சூடான தேநீருடன், வெங்காய பக்கோடா, கோழி ரொட்டி, முறுக்கு போன்ற பலகாரங்களையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சேவையில் ஈடுபட்டிருக்கிறார் பொறியியலாளரான 29 வயது திரு முஹம்மது இப்ராஹிம் அஸ்லம்.
இவரது ‘தி அண்டர்கிரவுண்ட் சாய் கோ’ இணைய சேவை, சிறிய அளவில் கூட உணவை அனுப்பி வைக்கிறது. முழு நேர பொறியாளரான முஹம்மது இப்ராஹிம் அஸ்லம், தமது பெற்றோருடன் இணைந்து இந்த தொழிலைக் கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.
“உணவு, பானத் துறை சார்ந்த வர்த்தகம் என் சிறு வயதுக் கனவு. என் ஆர்வத்திற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன். முக்கியமாக தென்னிந்திய பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் வெவ்வேறு வகையான தேநீர் வகைகளை வழங்க முனைகிறோம்,” என்றார் திரு அஸ்லம்.
திரு அஸ்லமின் தந்தை 57 வயது முஹம்மது இப்ராஹிம் ஒலியுல்லா, தாயார் 48 வயது அனிஷா பேகம் ஒலியுல்லா இருவரும் பல விதங்களில் அஸ்லமிற்கு கைகொடுத்து வருகின்றனர்.
பலகாரங்களைச் செய்வது, பொட்டலங்களைத் தயாரிப்பது, வீடுகளுக்குச் சென்று உணவை வழங்குவது என்று எல்லாவகையிலும் உதவுகின்றனர்.
“நாங்கள் டின் பாலைப் பயன்படுத்துவதில்லை. பாரம்பரிய முறையில் பாலில் தேநீரைத் தயாரிக்கிறோம். பலகாரங்களையும் ஆரோக்கியமான முறையில் செய்கிறோம்,” என்றார் திரு ஒலியுல்லா.
முழு நேர பொறியாளரான முஹம்மது இப்ராஹிம் அஸ்லம், வார இறுதி நாட்களில் மட்டும் இச்சேவையை வழங்குகிறார். பிரதானமாக ‘இண்ஸ்டகிராமை’ பயன்படுத்துகிறார்.
தீபாவளிக்காக இதுவரை கிட்டத்தட்ட 30 முறுக்குப் பொட்டலங்களுக்கான கோரிக்கைகள் வந்துவிட்டன என்றும் தீபாவாளி சமயத்தில் வியாபாரம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார் அஸ்லம்.
“இரண்டு பேருக்காக, மசாலா டீ, பக்கோடா செய்வதென்றால் அலுப்பாக இருக்கும். இந்த சேவையின் மூலம் இரண்டு பேருக்குத் தேவையான அளவுக்கு வாங்க முடிகிறது. சில நேரங்களில் நண்பர்களை வீட்டில் உபசரிக்கும்போது இச்சேவையை அணுகுவேன்,” என்றார் திருமதி தஸ்னீம் ஜாபரலி, 28.