விழிவழியே வெந்நீர் வடிக்காத குறையாய் வேதனையில் நிற்கின்றனர் நம் நாட்டு நாணய மாற்று வணிகர்கள். கொரோனா கிருமிப் பரவல் கொண்டு வந்த சோதனை ஓராண்டு கடந்தும் தனது கொடுங்கரங்களை விரித்தபடி நிற்கிறது. வியாபாரம் படுத்துவிட்டது. வருமானம் நின்றுவிட்டது. அன்றாட குடும்பச்செலவு பெரும்சுமையாகி பயமுறுத்துகிறது. மனம் நிறைய மௌன பூகம்பத்தைச் சுமந்தவாறு நாளையாவது விடியுமா, நல்லபொழுதாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு களுடன் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்லும் அந்த வணிகர்களின் ஏக்கம் நிறைந்த, தூக்கம் சிதைந்த பதிவு இது.
பெருங்கனவுகளோடுதான் நாணய மாற்று வர்த்தகத்தில் இறங்கினார் போக்குவரத்துத் தளவாடத்துறை பட்டதாரியான 36 வயது முஹம்மது ரெஜாக். அந்தத் துறையில் பார்த்த வேலையை உதறிவிட்டு 2015ல் ‘கோல்டன் சிட்டி ஃபாரின் எக்ஸ் சேஞ்ச்’ என்ற குடும்பத்தொழிலில் கால்வைத்த நாளிலிருந்து வர்த்தகத்தை மேலும் விரிவாக்கி, பெரிய அளவில் நடத்துவதற்கான வழிமுறைகளையே அவர் சிந்திப்பார். அவ்வப்போது ஏற்ற இறங்கங்கள் இருந்தாலும், 1976ல் தாத்தா தொடங்கிய இத்தொழில் சவாலை எதிர்நோக்கும் நிலைக்கு வரும் என அவர் ஒரு நொடிகூட சிந்தித்ததே இல்லை.
உலகையே புரட்டிப்போட்டுவிட்ட கொரோனா கிருமிப் பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தொழில்களில் நாணயமாற்று வணிகமும் ஒன்று. பயணத்துறையை முக்கிய தொழிலாகக் கொண்ட சிங்கப்பூரில் சுற்றுப்பயணிகள், வெளிநாடு செல்லும் உள்ளூர்வாசிகள், வர்த்தகர்கள், நிறுவனங்கள் என பல பிரிவினருக்கும் சேவை வழங்கிவரும் இந்த நாணயமாற்றுநர்களில் பெரும்பாலானோர் தமிழ் முஸ்லிம்கள்.
நிதித் துறையின் கட்டணச் சேவைகளில் அங்கம் வகிக்கும் இந்தத் தொழில் 19ஆம் நூற்றாண்டு முதலே இவர்களின் கையில்தான் இருந்து வருகிறது.
“மூன்று தலைமுறை வர்த்தகம். சென்ற ஆண்டில் அப்படியே முடங்கிவிட்டது. மாதக்கணக்காக எந்த வருமானமும் இல்லை. அரசாங்கத்தின் சம்பள ஆதரவுத் திட்டத்தால் ஊழியரின் ஊதியத்தை சமாளித்தோம். ஆனால், வரவே இல்லாமல் வாடகை போன்ற பெரிய செலவுகளைத் தாக்குப்பிடிக்கவே முடியவில்லை,” என்றார் திரு ரெஜாக். மாற்றுவழி தேடி 2020 ஆகஸ்ட் மாதம் தமது நாணய மாற்று வர்த்தகத்தைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு அக்டோபர் மாதம் உணவுத் துறையில் அடி எடுத்துவைத்தார் ரெஜாக்.
சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் நாணயமாற்றுநர்கள் கிட்டத்தட்ட அத்தனை பேருமே திரு ரெஜாக்கைப்போல கடந்த ஆண்டு பிழைப்புக்காக தற்காலிக மாற்றுவழிகளை ஆராயத் தொடங்கினர்.
கொவிட்-19 சூழலில் வர்த்தகர்கள் அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை தங்களின் வணிகத்தை நிறுத்த சிங்கப்பூர் நாணய ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. சென்ற ஏப்ரல் மாதம் முதல் 37 நாணய மாற்று வர்த்தகர்கள் தங்களின் வணிகத்தைத் தற்காலிகமாகவும் 12 நிறுவனங்கள் நிரந்தரமாகவும் நிறுத்திவிட்டன என்பது ஆணையம் தரும் புள்ளிவிவரம். இவர்களில் ஐவரே தங்கள் வணிகத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
“உலக நாடுகளெல்லாம் எல்லைகளை மூடிய நிலையில் வரலாற்றில் வேறு எந்தவொரு சூழலிலும் இல்லாத பாதிப்பை இந்தத் துறையினர் எதிர்நோக்குகின்றனர். மீண்டும் முந்தைய நிலைமை வருமா அல்லது மின்னியல் முறையிலேயே மக்கள் ரொக்கப் பணப் பயன் பாட்டைக் குறைத்துவிடுவார்களா என்ற கேள்விகளும் உண்டு,” என்றார் நாணய மாற்றுக் கடை ஒன்றின் இயக்குநரான திரு பரக்கத் அலி.
சிங்கப்பூரின் 270 நாணய மாற்றுநர்களும் இதே இக்கட்டாண நிலையையே சந்தித்து வருகின்றனர். “நாங்கள் சம்பாதித்து ஓராண்டு ஆகிவிட்டது. எங்களில் பலர் வெளியே வேறு வேலைகளைச் செய்தே கடை வாடகை உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டி வருகிறோம்,” என்றார் 25 ஆண்டுகளாக இந்தத் தொழிலை நடத்தி வரும்ஆர். பிரபாகரன், 60.
தெம்பனிஸ், ஆர்ச்சர்ட் பகுதிகளில் வர்த்தகம் செய்த அவரிடம் எட்டு பேர் பணிபுரிந்தனர். தற்போது தெம்பனிசில் மட்டும் இயங்கும் கடையை அவர் ஒருவரே நடத்தி வருகிறார். குத்தகையை நிறுத்த முடியாத காரணத்தால் நடத்திவரு வதாகவும் இல்லாவிட்டால் அந்தக் கிளையையும் மூடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“அரசாங்கத்தின் வெவ்வேறு உதவித் திட்டங்கள் இல்லாவிட்டால் எப்போதோ காணாமல் போயிருப்போம்,” என்றார் சிங்கப்பூர் நாணய மாற்று சங்கத்தின் முதலாம் துணைத் தலைவரான திரு பிரபாகரன்.
நோய்ப் பரவல் காலத்தில் சங்கம் அதன் உறுப்பினர்களுக்குப் பல முக்கிய வழிகளில் துணை நின்றுள்ளது. அரசாங்கத் திட்டங்களை எப்படி பயன்படுத்தலாம், வாடகை ஒப்பந்தங்களை நில உரிமையாளர்களிடம் எவ்வாறு பேரம்பேசுவது போன்றவை குறித்து அத்துறை சார்ந்தவர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்படுகிறது.
வாடகை ஒப்பந்தங்களை ரத்து செய்ய கொண்டுவரப்பட்டுள்ள தற்காலிக சட்டம் சற்று ஆறுதலாக இருந்தாலும், நிலைமை எத்தனை காலத்துக்கு இப்படியே இருக்கும் என்ற கவலை வர்த்தகர்களை இரவும் பகலும் ஆட்டிப் படைக்கிறது.
“2020ஆம் ஆண்டை ஆதரவுத் திட்டங்கள் மூலம் கடத்திவிட்டோம். இந்த ஆண்டை எப்படி கடக்கப் போகிறோம் என்பது பெரிய கேள்வி. வருமானம் அறவே இல்லாத நிலையில் செலவுகளை நினைத்தால்தான் பயமாக உள்ளது,” என்றார் பத்து ஆண்டுகளாக புக்கிட் பாத்தோக் பகுதியில் நாணய மாற்று சேவை வழங்கும் திரு ஒலி முஹம்மது, 47.
“சென்ற ஆண்டில் ஒரு பரிவர்த்தனைகூட இல்லாத நாட்கள் பல. $2 அல்லது $3 மட்டுமே ஒரு நாளைக்குக் கிடைத்ததும் உண்டு,” என்றார் திரு ஒலி.
சீருடைச் சேவையில் பணியாற்றிய அவர், தமது சேமிப்புகளைக் கொண்டு சொந்தத் தொழில் செய்யவேண்டும் என்ற வேட்கையில் நாணய வணிகத்தில் இறங்கினார்.
“சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 70% நாணய மாற்றுநர்கள் சிறு வணிகர்களே. வியாபாரம் இல்லாத இந்தக் காலகட்டத்தில் எங்கள் சமூகத்துக்கு பணப்புழக்கம் நெருக்கடியாகிவிட்டது,” என்றார் நாணய மாற்று சங்கத்தின் செயலாளரான அவர்.
“தற்காலிக வர்த்தக நிறுத்தத்திற்கு தற்போது வழங்கப்படும் ஆறு மாத அதிகபட்சக் காலகட்டத்தை சிங்கப்பூர் நாணய ஆணையம் இன்னும் நீட்டித்தால் பலருக்கு உதவியாக இருக்கும்,” என்றார் அவர்.
ராஃபிள்ஸ் பிளேஸில் ‘சேஞ்ச் ஆலி’ எனும் பகுதிக்கு இந்தப் பெயர் வரக்காரணமே, பல்லாண்டு காலமாக நாணய மாற்றுநர்கள் அங்கு வணிகம் செய்து வருவதுதான். எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்திருக்கும் ‘சேஞ்ச் ஆலி’ இப்போது வெறிச்சோடிக் காணப்படு கிறது.
கடந்த 42 ஆண்டுகளாக ராஃ பிள்ஸ் பிளேஸின் ‘தி ஆர்கேட்’ கட்டடத்தின் முகப்பில் கடை நடத்திவரும் 76 வயது முஹம்மது ஃபாரூக், இதுபோன்ற நிலையைக் கேள்விப்பட்டதோ எதிர்பார்த்ததோ இல்லை என்றார்.
இரண்டாம் தலைமுறை நாணய மாற்றுநரான முஹம்மது ஃபாரூக்கின் மகன் முஹம்மது சாதிக் கடந்த 20 ஆண்டுகளாக தந்தைக்கு உறுதுணையாக இருந்துவருகிறார்.பத்து ஊழியர்களைக் கொண்டுள்ள அவரது நிறுவனத்திற்கு 90% வியாபாரம் குறைந்துவிட்டது.
“மற்ற நாணய மாற்றுநர்களுக்கு வியாபாரம் நடந்தால்தான் எங்களுக்கும் நடக்கும்,” என்ற அவர், இத்தொழில்முறை குறித்து விளக்கினார்.
ஒவ்வொரு நாணய மாற்றுநருக்கும் வெவ்வேறு நாணயங்களின் தேவை மாறிக்கொண்டே இருக்கும். அவர்களிடம் அதிகம் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாட்டு நாணயத்தை மற்ற நாணய மாற்றுநர்களிடம் விற்பது, தேவைப்படும் நாட்டின் பணத்தை மற்றவர்களிடம் வாங்குவது என பரிவர்த்தனைகள் நடந்துவருவது வழக்கம்.
மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது கடையின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிற்குச் செல்லும் சிங்கப்பூரர்களும் வெளிநாட்டு வியாபாரிகளும்தான்.
“வெளிநாடு செல்வதற்காக வாங்கி வைத்த பிற நாடுகளின் நாணயங்களை சிலர் சிங்கப்பூர் டாலருக்கு மாற்றிவருகின்றனர். தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பு
பவர்களும் நாணயம் வாங்க வருகின்றனர். அதையும் தாண்டி விமானப் போக்குவரத்து தொடங்கினால்தான் இனி வியாபாரம் நடக்கும்,” என்றார் 25 ஆண்டுகளாக நாணய மாற்று வணிகத்தில் ஈடுபட்டுவரும் திரு முஹம்மது ரஃபீக்.
“ஓராண்டு கடந்தும் பாதிப்புகள் நீடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை,” என்றார் அவர்.