கொவிட்-19 காரணமாக பொருளியல் பாதிப்பு தொடர்வதால் அரசாங்கம் ஏற்கெனவே நடப்புக்கு கொண்டு வந்துள்ள நான்கு வரவுசெலவுத் திட்டங்களில் இடம்பெற்ற ஆதரவுத் திட்டங்களுக்கு மேலும் உதவிகள் கிடைக்கும் என்பதை அமைச்சர்கள் கோடிகாட்டி இருந்தார்கள். அதுபோலவே கூடுதலாக உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் இம்மாதம் 17ஆம் தேதி அறிவித்த $8 பில்லியன் உதவித் திட்டம் மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும் வகையில் சம்பள மானியத்தை நீட்டிப்பது, ஊழியர்களை, குறிப்பாக முதியவர்களை நிறுவனங்கள் சேர்க்க மேலும் ஊக்குவிப்புகளை வழங்குவது, வேலையில்லாதவர்களுக்கும் குறைந்த வருமானம் உள்ள ஊழியர்களுக்கும் உதவுவது ஆகியவை அந்த மூன்று அம்சங்கள்.
அரசாங்க ஆதரவுத் திட்டத்தின் மையமாகத் திகழ்கின்ற ‘வேலை ஆதரவுத் திட்டம்’ அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
அதேவேளையில், அந்தத் திட்டம், ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய, குறிப்பிட்டவர்களை இலக்கு வைத்து செயல்படக்கூடிய வடிவில் இப்போது மாற்றம் பெற்று இருக்கிறது.
கொவிட்-19 காரணமாக பல துறைகளும் பல நிலைகளில் பாதிக்கப்பட்டு வருவதால் இத்தகைய ஓர் ஏற்பாடு சரியானதாகவே தெரிகிறது.
எல்லா துறைகளையும் சேர்ந்த நிறுவனங்களுக்கும் பெருந்தன்மைமிக்க ஆதரவை வழங்கி வருவது என்பது மிகவும் செலவு பிடிக்கக்கூடியதாக, நியாயமற்றதாக, விரயமானதாக இருக்கும்.
ஆகையால் வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் கிடைக்கக்கூடிய சம்பள மானியம், இந்த ஆண்டு 10 விழுக்காடு அளவுக்குத் தகவல் தொடர்புதொழில்நுட்பம், உயிர்மருத்துவ அறிவியல், நிதிச் சேவைகள் போன்ற துறைகளுக்கும் அடுத்த ஆண்டு மார்ச் வரை விமானப் போக்குவரத்து, சுற்றுலா போன்ற படுமோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு 50 விழுக்காடு வரையிலும் கிடைக்கவிருக்கின்றன. மற்ற துறைகளைப் பொறுத்தவரையில் பல நிலைகளில் மானியங்கள் கிடைக்கும்.
கட்டுமானம் உள்ளிட்ட சில துறை களுக்கு இரண்டு மாத காலம் 50% மானியம் கிடைக்கும். பிறகு அது 30% ஆகக் குறைக்கப்பட்டு அடுத்த மார்ச் வரை கொடுக்கப்படும்.
அதே வேளையில், கலைகள், பொழுது போக்கு, சில்லறை வர்த்தகம், உணவு சேவை, நிலப் போக்குவரத்து, கடல் துறை, கடலோர தொழில்துறை ஆகியவற்றுக்கு மேலும் ஏழு மாதங்களுக்கு 30 விழுக்காடு மானியம் உண்டு.
இப்படிப்பட்ட குறிப்பிட்ட இலக்குடன் கூடிய அணுகுமுறை காரணமாக துறை வாரியாக எந்த அளவுக்கு உதவி தேவையோ அந்த அளவுக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் மானியம் கிடைக்க வழி ஏற்படுத்தப்படுகிறது.
என்றாலும் கூட போதிய அளவுக்கு உதவி பெறாத நிறுவனங்களும் அதேவேளையில், தேவைக்கு அதிக உதவிபெறும் சில நிறுவனங்களும் இருக்கவே செய்யும். குறிப்பிட்ட துறைகள் மீது ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய வேலை ஆதரவு திட்டம் பல ஆயிரம் வேலைகளை காக்கும் என்றாலும் ஆட்குறைப்பும் இருக்கவே செய்யும். ஆகையால் கொவிட்-19 ஆதரவு மானியம் இந்த ஆண்டு முடிவு வரை விரிவுபடுத்தப்படும் என்பது ஏற்புடைய ஒன்றுதான். இந்த மானியம் வேலையற்றவர்களுக்கு நன்மை பயக்கிறது.
துறைகளுக்கு உள்ளேயே பல பன்மய நிலைகள் அதிகம் காணப்படுகின்றன. சில நிறுவனங்கள் மற்றவற்றைவிட அதிக மீள்திறனுடன் இருக்கக்கூடும்.
எடுத்துக்காட்டாக, சில்லறை வர்த்தகத் துறைக்குள் பார்க்கையில், பெரிய பகுதி வாரிக் கடைகள், பேரங்காடிகளுடன் ஒப்பிடுகையில், நடுநிலை வியாபாரிகள், குடும்பத்தினர் நடத்தும் கடைகள் ஆகியவற்றிடம் தாக்குப்பிடித்து நிற்கும் ஆற்றல் குறைவாகவே இருக்கும் வாய்ப்புள்ளது. உணவு, பானத் துறை, விருந்தோம்பல் துறை ஆகியவற்றிலும் இத்தகைய நிலையைக் காணலாம். இந்த மானியத்தை மேலும் நீட்டிக்க அல்லது மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்படக்கூடும். வேலையின்மை இன்னமும் அதிகரிப்பதே இதற்கான காரணம்.
சில்லறை வர்த்தகத் துறையைச் சேர்ந்த கூடுதல் ஆதரவு தேவைப்படாத பேரங்காடி கள், இணைய வர்த்தகத் தளங்கள் போன்றவை தங்களுக்குக் கிடைக்கும் மானியத்தை தாங்களாகவே திருப்பித் தந்தால் உதவி அதிகம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு அதை திருப்பிவிட முடியும்.
சுயவேலை பார்க்கும் ஊழியர்களுக்கு உதவும் ‘சுயவேலை பார்ப்போர் வருமான நிவாரண திட்டம்’ என்ற திட்டம் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும். இதையும் நீட்டிக்க வேண்டி இருக்கக்கூடும்.
நிறுவனங்கள் புதிதாக உள்ளுர் மக்களை நியமித்தால் சம்பளச் செலவில் கால்வாசி மானியமாக ஓராண்டு காலத்திற்குக் கிடைக்கும். 40 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள சிங்கப்பூரர்களை வேலையில் சேர்க்கும் நிறுவனங்களுக்கு இந்த மானியம் 50 விழுக்காடு வரை இருக்கும்.
வளர்ச்சி காணுகின்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
இந்தத் திட்டம் உற்பத்தி, கட்டுமானம், பண்டகசாலை தளவாடப் போக்குவரத்து போன்ற உள்ளூரிலேயே பார்க்க வேண்டிய வேலைகளைக் கொண்டுள்ள, வளர்ச்சி காணுகின்ற நிறுவனங்களுக்கு இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.
என்றாலும், இந்தத் திட்டம் மூலம் நன்மை பெறுவதற்காக சில நிறுவனங்கள் முதலில் ஆட்குறைப்பு செய்துவிட்டு பிறகு ஆட்களைச் சேர்க்கும் காரியங்களில் இறங்கக்கூடும். இதைத் தடுத்து நிறுத்தும் அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும்.
ஆட்குறைப்பு செய்கின்ற நிறுவனங்கள் அரசாங்க மானியத் திட்டத்திற்குக் குறைந்தபட்ச காலம் அதாவது மூன்று மாத காலம் தகுதி பெறக் கூடாது.
$8 பில்லியன் உதவித் திட்டத்தை அறிவித்த திரு ஹெங், அந்தப் பணம் நாட்டின் தேசிய கையிருப்பில் இருந்து பெறப்படாது என்றும் தெரிவித்தார்.
கொவிட்-19 காரணமாக தாமதம் அடைந்துள்ள திட்டங்களுக்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு உள்ள தொகையில் இருந்து அந்தத் தொகை பெறப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது விவேகமான ஒரு செயல்.
தேசிய கையிருப்பைத் தொடுவது என்பது வேறு வழியில்லாத நிலையில் கடைசி செயலாகத்தான் இருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே சேமிப்பில் கைவைக்கும் அணுகுமுறை கூடாது.
இப்போது கொவிட்-19 காரணமாக தாமதப்படுத்தப்பட்டு இருக்கும் திட்டங்களை மறுபடியும் தொடங்க வேண்டி இருக்கும். அப்போது, கொரோனா கிருமி நம்மை விட்டு சென்று இருக்கும் என்பதால் பாதிப்புகள் குறைந்திருக்கும் என்றும் அவசரகால ஆதரவுத் திட்டங்களின் பேரில் அதிகத் தொகையை செலவிட வேண்டிய தேவை இருக்காது என்றும் நம்பலாம்.
இத்தகைய ஒரு நிலையை இன்னமும் நாம் எட்டவில்லை.