“என் பெயர் தமிழவேல், தமிழ் முரசில் பணிபுரிகிறேன், நீங்கள்தான் திரு தமிழ் முரசா?”
இப்படித்தான் தொடங்கியது தமிழ் முரசுடான உரையாடல்.
சமூக ஊடகங்களில் ‘தமிழ் முரசு’ எனும் பெயருடன் உலா வந்த அவர், ஏதோ லாபநோக்கிற்காக நம் நாளிதழின் பெயரைப் பயன்படுத்துகிறார் என்று அவரைத் தொடர்புகொண்டபோது, “என் பெயர் தமிழ் முரசு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். திரும்பவும் கேட்டபோது மீண்டும் உறுதியாகச் சொன்னார்.
உங்கள் பெயரின் காரணம் உங்களுக்குத் தெரியுமா என்றபோது, தாத்தா வாழ்ந்த சிங்கப்பூருக்கு வேலை தேடி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோதுதான் எனது பெயரின் சிறப்பையும், தாத்தாவின் பெருமைகளையும் தெரிந்துகொண்டேன் என்றார் 38 வயது திரு தமிழ் முரசு.
“13 வயது இருக்கும் என் பள்ளியில் படித்த சில வட இந்திய மாணவர்கள் என் பெயரைக் கேலி செய்தனர். எனக்கு கோபமும் அழுகையும் வந்தது. அப்பாவிடம் ஏன் எனக்கு இந்தப் பெயரை வைத்தீர்கள் என்று கேட்டேன். அப்போதுதான் தாத்தா திரு ராமுவைப் பற்றி அப்பா சொன்னார்.
தாத்தா சிறு வயதிலேயே சிங்கப்பூருக்கு வந்துவிட்டார். தமிழ் பற்றாளர். தமிழ் முரசின் நிறுவனர் தமிழவேள் கோ.சாரங்கபாணியுடன் (கோசா) நெருக்கமாக சமூகத் தொண்டு, நிகழ்வுகளில் ஈடுபட்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான, கம்யூனிச போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செயல்பட்டதற்காக அவரைப் பார்த்த இடத்தில் சுட உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. எப்படியோ இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் நிபந்தனையுடன் அரசு மன்னிப்புக் கிடைத்து, மனைவி, பிள்ளையுடன் சொந்த ஊரான மயிலாடுதுறைக்குத் திரும்பிவிட்டார். கே கே மருத்துவமனையில் பிறந்த என் அப்பா திரு விஸ்வநாதனுக்கு அப்போது ஐந்து வயது.
“மிகவும் நெருங்கிய நண்பன் என்று கோசாவைக் குறிப்பிடும் தாத்தா, கோசா பற்றியும் அவரது தமிழ் முரசு நாளிதழ் பற்றியும் அப்பாவிடம் அடிக்கடி பேசுவாராம். அதனால்தான் எனக்கு தமிழ் முரசு என்று அப்பா பெயர் வைத்திருக்கிறார்.
“ஊர் திரும்பிய தாத்தா, 40 வயதிலேயே மாரடைப்பால் இறந்துவிட அம்மாவையும் மூன்று தம்பிகளையும் கூட்டிக்கொண்டு 23 வயதில் அப்பா சென்னைக்கு வந்துவிட்டார். அதனால் தாத்தாவின் பூர்வீகம், வரலாறு குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
“இந்த 13 ஆண்டு காலத்தில் தாத்த வாழ்ந்த ஊரையும் அவரது நண்பர் வளர்த்த தமிழ் முரசையும் ஓரளவு தெரிந்துகொண்டேன்,” என்றார் தமிழ் முரசு.
“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் பெயரைக் கேட்கும் எவரும், ஒரு கணம் என்னை ஏறிட்டுப் பார்ப்பார்கள். புருவங்கள் உயரும், பிறகு புன்னகை மலரும். ‘நல்ல பெயர்’, ‘அருமையான பெயர்’ என்று பாராட்டுவார்கள்,” என்ற அவரிடம், தமிழவேல் என்ற பெயருக்காகவே நானும் பலரால் பாராட்டப்பட்டிருக்கிறேன்,” என்றதும் சிரித்தார்.
திரு தமிழ் முரசுவின் தாத்தா கோசாவுக்கு நெருங்கிய நண்பர் என்றால் எனது அப்பா தீவிர தொண்டர்.
1996ல் சிங்கப்பூருக்கு வந்த தமிழ் முரசின் சித்தப்பா திரு மயூரநாதன் குடியுரிமை பெற்றவர். அவரைப் பின்பற்றி பட்டப்படிப்பை முடித்ததும் 2005ல் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த தமிழ் முரசு, கடந்த 13 ஆண்டுகளாக எஸ் பாஸில், நிதித்துறையில் பணிபுரிகிறார். ஒரு அண்ணன், ஒரு தம்பி. மனைவியுடன் இங்கு வசிக்கிறார்.
“தமிழ் முரசு நாளிதழின் முகப்பில் சிவப்பு எழுத்துகளில் என் பெயரை எப்போது பார்த்தாலும் எனக்கு சொல்லவொணாத பெருமையும் உற்சாகமும் ஏற்படும். சிங்கப்பூரில் தமிழை அதிகாரத்துவ மொழியாக நிலைக்கச் செய்து, தமிழர்களின் சாதி வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபடுத்தியது தமிழ் முரசும் கோசாவும்தான்,” என்றவர் தமது வேரைத் தேடிய பயணத்தில் தீவிரமாக இறங்கி இருப்பதைக் குறிப்பிட்டார்.