கொவிட்-19 கிருமித்தொற்று மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடிவிட்டது. ஊழியர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. வேலை செய்யும் பாணியையே மாற்றிவிட்டது. சில வேலைகளை முற்றிலும் மறைந்துபோகச் செய்துவிட்டது. நிகழ்காலமும் இல்லாமல் எதிர்காலமும் கேள்விக்குறியாகி பரிதவிக்கும் நிலைக்குப் பலரும் தள்ளப்பட்டனர். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளியலைத் தூக்கி நிறுத்தவும் வேலைகளைக் காக்கவும் புதிய தேர்ச்சிகளைக் கற்றுக்கொண்டு மக்கள் கொவிட்-19க்குப் பிந்தைய காலத்துக்குத் தயாராகவும் சிங்கப்பூர் அரசாங்கம் ஏறக்குறைய $100 பில்லியன் தொகையை ஒதுக்கி குறுகியகால, நடுத்தரகால, நீண்டகால நோக்கிலான திட்டங்களை, நிவாரணங்களை, ஆதரவுகளை, ஊக்குவிப்புகளை வழங்கிவருகிறது.
ஆனாலும் ஒவ்வொருவரையும் காக்கக்கூடிய ஒரு நிலை எந்த ஓர் அரசுக்கும் இருக்க முடியாது என்பதால், இங்கு பெரும் நிறுவனங்கள்கூட வேறு வழியின்றி கடைசிக்கட்டமாக ஊழியர்களைக் குறைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டன.
விமானப் போக்குவரத்து, சுற்றுலா, ஹோட்டல்கள், சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகள் ஏறக்குறைய முடங்கிப் போய்விட்டன. இத்துறைகளில் வேலை பார்த்த சிங்கப்பூரர்கள் அதிகம். ஆகையால் வேலை இழப்புக்கு ஆளான சிங்கப்பூரர்களும் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு வேலையைத் தக்கவைத்துக் கொண்டவர்களும் கணிசம்.
சிங்கப்பூரின் பெயர் சொல்லும் அடையாளமாகத் திகழ்கின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 4,300 ஊழியர்களை நீக்கியுள்ளது. பணியில் உள்ள விமானிகளும் பாதி சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளனர். ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் குறிப்பிடத்தக்க பணியாளர்கள் வேலையிழந்தனர்.
லிட்டில் இந்தியாவின் சையத் ஆல்வி சாலையில் கம்பீரமாக செயல்படும் முஸ்தஃபா கடைத்தொகுதியையும் கொவிட்-19 விட்டுவைக்கவில்லை. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், மலேசியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வேலை அனுமதிச் சீட்டில் வந்து வேலைசெய்வோர் என 1,500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த முஸ்தஃபா சென்டர், கடந்த சுமார் 15 ஆண்டுகளாக நாள்தோறும் 24 மணி நேரம் இயங்கியது.
ஆனால் இப்போது காலை 11 மணிமுதல் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. பலரை வேலையில் இருந்து விலக்கிவிட்டது. இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பல சிறிய சில்லறை வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கை தரும் செய்தி
கொவிட்-19 காரணமாக ஆயிரக்கணக்கானோர் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டாலும் இவர்களுக்கு வேறு துறைகளில் வேலை உள்ளதாக சிலர் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
அங்கீகாரம் பெற்ற பாதுகாவல் நிறுவனங்கள் சங்கத்தின் கௌரவச் செயலாளர் திரு கேரி ஹாரிஸ், பாதுகாவல் துறையில் கிட்டத்தட்ட 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன என்கிறார்.
“இதுவரையில் வேலை இழந்தோரில் பெரும்பாலானோருக்கு வேலைகள் இந்தத் துறையில் உள்ளன. ஆனால் இந்த வேலைக்கு அவர்கள் வருவார்களா என்பதே கேள்வி,” என்றார் அவர்.
“சம்பளம் குறைவு என்று எண்ணிய காலம் போய்விட்டது. முற்போக்கான சம்பள முறையின் கீழ் இந்தத் துறையில் பணியாற்றுவோர் வரும் ஜனவரியில் ஏறத்தாழ 30% சம்பள உயர்வையும் பார்க்கவிருக்கின்றனர்,” என்றார் அவர்.
சுற்றுப்பயணிகளுக்காகப் போக்குவரத்துச் சேவையை வழங்கிவந்த முகமது நூர்தீன் என்பவர், கொவிட்-19 தாக்கம் தொடங்கிய காலகட்டத்திலேயே பாதுகாவல் துறைக்கு மாறினார்.
“பிப்ரவரி மாத வாக்கில் வெளிநாடுகளிலிருந்து வருவோரின் எண்ணிக்கை குறைந்துவந்தது. இன்னும் மோசமாகத் தான் ஆகும் என்று யூகித்தேன். உடனே வேறு துறைக்கு மாறுவோம் என்று நினைத்து பாதுகாவல் துறையில் சேர்ந்தேன்,” என்றார் திரு நூர்தீன்.
நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 27 வயது முகம்மது யாசீர், கொவிட்-19 நிலைமையை உணர்ந்து வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் சேவையை வழங்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
இந்த இளையர், நண்பர்களுடன் சேர்ந்து சிறிய முதலீட்டில் நாணய மாற்றுக் கடையை ஓராண்டு நடத்தியவர். வியாபாரத்தின் வீழ்ச்சியால் வேறு வாய்ப்புகளைத் தேடி வந்தவர், வருமானத்தை அதிகரிக்க பகுதி நேரமாக ‘கிராப்’ உணவு விநியோக ஊழியராகவும் மாறிவிட்டார்.
தந்தை நடத்திவந்த சில்லறை வர்த்தக நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த 33 வயது சி.சண்முகம், அந்தக் கடையை ஏற்று நடத்துவதாக இல்லை. வியாபாரச் சரிவு இதற்கு முக்கிய காரணம்.
ஓய்வு எடுக்க முடிவெடுத்த தந்தை கடையை மூடியதையடுத்து கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான ‘சுவாப்’ பரிசோதனையைச் செய்யும் பணிக்குச் சென்றார் சண்முகம். “தொடக்கத்தில் அச்சமாகத்தான் இருந்தது. வீட்டில் முதிய பெற்றோர் இருப்பதால் இந்தப் பணிக்குச் செல்கிறோமே என்று பயம் இருந்தது.
“ஆனால் மருத்துவத் துறை ஊழியர்களே நமக்காக முன்கள வீரர்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபடும்போது நாமும் பாதுகாப்பாகத்தான் இருப்போம் என்ற நம்பிக்கையில் நான் சேர்ந்தேன்,” என்றார் சண்முகம்.
எல்லையே இல்லை
கடந்த நான்கு மாதங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் இவர், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் ஊழியர்களுக்குப் பரிசோதனை நடத்திஉள்ளார். மூன்று மாத ஒப்பந்தத்தில் இந்தப் பணிக்கு ஏப்ரல் மாதத்தில் சேர்ந்த இவர், அந்தத் தவணை முடிந்தவுடன் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
இவர்களைப் போல இதற்கு முன்பு வெவ்வேறு துறைகளில் பல ஆண்டுகள் ஈடுபட்டுவந்த இதர பலரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப வேலைகளை மாற்றிக்கொண்டனர்.
பொருளியல் மந்தநிலையில் இருந்தாலும் மாறுபட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் இருந்த வண்ணம்தான் உள்ளன. பரந்த கண்ணோட்டத்துடன், திறன்களை ஆழமாகவும் அகலமாகவும் வளர்த்துகொண்டோமேயானால் வாய்ப்புகளுக்கு எல்லை இல்லை. பிழைத்துக்கொள்ள விழித்துக்கொள்ளவேண்டும்.