அதிகரித்துவரும் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களால் சுகாதார, ஒன்றுகூடல் மற்றும் பாதுகாப்பு இடைவெளி தொடர்பிலான ஆலோசனை கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
சமய நிகழ்வுகள், கூட்டங்கள் ரத்து செய்யப்படவேண்டும் என்றாலும் அவசியமான சடங்குகள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்காக வழிபாட்டுத் தலங்கள் திறந்திருக்கலாம் என அந்த ஆலோசனை குறிப்பிட்டது.
இந்த அறிவுறுத்தலுக்கு இணங்கும் வகையில், தனது ஆலயங்களில் புதிய விதிமுறைகளைச் செயல்படுத்தியதுடன் இது தொடர்பான ஆலோசனை ஒன்றையும் சிங்கப்பூரிலுள்ள மற்ற ஆலயங்களுக்கும் இந்து அறக்கட்டளை வாரியம் அனுப்பியுள்ளது.
அந்த ஆலோசனையின்படி ஆலயங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றன.
வாரியத்தின்கீழ் இயங்கும் நான்கு ஆலயங்களில் அன்றாட பூஜைகள் மட்டும் தொடரும் என்றும் பக்தர்கள் வீட்டிலேயே இருந்து வழிபாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்வதாகவும் நேற்று முன்தினம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் வாரியம் குறிப்பிட்டது.
ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்குள் இனி பக்தர்கள் நுழைய முடியாது.
அர்ச்சனைகளும் பிரசாத விநியோகமும் நிறுத்தப்படும். இருந்தபோதும், பக்தர்கள் ஆலயத்திற்கு வெளியிலிருந்து தரிசனம் செய்யலாம் என்றும் குறிப்பிட்ட வாரியம், பக்தர்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியைக் கட்டிக்காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சின் வழிமுறைகள், மக்கள் பெருவாரியாக கூடும் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என்றும் ஆலயங்கள் இதற்கு விதிவிலக்கு அல்ல என்றும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி த.ராஜசேகர் தமிழ் முரசிடம் நேற்று தெரிவித்தார்.
“பெரும்பாலானோர் அரசாங்க வழிமுறைகளைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்கின்றனர். ஆயினும், ஒருசிலர் ஆலய ஊழியர்களிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்,” என்றார் அவர்.
குறைந்தது ஒரு மீட்டர் பாதுகாப்பான இடைவெளியை அனைவரும் பின்பற்றினால்தான் அது பயன் தரும் எனக் கூறிய திரு ராஜசேகர், நடைமுறையில் இதனை எல்லாரும் மதித்து நடப்பதில்லை என்பதைச் சுட்டினார். ஒரே நேரத்தில் பத்து பக்தர்களை ஆலயத்திற்குள் அனுமதிக்கும் முறையைச் செயல்படுத்த சில ஆலயங்கள் முயன்றபோதும் அதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
“பக்தர்கள் தாமதமாக வெளியேறுவது, ஆலயத்திற்கு வெளியில் பக்தர்கள் கூட்டமாக காத்திருப்பது, ஆலயத்திற்குள் பாதுகாப்பான இடைவெளியைச் செயல்படுத்த முடியாமல் போனது எனப் பல்வேறு தேவையற்ற சிரமங்கள் ஏற்பட்டன,” என்றார் திரு ராஜசேகர்.
சில ஆலயங்களின் நுழைவாயிலில் இருந்து பக்தர்கள் சந்நிதான மூலவரைத் தரிசித்து வழிபடலாம். வேறு சில ஆலயங்களில் உற்சவ மூர்த்திகள் நுழைவாயிலுக்கு அருகே கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு ஒவ்வோர் ஆலயமும் தனக்கு ஏற்ற அணுகுமுறையைக் கையாளும் என திரு ராஜசேகர் கூறினார்.
ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள உபயங்களுக்காகவும் சமயச் சடங்குகளுக்காவும் பக்தர்கள் பத்து பேருக்கும் குறைவான எண்ணிக்கையில் செல்லலாம். இத்தகைய நிகழ்வுகளுக்கு வருபவர்கள் குடும்பமாக வருவதால் இந்தக் கட்டுப்பாட்டை முன் நிபந்தனையாக விதிப்பது எளிது என்றார் திரு ராஜசேகர். அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய முன்பதிவுகளை ஏற்க சில ஆலயங்கள் மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.
திருமணங்களுக்கும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளுக்கும் இந்த வழிமுறைகள் பொருந்தும். ஸ்ரீ சிவன் ஆலயத்தின் ஆத்ம சாந்தி வழிபாட்டுக்கு வரிசை முறை இருக்கும் என திரு ராஜசேகர் குறிப்பிட்டார். அதாவது, வழிபாட்டிற்கு ஒரே நேரத்தில் பத்து பக்தர்கள் ஆலயத்திற்குள் நுழையலாம் என்றார் அவர்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆலோசனை அறிவிப்புகள், கிருமித்தொற்று நிலவரத்திற்கும் சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கும் ஏற்ப மாறும் என்றும் திரு ராஜசேகர் சுட்டினார். பக்தர்களைப் புண்படுத்துவது வாரியத்தின் நோக்கமல்ல எனத் தெரிவித்த அவர், தற்போதைய நிலவரம் முற்றிலும் புதிதானது என்பதை அவர்கள் நினைவில் கொண்டு புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
“குறிப்பாக, முதியோர் வருவதை முற்றிலும் தவிர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று அவர் கூறினார்.
முன் குறிப்பிடப்பட்ட நான்கு ஆலயங்களின் அன்றாட பூஜைகளை பக்தர்கள் www.heb.org.sg என்ற இணையத்தளம் வழியாக காணலாம் என்று வாரியம் கூறி உள்ளது.
இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம் என்றாலும் அதை ஏற்க பக்தர்களுக்கு சிரமமாக இருக்கும் என்று வங்கித் துறை ஊழியர் தீபா சுரேந்திரன், 31, தெரிவித்தார்.
“நமது பண்பாட்டில் சமூக ஒன்றுகூடல் முக்கிய அங்கம் வகிப்பதால் கிருமிப் பரவல் விரைவில் நீங்கி வழக்கம்போல மக்கள் பெருவாரியாக தரிசிக்கவேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் அவர்.