திரு கௌத்தமன் ஹரிதாஸ், 31, குமாரி ஜெயசுதா சமுத்திரன், 29, இருவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரை படித்தனர்.
பிறகு ‘ராஃபிள்ஸ் பிளேஸ்’ பகுதிக்கு அருகே வேலை பார்த்தனர். படித்த காலம் முதலே இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில், ஜெயசுதா நடித்திருந்த ‘வெனிஸ் வணிகன்’ (ஷேக்ஸ்பியரின் மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்) என்ற நாடகத்தைப் பார்க்க கௌத்தமன் சென்றிருந்தபோது, தான் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு வேலைக்குச் செல்வதாகவும் தன்னை வழியனுப்ப வரும்படியும் குமாரி ஜெயசுதா அவரிடம் தெரிவித்தார். அப்போது இருவரும் சேர்ந்து அப்பம் சாப்பிட்டனர்.
ஜெயசுதா ஆம்ஸ்டர்டாம் செல்ல இருந்த நிலையில் அவரிடம் தனது காதலை கௌத்தமன் தெரியப்படுத்தினார். பிறகு விமான நிலையத்தில் குமாரி ஜெயசுதாவும் தன் காதலை வெளிப்படுத்த, இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகமானது.
வந்ததும் ஊடரங்கு
“ஜெயசுதாவிடம் என் காதலைச் சொன்னபோது அவருக்கும் அதே உணர்வுகள் இல்லை என்றால் என்னிடம் பதில் சொல்லத் தேவையில்லை என்றேன்.
“ஆம்ஸ்டர்டாமிற்கு செல்லவிருந்த அதே நாளில், விமான நிலையத்தில் அவரை வழியனுப்பச் சென்றபோது என் மீது இருந்த காதலை அவர் வெளிப்படுத்தினார். அதுவே நாங்கள் இருவரும் காதல் உறவை தொடங்கிய நாளாகும்,” என்றார் திரு கௌத்தமன்.
இந்நிலையில் கௌத்தமனுக்கு இங்கு டிபிஎஸ் வங்கியில் வேலை கிடைத்தது. இரு முறை ஆம்ஸ்டர்டாம் சென்று குமாரி ஜெயசுதாவை அவர் சந்தித்து வந்தார்.
இதனிடையே, ஆம்ஸ்டர்டாமில் வேலை பார்த்து வந்த ஜெயசுதா தன் குடும்பத்தாரைச் சந்தித்து அவர்களுடன் சில நாட்களைச் செலவிட கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு வந்தார். அந்த நேரத்தில்தான் உலகெங்கும் ஊரடங்கு தொடங்கியது. குமாரி ஜெயசுதா சிங்கப்பூரிலிருந்தே வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இருவரும் ஏற்கெனவே திருமணத்திற்கு நாள் குறித்திருந்தனர். பாரம்பரிய சடங்குபூர்வ சம்பிரதாய திருமணத்தை ஆகஸ்ட் 23ஆம் தேதி நடத்தி செப்டம்பர் 5ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று அவர்கள் திட்டமிட்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சிராங்கூன் கார்டன்ஸ் கன்ட்ரி கிளப்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இருவரும் செய்தனர்.
அதற்கான பணத்தையும் கட்டினர். ஆனால் கொவிட்-19 அதையெல்லாம் கெடுத்துவிட்டது. இருந்தாலும் கட்டிய பணம் இவர்களுக்கு திரும்ப கிடைத்தது.
அப்பம் முதல் ஆம்ஸ்டர்டாம் வரை
இந்நிலையில், கௌத்தமன், ஜெயசுதா இருவரும் ஏற்கெனவே திட்மிட்டபடி கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
லிட்டில் இந்தியாவில் உள்ள முத்துஸ் கறி உணவகத்தில் மதிய விருந்து உண்டனர்.
பதிவுத் திருமணத்தை நடத்தி முடித்திருக்கும் இத்தம்பதியர் பாரம்பரிய திருமணத்தை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைத்து இருக்கிறார்கள்.
ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நடந்த திருமணத்தில் 30 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்பதால் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களே வந்திருந்தனர்.
ஆனாலும் இப்போது டாஸ்மேனியாவில் வேலை பார்க்கும் கௌதமனின் தம்பியான ரிஷிகுமார் தன் சகோதரனின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இது தமக்கு மிகவும் கவலை தருவதாக ரிஷிகுமார், 28, தெரிவித்தார்.
கௌத்தமன்-ஜெயசுதா தம்பதியர் பதிவுத் திருமணம் கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் நடந்தேறியது என்றாலும் குறை ஒன்றும் இல்லாமல் இனிதாக அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
திருமதி ஜெயசுதா முன்பு ஆம்டஸ்டர்டாம் புறப்பட்டுச் செல்ல இருந்த வேளையில், அவரும் திரு கௌத்தமனும் சேர்ந்து ஒரு நாள் அப்பம் சாப்பிட்டார்கள். அந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் ‘#அப்பம் முதல் ஆம்ஸ்டர்டாம் வரை’ என்ற ஹாஷ்டாக்கை திருமணத்துடன் இத்தம்பதியர் வெகு சிறப்பாக இணைத்தனர்.
இதைக் கருப்பொருளாகக் கொண்டு, மித்திலா ஆனந்த் என்ற திருமண அழைப்பிதழ் வடிவமைப்பாளர் உதவியுடன் சுவரொட்டி ஒன்றையும் இவர்கள் தயாரித்தனர்.
திருமண நிகழ்ச்சிகளை உடனுக்குடன் ஃபேஸ்புக்கில் பகிர ஆகஸ்ட் 20ஆம் தேதி உறவினர்களையும் நண்பர்களையும் கொண்ட தனிக் குழு ஒன்றை இவர்கள் உருவாக்கினர்.
திருமண நிகழ்ச்சிகளைக் காட்டும் ஃபேஸ்புக் நேரலைப் பதிவுகளுக்கும் இதர திருமண வேலைகளுக்கும் ஸ்டேசி டான்யா ஷாமினி, 25, என்பவரைப் பொறுப்பாளராக இவர்கள் நியமித்தனர்.
ஏறத்தாழ 11 ஆண்டுகளாக கௌத்தமனின் நண்பராக இருந்து வரும் ஸ்டேசி, ‘இந்தியன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்’ என்ற சமூக ஊடகத் தளத்தையும் இயக்கி வருகிறார்.
“சாதாரண பதிவுகளாக மட்டும் இல்லாமால் அந்த ஃபேஸ்புக் குழு அனைவருக்கும் ஓர் உணர்வுபூர்வ அனுபவமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அதை நடத்தினேன். பலராலும் நேரடி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாததால், வழக்க நிலையில் நேரடியாக இருந்தால் எப்படி இருக்குமோ அதற்கு ஈடான உணர்வை வழங்க முனைந்தேன்,” என்றார் ஸ்டேசி.
“திருமண நாளில் பல வேலை களுக்கு இடையில் ஃபேஸ்புக் பதிவுகளையும் செய்துகொண்டிருந்தேன். நீண்ட நேரத்திற்கு கைகளை நீட்டியபடியே காணொளி எடுப்பது சோர்வைடையச் செய்தது.
“அதுபோக முதியவர்கள் பலருக்கும் நான் என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை. ஃபேஸ்புக் பதிவின் அர்த்தம் அவர்களுக்குப் புரியாததால் எனக்குத் தேவையான இடம், முக்கியத்துவத்தைச் சிலர் வழங்கவில்லை. அவர்களையும் சமாளிக்கவேண்டியிருந்தது,” என்றும் ஸ்டேசி குறிப்பிட்டார்.
உணவகம் முதல் மருத்துவமனை வரை
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கெளத்தமன்-ஜெயசுதா தம்பதியர் புதுமையான ஒரு முடிவையும் எடுத்தனர்.
கொவிட்-19 காரணமாக உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் பலரும் நேரடியாக திருமணத்திற்கு வந்திருந்து தங்களை வாழ்த்த முடியவில்லை என்பதால் தாங்களே நேரே சென்று அவர்களைச் சந்தித்து ஆசியையும் வாழ்த்தையும் பெற்றுவிடலாம் என்று முடிவுசெய்தனர்.
இது பற்றி பலருக்கும் தெரியப்படுத்தினர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய இந்தப் பயணம், அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்குத்தான் முடிவடைந்தது. நண்பர்கள் பலரின் உதவியுடன் இந்தத் தம்பதியர் ஏறத்தாழ 12 மணி நேரம் தீவு முழுவதும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று பெரியவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர்.
லிட்டில் இந்தியாவில் உள்ள ‘சிமிசாங்காஸ்’ உணவகம் முதல் ‘கிளெனிகல்ஸ்’ மருத்துவமனை வரை சென்று அங்கு பணியாற்றும் தங்கள் முன்னாள் சகாக்களையும் சந்தித்து இத்தம்பதியர் வாழ்த்துப் பெற்றனர்.
“இக்கால திருமணங்களில் மற்றவர்களை மணமக்களே நேரே சென்று சந்திப்பது நவீன வழக்கமா என்று பலரும் எங்களிடம் வியப் புடன் விசாரித்தனர்.
“திருமணத்திற்கு வரும்படி அழைக்க முடியாததால் அவர்களை நேரே சென்று சந்தித்து வாழ்த்து பெற முடிவெடுத்தோம்.
“இதை அவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். நண்பர்களின் வீடுகளில் இருந்த பெரியவர்கள் வாழ்த்தினர்.
“சிலர் புடவை, வெற்றிலை பாக்கு, பழங்கள் போன்றவற்றை வழங்கி பாரம்பரிய முறையில் எங்களை உபசரித்து வாழ்த்தினர்,” என்று விளக்கினார் ஜெயசுதா.
கலைச்செல்லவம் பன்னீர்செல்வம், செல்வம் ராமநாதன் ஆகிய நண்பர்கள் கைகொடுத்தனர். ஹரிஷ் குமார், ரமேஷ் இளங்கோவன் ஆகியோர் கார் ஓட்டிகளாக உதவினர்.
கௌத்தமனின் தங்கையான குமாரி மேகதர்ஷினி ஹரிதாஸ் படப்பிடிப்பாளராகவும் நேரத்தை வகுப்பவராகவும் பொறுப்பேற்றார்.
மனநிறைவு
“சிந்தனை என்னிடம் இருந்து வந்திருந்தாலும் அதை செயல்படுத்தியது முற்றிலும் என் நண்பர்கள். யாரைச் சந்திக்கலாம் என்ற பட்டியலை மட்டும் நாங்கள் இருவரும் உருவாக்கினோம். மற்றபடி பயணத்தைத் திட்டமிட்டு, அதை சீராக நடத்தியது என் நண்பர்கள்,” என்றார் கௌத்தமன்.
பயணம் களைப்பூட்டுவதாக இருந்தாலும் மனநிறைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்தது என்று குறிப்பிட்டார் ஜெயசுதா.
கொவிட்-19 காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எல்லாம் மீறாமல், அதேவேளையில், மனநிறைவோடு பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ள கௌத்தமன்-ஜெயசுதா தம்பதியர் இப்போது புதிய வீட்டை தேடி வருகிறார்கள்.
இடைப்பட்ட காலத்தில் தங்கள் பெற்றோரின் வீடுகளில் இவர்கள் மாறி மாறி வசித்து வருகிறார்கள்.
கொவிட்-19 தடைகளையே சமாளித்து திருமணம் புரிந்திருக்கும் இந்தக் காதல் தம்பதியர், வாழ்வில் சந்திக்கும் எந்தவொரு சவாலையும் உடைத்தெறிந்து வெற்றிப் பாதையில் முன்னேறிச் செல்வார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
உலகையே மாற்றிவிட்ட கொவிட்-19 தொற்று திருமணத்தையும் விட்டுவைக்கவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட்டம், முகக்கவசம், பாதுகாப்பு இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள். மனதிற்கு நெருங்கிய உறவுகள், நண்பர்கள், விருந்தினர்கள் இல்லாத ஏக்கத்தை திருமணங்களில் காண முடிகிறது. மணமக்களை வாழ்த்த உறவினர்கள் வந்த காலம் போய் மணமக்களே நாடிப் போய் வாழ்த்து பெறும் ஒரு காலத்தையும் கொவிட்-19 ஏற்படுத்தி இருக்கிறது.