சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்றாக, வரும் 8ஆம் தேதியிலிருந்து மே 4ஆம் தேதி வரை சிங்கப்பூரில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்படவிருக்கின்றன. மாணவர்கள் வீட்டிலிருந்தே படிப்பார்கள்.
வீட்டிலிருந்தே கல்வி கற்பதால், சிக்கல்களும் இடையூறுகளும் இருந்தாலும் தற்போதைய சூழலில் சரியான முடிவு என தமிழ் முரசிடம் பேசிய பல பெற்றோர் கருத்துரைத்தனர்.
பிள்ளைகளின் பாதுகாப்பே தலையாயது என்றும் குறிப்பாக பள்ளிகள் மூடப்படுவதால் பலரும் நெருக்கமாக பயணிக்கும் பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பிள்ளைகள் பயன்படுத்தத் தேவையில்லை என்றார் இல்லத்தரசியான 41 வயது திருமதி சித்ரா மாதவன்.
அவருடைய மூத்த மகள் காருண்யா மாதவன், 16, ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் ஐபி எனும் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் 5ஆம் ஆண்டில் பயில்கிறார். இளைய மகன் நிதேஷ் மாதவன், 12, சிங்குவா தொடக்கப்பள்ளியில் பயில்கிறார். அவர் இவ்வாண்டு பிஎஸ்எல்இ தேர்வு எழுதவிருக்கிறார்.
இணையம் வழி ஆசிரியர்கள் வீட்டுப்பாடங்களையும் வகுப்புகளையும் நடத்தினாலும் வகுப்பில் ஆசிரியர் முன்னிலையில் பாடங்களைக் கற்று உடனுக்குடன் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வதுபோல இப்போது இருக்காது என்பது திருமதி சித்ராவின் கருத்து.
“உயர்நிலைப் பள்ளிகளில் இணைவதற்கான நேரடி பள்ளிகள் சேர்க்கை (DSA) நடவடிக்கைகள் பொதுவாக ஏப்ரல் மாதத்தில்தான் நடைபெறும். ஆனால் கொவிட்-19 தொற்றால் அது தற்போது நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் நிதேஷ் கணிதப் பாடத்தில் சிறந்து விளங்குவதால், அவர் பங்கேற்கவிருந்த பல சிறப்பு கணிதப் (ஒலிம்பியாட்) போட்டிகளும் ரத்து ஆகிவிட்டன.
“அரையாண்டுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. மாணவர்கள் பிஎஸ்எல்இ தேர்வு எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் கணிக்க அரையாண்டுத் தேர்வுகள் உதவும்,” என்று விவரித்தார் திருமதி சித்ரா.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தமது கணவரும் வீட்டில் இருந்து பணியாற்றவிருப்பதால், தமக்கு வேலைகள் அதிகமாகப் போகிறது என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அவர்.
கணினி பொறியியலில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் திருமதி சித்ரா, கொவிட்-19 நிலவரத்தால் தாம் நடத்தி வந்த பகுதி நேர துணைப்பாட வகுப்புகளையும் ரத்து செய்துவிட்டார்.
“பிள்ளைகளின் உடல்நலன்தான் மிகவும் முக்கியம். அதிக கூட்ட நெரிசல் மிக்க பேருந்துகள், ரயில்களை எடுத்து பிள்ளைகள் பள்ளிக்கு அன்றாடம் செல்வதைவிட வீட்டிலேயே இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம். குடும்பமாக வீட்டிலேயே இருந்து நேரம் செலவிக்க முடியும். இது கண்டிப்பாக ஒரு புதிய அனுபவமாக இருக்கும். கொவிட்-19 தொற்றை ஒழிக்க மிகவும் தேவையான ஒரு நடவடிக்கை,” என்றார் திருமதி சித்ரா.
முக்கிய தேர்வுகள் குறித்தே கவலை
இதே கருத்தைப் பகிர்ந்துகொண்டார், அலுவலக மேலாளராக பணிபுரியும் 39 வயது திருமதி சௌபாக்கியவதி தனபாலு.
அரசாங்கத்தின்மீதும் கல்வியமைச்சின்மீதும் நம்பிக்கை இருந்தபோதும் கிருமித்தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் தமது மூன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது அவருக்கு சற்று பயமாகவே இருந்தது.
இவரின் மூத்த மகள் திவாஷினி கிரைஸ்ட்சர்ச் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை 4ல் பயில்கிறார், பிரித்திகா உட்லண்ட்ஸ உயர்நிலைப் பள்ளி உயர்நிலை 2ல் பயில்கிறார், மூன்றாவது மகள் யாஷிதா சிவனேசன் ஃபூச்சூன் தொடக்கநிலை 6ல் பயில்கிறார்.
இரு மகள்கள் முக்கிய தேர்வுகளை எழுதுகிறார்கள் என்றாலும் அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்து படிப்பதையே திருமதி சௌபாக்கியவதி விரும்புகிறார்.
“முக்கிய தேர்வுகள் என்பதால் அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிரமமாகத்தான் இருக்கும். என்றாலும் உடல்நலன்தான் மிக முக்கியம். ஆரோக்கியமாக இருந்தால் கடுமையாகப் படிக்கலாம்,” என்றார் அவர்.
மூத்த அலுவலக நிர்வாகியாகப் பணிபுரியும் அவரும் அடுத்த வாரத்திலிருந்து வீட்டிலிருந்து வேலை செய்யப்போகிறார்.
சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரியான அவரது கணவர் திரு சிவநேசன் வேலைக்குச் செல்ல வேண்டும். எனவே தாம் பிள்ளைகளுடன் உட்கார்ந்து வேலை செய்யப் போவதாகக்கூறிய அவர், தமது பிள்ளைகளின் வகுப்பாசிரியர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருப்பதாகக் கூறினார்.
தயார்நிலையில் இருந்த பள்ளிகள்
கல்வியமைச்சின் படிப்படியான அணுகுமுறையால் புதிய அறிவிப்புகளால் பதற்றம் அடையவில்லை எனக் கூறினார் 40 வயது யசோதா ரகுநாதன்.
அவரது இரு பிள்ளைகள் பயிலும் ஃபூச்சூன் தொடக்கப்பள்ளி கடந்தாண்டிலிருந்தே வீட்டிலிருந்து கற்கும் முறையை ஓரளவு செயல்படுத்தி வந்தது இப்போது முழுநேரமும் வீட்டுச் சூழலில் படிப்பதற்கு பிள்ளைகள் தயாராக எளிதாக இருக்கிறது என அவர் கூறினார்.
10 வயது சக்திவேலும் 8 வயது சம்யுக்தாவும் வீட்டிலிருந்து கற்பதற்கு பக்க பலமாக இருக்க முடிவு செய்த திருமதி யசோதா துணைப்பாட நிலைய ஆசிரியர் பணியை தற்போது நிறுத்தியுள்ளார். புகைப்படக் கலைஞராக பணிபுரியும் அவர் கணவர் திரு நரேந்திரன் வேலைக்கு செல்லவேண்டும். கணவர், பிள்ளைகள் எல்லாரும் வெளியில் செல்வது யசோதாவுக்கு கவலையாக இருந்தது. இப்போது பிள்ளைகள் வீட்டிலேயே இருக்கப்போவது அவருக்கு நிம்மதியளிக்கிறது.
கடந்த 2003ல் ஏற்பட்ட சார்ஸ் பரவலுக்கு பிறகு, வீட்டிலேயே பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வி அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
வசதி குறைந்த மாணவர்களும் கணினி களைப் பெற வழி செய்யப்பட்டுள்ளது.
இணையம் வழி வகுப்பு, பாடங்கள் போன்றவற்றுடன் ஆசிரியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
வீட்டிலிருந்து கற்றல் அடிக்கடி சோதிக்கப்பட்டும் வந்துள்ளதால் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாது என்பதில் நம்பிக்கையுடன் உள்ளனர். வீட்டில் அவர்கள் பொறுப்புடன் படிக்க வேண்டும் என்பதே சில பெற்றோரின் கவலை. ஆனாலும் பிள்ளைகள் வீட்டில் இருப்பதில் அவர்களுக்கு நிம்மதி.
படிப்புடன் நல்ல பழக்கங்களையும் சொல்லித் தரலாம்
பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் நேரத்துடன் எழுவது, உணவு உண்பது, விளையாடுவது என்ற கட்டுக்கோப்பை தமது மகளுக்குத் தொடர்ந்து வலியுறுத்தும் நூலகரான யுனிஸ் அந்தோனி, 32, இது மிக முக்கியம் எனக் கருதுகிறார்கள்.
பெற்றோரும் தம்முடன் வசிப்பதால் கிருமிப்பரவல் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ள திருமதி யுனிஸ், இந்த ஏற்பாடு அனைவருக்கும் நல்லதே என்றார்.
இந்த நேரத்தில் பாலர் பள்ளி செல்லும் லியாவுக்கு சின்ன சின்ன வீட்டுவேலைகளைச் செய்யச் சொல்லி பழக்கப்படுத்த எண்ணம் கொண்டுள்ள அவர் பிள்ளைகளுக்கு சுகாதாரமான நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து அதை அவர்களது வாழ்க்கை முறையாக்க இது நல்ல தருணம் என்றார்.
சுத்தமாக இருப்பது பற்றியும் மற்றவர்களின் சுத்தத்தைப் பேணுவது பற்றியும் அவர் மகளுக்கு சொல்லித் தருகிறார். திருமதி யுனிசுக்கு ரியா ஆறு மாத பெண் குழந்தை உள்ளது.
அவரது கணவர் ராஜகுமரன் இளமாறன், 33, கடைத்தொகுதிக் கட்டட மேலாளராகப் பணிபுரிவதால் அவருக்கு வீட்டில் வேலை செய்யும் ஏற்பாடு இல்லை. அதனால் பிள்ளைகளைக் கவனிக்க அவருக்கு நேரம் இருக்காது என்றார் யுனிஸ்.
கிருமித்தொற்றை தவிர்க்க சிறந்த வழி
மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான 39 வயது டாக்டர் மைத்திலி பாண்டி, குடும்ப மருத்துவராகப் பணியாற்றுகிறார். அவர் கணவர் வங்கித் துறையில் பணியாற்றுகிறார்.
அத்தியாவசிய சேவை வழங்கும் துறையில் பணிபுரியும் இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
“வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு ஒரு மாத காலம் பிள்ளைகள் வீட்டிலிருந்து படிப்பை மேற்பார்வை செய்வது சற்று கடினம்தான். பிள்ளைகள் சுய ஊக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் படிப்பது அவசியம். அவர்களுக்குத் தேவையான கணினி, ஐபேட் (iPad) வசதிகளையும் ஏற்பாடு செய்யவேண்டும்,” என்ற மைதிலி எனினும் இந்தக் கட்டுப்பாடு அவசியம் எனக் கருதுகிறார்.
எந்தவித அறிகுறியும் இல்லாத ஒருவருக்குக்கூட கொவிட்-19 கிருமித்தொற்று இருக்கலாம் என்றும் பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள், துப்புரவாளர்கள், ஆசிரியர்கள் போன்று பல பேருடன் தொடர்பை குறைத்துகொள்ள இந்த முயற்சி வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார் மருத்துவரான திருமதி மைதிலி.
பெற்றோர், பிள்ளைகள் இருவரையும் பாதுகாக்க வேண்டும்
பள்ளிகள் மூடப்படுவது குறித்த அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே வாரத்திற்கு ஓரிரு நாட்கள் பாலர் பள்ளியில் பயிலும் தமது மகன் ரேஷ்வனை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்றார் செயற்பாட்டு நிர்வாகியாகப் பணிபுரியும் ரவிநாத் குஹா, 40.
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் தமது மனைவி, மனைவியின் பெற்றோர் அல்லது பணிப்பெண் தமது இரு மகன்களுக்கும் பாடம் கற்றுக் கொடுப்பார்கள் என்றார் அவர்.
அவரது நிறுவனம் தளவாடங்கள் தொடர்பில் அத்தியாவசிய சேவை வழங்கி வருவதால் அவர் அலுவலகம் செல்ல வேண்டிய நிலைமை. இருப்பினும் வீட்டுக்கு வந்தவுடன் நேராக குளியலறைக்குச் சென்று குளித்துவிடுவார்.
சிறு பிள்ளைகள் இருப்பதால் நல்ல தனிநபர் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது மிக முக்கியம் என்ற அவர், தாமும் தமது மனைவியும் தங்களின் பெற்றோரின் வீடுகளுக்குச் செல்வதையும் அவர்களின் வருகையையும் தற்காலிகமாக நிறுத்தி யுள்ளார். மூத்த குடிமக்களின் சுகாதாரத்தைக் கட்டிக்காப்பதும் அனைவரது கடமை என்றார் அவர்.
மகனின் படிப்பை நேரில் காண வசதி
தொழில்முனைவரான 42 வயது திரு பிரகாஷ், இனிமேல்தான் தம் இரு பிள்ளைகளின் கல்விக்காக கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது என்றார்.
அவரின் பிள்ளைகளான, ஆதித்யா செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப்பள்ளி முதல் ஆண்டிலும் அஞ்சுனா ‘திங் கிட்ஸ்’ பாலர் பள்ளியில் பாலர் வகுப்பு ஒன்றிலும் இந்த ஆண்டில்தான் சேர்த்தார்.
இருவருக்கும் முதல் அனுபவம் என்பதால் கடந்த இருமாதங்களாக அவரும் அவரது மனைவியும் அவர்களுடன் கூடுதல் நேரத்தைச் செலவிட்டனர்.
“எங்களுக்கு அதிக அலைச்சலாக இருந்தது. இப்போது மகன் வீட்டிலிருந்து படிக்கப் போவது வேறுவிதமான பொறுப்பு,” என்றார் அவர். மகளின் பாலர் பள்ளி இதுவரையில் மூடுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.
திரு பிரகாஷும் சமூக அமைப்பு ஒன்றில் வர்த்தகத் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரியும் அவரது மனைவி சுபாஷினி பாலகிருஷ்ணனும் வீட்டிலிருந்து பணிபுரிகின்றனர்.
அதனால் பிள்ளைகள் படிப்பதை அருகிலிருந்து பார்ப்பதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
“நானும், எனது நண்பர்களும் எங்களது பிள்ளைகளுக்கு நேரலைக் காணொளிகள் வாயிலாக ஓவிய வகுப்புகள், உடற்பயிற்சி போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
“என்றாலும் வீட்டிலேயே பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு அவர்கள் கற்பதை கவனிக்கும் வாய்ப்பு அரிது,” என்ற கூறிய திரு பிரகாஷ், அவர்களது கற்றல் பாணியைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு மேலும் உதவி செய்ய ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.
ஒரு மாதம் பள்ளிகள் மூடல்
கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, வரும் 8ஆம் தேதியிலிருந்து மே 4ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகின்றன.
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.
தேசிய அளவிலான தேர்வுகள் முக்கியமானவை என்பதால் அவை தொடர்ந்து நடத்தப்படும்.
ஜூன் 1, 2ஆம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ள வாய்மொழி, தாய்மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறும்.
பாலர் பள்ளிகளும் மாணவர் பராமரிப்பு நிலையங்களும் மூடப்படும். எனினும் வேலைக்குப் போக வேண்டிய நிலையிலுள்ள, வேறு பராமரிப்பாளர்களைத் தேட முடியாத பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டும் சேவைகள் வழங்கப்படும்.
தனியார் கல்வி நிலையங்களும் மாணவர்கள் வீட்டில் இருந்து கற்க வகைசெய்ய வேண்டும் அல்லது வகுப்புகளைத் தற்காலிகமாக ரத்து செய்யவேண்டும்.
தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் முழுக்க முழுக்க இணையவழிப் பாடங்களுக்கு மாறும்.
இப்போதைய அறிவிப்பின்படி மே 5ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். ஆயினும், கல்வி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கொரோனா கிருமித்தொற்று நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து, இந்த நடவடிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா என்பதை முடிவுசெய்யும்.
நாளை பள்ளிகளில் இந்த நடைமுறைகள் குறித்த முழு விவரங்களை மாணவர்களும் பெற்றோரும் பெறலாம்.
கல்வி முழுமையானதாக இருக்கவேண்டும் என்பதை நாம் அறிவோம். எளிதான அங்கமான பாடத்திட்டத்தை முடிப்பது மட்டும் கல்வியாகாது. அது ஒரு சமுதாயச் செயல்முறை, சமுதாயப் பயணம்.
- கல்வி அமைச்சர் ஓங் யி காங்