வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கொரோனா தொற்று நிலவரம் சீரடைந்து வருவதால் விடுதிகளுக்குள் ஊழியர்கள் மது அருந்துவதை அனுமதிப்பது குறித்து மனிதவள அமைச்சு பரிசீலித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் மதுபானமும் சிகரெட்டும் அனுமதி இன்றிப் புழங்குவது தொடர்பான சம்பவங்கள் குறித்து தானும் போலிசும் அறிந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
“அந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதி நடத்துநர்கள் அபராதம் விதிப்பதும் அதில் அடங்கும்,” என அமைச்சு கூறியது.
கொரோனா பரவலுக்குமுன் ஊழியர்கள் தங்களின் அறைகளில் மது அருந்தத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆயினும், அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் மது அருந்தவும் புகைக்கவும் முடியும்.
சட்ட, ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக கொரோனா பரவலின்போது மதுபான விற்பனைக்கும் உட்கொள்வதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு சுட்டியது.
“விடுதிகளில் கொரோனா நிலைமை மட்டுப்பட்டு வருவதால், கட்டுப்பாட்டு விதிகளைப் படிப்படியாகத் தளர்த்துவது குறித்தும் விடுதி வளாகங்களுக்குள் மிதமான அளவில் மது அருந்த அனுமதிப்பது குறித்தும் விடுதி நடத்துநர்களுடன் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
இடைப்பட்ட காலத்தில், அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாகக் கண்காணிப்பர் என்றும் கடத்தல் நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்க விடுதி நடத்துநர்களுடன் இணைந்து செயலாற்றுவர் என்றும் கூறப்பட்டது.
விடுதிகளுக்குள் நுழையும் தனிமனிதர்களிடமும் வாகனங்களிலும் சோதனைகளை அதிகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படலாம்.
கொரோனா பரவலுக்குமுன் வாரம் இருமுறை இரவுப்பொழுதில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வரும் திரு கந்தன் கோபிநாத், 41.
ஹியூலெட் விடுதியில் தங்கி இருக்கும் திரு கோபிநாத், விடுதிகளில் குழுவாகச் சேர்ந்து மது அருந்த அனுமதித்தால் பாதுகாப்பு இடைவெளிப் பிரச்சினை எழலாம் என்பதைத் தாம் அறிந்துள்ளதாகச் சொன்னார்.
ஆனாலும், “ஒன்றிரண்டு கலன் பியர் அருந்த அனுமதிப்பது அல்லது வார இறுதிகளில் சில மணி நேரம் மட்டும் மது அருந்த அனுமதிப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம்,” என்றார் அவர்.
முன்னதாக, துவாஸ் வியூ விடுதியில் செர்ட்டிஸ் துணை போலிஸ் அதிகாரிகள் மூவர் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை வடிகாலில் ஊற்றியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அந்த அதிகாரிகள் பொருத்தமற்ற வகையில் நடந்துகொண்டதாகக் குறிப்பிட்ட செர்ட்டிஸ் நிறுவனம், அம்மூவருக்கும் ஆலோசனை வழங்கி, வேறு பணிகளில் அமர்த்தியுள்ளது.
தங்களது முதன்மைப் பணியான ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் ஊழியர்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கொவிட்-19 செயல்பாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. அத்துடன், தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் விடுதிகளை நடத்துவோரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.