனாபிரபாவுக்கு முதலில் தயக்க மாகவே இருந்தது. ஆனால் போட்டியில் சேர்ந்த பின்னர், அவருக்குள் இருந்த ஆர்வம் மீண்டும் சுடர்விட்டது.
முதல்முறை வெற்றிபெறாததற்கான காரணங்களை ஆராய்ந்தார். கேள்வி-பதில் அங்கத்தில் கோட்டைவிட்டதால், பத்திரிகை படிப்பதை வழமையாக்கிக்கொண்டார். நாட்டு நடப்புகளில் அக்கறை செலுத்துவது அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட அவருக்கு உதவு கிறது.
மேடைத் தோற்றமும் ‘கேட்வாக்’ ஒய்யார நடையும் அவரின் பலம்.
அதில் மேலும் தேர்ச்சி பெறவும் உடல்வாகை எடுப்பாக்கவும் உடற்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். உடற்பயிற்சிக்கூடப் பயிற்சியாளரான தம்பி கீர்த்தன்தான் இதில் அவருக்கு வழிகாட்டி. மோகனாபிரபா சிரத்தையுடன் பயிற்சியில் ஈடுபடுவார் என்று அவர் நினைக்கவில்லை. ஆனால், அவரது கடப்பாட்டையும் உழைப்பையும் கண்ட அவரது தம்பிக்கு அவர் வெற்றிபெற்றதில் பெருமகிழ்ச்சி.
மோகனாபிரபாவுக்கு எதுவும் எளிதாகக் கிடைப்ப தில்லை. எதையுமே போராடி, சிரமப்பட்டுதான் அவர் பெற்றிருக்கிறார்.
உயர்நிலைப் படிப்பை முடித்துவிட்டு நன்யாங் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ரசாயனவியல் துறையில் சேர்ந்து ஓராண்டு படித்த அவர், அப்படிப்பு தனக்கு ஒத்து வராது என்பதை உணர்ந்து மறு ஆண்டு ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியில் உயிர்மருத்துவ அறிவியல் படிப்பைத் தொடர்ந்தார்.
பின்னர் பிஎஸ்பி அகாடமியில் பட்டக்கல்வியை மேற்கொண்டார். ஒரு பாடத்திட்டத்தை மீண்டும் படித்துத் தேர்வு எழுத வேண்டி இருந்ததால், அந்த ஓராண்டுக் கல்வியை முடிக்க ஈராண்டு ஆனது. அழகுராணிப் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் பட்டம் பெற்றார்.
தோல்வி என்பது முடிவல்ல என்பதைப் புரிந்துகொண்டுள்ள மோகனாபிரபா, இலக்கை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
“மாடலிங்கும் மருத்துவத் தொழில்நுட்பமும் எனது விருப்பங்கள். இரண்டிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றிபெற்றுள்ளேன்,” என மகிழ்ச்சியுடன் கூறிய அவர், ஆடை அலங்காரத் துறையில் பணிபுரிய விரும்புகிறார்.