மலாயா இந்தியர்களுக்குள் பெரும் ஜனத்தொகையினர் தமிழர்கள். அவர்களின் வாழ்க்கை நிலை தாழ்ந்து கிடக்கிறது. அதன் காரணமாய் இந்திய சமூகத்தின் பலமும் கட்டுக்கோப்பும் சீர்குலைந்து கிடக்கின்றன. ஒரு சங்கிலியின் கரணைகள் எல்லாம் பலமாக இருந்தால்தான் அந்தச் சங்கிலி பலமுடையதாய் இருக்க முடியும். இந்தியச் சமூகம் என்ற சங்கிலியில் அதிக கரணைகளான தமிழர்கள் பலவீனமாய் இருப்பதால் இந்திய சமூகம் பலமற்ற சமூகமாய்க் கிடக்கிறது. பலவீனமான தமிழர்கள் ஒன்றுபட்டு ஐக்கியப்பட்டு பலம் பெற்றால் இந்தியச் சமூகம் பலம் பெறும்.
9.4.1953 தமிழ் முரசு தலையங்கத்தில் கோ. சாரங்கபாணி
அரிதான இயல்புகளைக் கொண்ட உலக நாடுகளில் சிங்கப்பூர் மிகவும் குறிப்பிடத்தக்கது. உலகில் இன்னமும் வழக்கில் இருந்துவரும் இரண்டு செம்மொழிகள்- அதாவது தமிழும் சீனமும்-முழு ஆட்சி மொழியாக இருந்துவரும் நாடு அநேகமாக சிங்கப்பூராகத்தான் இருக்க முடியும். இந்த நிலைக்கான ஆதாரத் தூண்களில் திரு சாரங்கபாணியும் ஒருவர்.
மயிலாடுதுறை அருகே உள்ள திருவாரூர் என்ற நகர்ப் பகுதியில் இருந்து சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் 21 வயதில் இங்கு வந்தவர்தான் திரு கோ சாரங்கபாணி. அப்போது இங்கு வந்த தமிழர்கள் பலரும் ஊருக்குத் திரும்பிச் செல்லவே விரும்பினார்கள். ஆனால் திரு சாரங்கபாணியின் சிந்தனை வேறுபட்டு இருந்தது.
திரு சாரங்கபாணி, தமிழர்களும் தமிழ் மொழியும் தென்கிழக்கு ஆசியாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்று தன் இளமைக் காலத்திலேயே விரும்பினார்.
மொழி மூலமாக பல இன, பல சமய தமிழர்களை ஒருங்கிணைத்து இதனைச் சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்ட அவர், இதற்காக 1935ல் தொடங்கியதுதான் தமிழ் முரசு செய்தித்தாள்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கம் மின்சாரத்தைக்கூட முழுமையாக அனுபவிக்க இயலாத ஒரு காலம். அப்போது அச்சுத் துறை முற்றிலும் வேறுவிதமாக இருந்தது.
தொடக்கத்தில் பெரும் சிரமத்துக்கு இடையில் வார செய்தித்தாளாக தொடங்கி பிறகு நாளிதழாக தமிழ் முரசு வெளிவந்து தமிழர்களையும் மொழியையும் நிலைநிறுத்த அரும் பாடுபட்டது.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதும் தமிழ் ஆட்சிமொழியாகவும் தமிழ்ப் புலமை மிக்கவர்கள் பலர் இங்கு வரவும் இங்கேயே தமிழ்ப் புலமை உருவாகவும் தமிழர்கள் குடியுரிமை பெறவும் தமிழ் முரசு பாடுபட்டது. நாட்டிற்கும் வீட்டிற்கும் சமூகத்திற்கும் மக்களுக்கும் பொறுப்புள்ள பணியை ஆற்றுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.
சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு, உலகின் ஆகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றாக 85வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது சாதனை. தமிழ்ச் செய்தித்தாட்கள் வரலாற்றில் இது ஒரு முக்கிய பதிவு. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது ஆகப்பழமையான நாளிதழின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் சிங்கப்பூருக்கும் இந்நாட்டுத் தமிழ் மக்களுக்கும் பெருமை.
சிங்கப்பூரில் தமிழும் தமிழ் முரசும் மேலும் 50 ஆண்டுகளுக்கும் அதற்கு அப்பாலும் அதிகாரபூர்வமானவையாக நீடித்து நிலைத்து இருக்கும் என்று சிங்கப்பூரின் 50வது சுதந்திர தின கொண்டாட்டத்திடன்போது அரசாங்கம் அறிவித்தது.
பிரதமர் திரு லீ, முரசின் சாதனைளைக் குறிப்பிட்டு அதன் சேவை தொடரும் என்று 85வது ஆண்டு வாழ்த்துச் செய்தியில் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் பெரிய பொறுப்பு தமிழர்களுக்கு குறிப்பாக இளையர்களுக்கு இருக்கிறது.
தமிழ் முரசின் முதல் பக்கத்தில் இடம்பெறும் கோ சாரங்கபாணி என்ற பெயர் இந்தப் பொறுப்பைத்தான் நாள்தோறும் நமக்கு நினைவூட்டுகிறது.