சிங்கப்பூரின் கழிவில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு உணவுப் பொருள் விரயமாக உள்ளது.
இதில் பயன்படுத்த உகந்ததாக இருப்பவற்றை கடைகளில் திரட்டி, உதவி தேவைப்படுவோருக்கு கொடுத்து உதவி வருகின்றன தொண்டூழியக் குழுக்கள்.
கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக 52 வயது திருமதி மடில்டா ஆந்தாவ் வீட்டுக்கு காய்கறி வாங்கியதில்லை.
‘எஸ்ஜி ஃபுட் ரெஸ்கியூ’ என்ற அமைப்பில் 2020ன் தொடக்கத்தில் தொண்டூழியராகச் சேர்ந்த இவர், விரயமாகும் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சமூகத்திற்கு விநியோகிப்பதுடன் தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார். மேலும், அண்டை வீட்டாருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உணவுப் பொருட்களைத் தினமும் வழங்குகிறார்.
“வெண்டைக்காய் பொரியல், கத்திரிக்காய் கூட்டு, பாலக் பன்னீர், என்று பல வகையான உணவுகளைத் தயாரிப்பேன். சற்று சேதமடைந்த அல்லது அடுத்த சில நாட்கள் வைத்திருக்க முடியாது என கடைக்காரர்கள் தூக்கிப் போடும் காய்கறிகளின் ருசியில் எந்த வேறுபாடும் இல்லை. என் குடும்பமும் நானும் ஆரோக்கியமாகவே உள்ளோம்,” என்றார் மடில்டா.
கிளைவிரித்த தனிமனிதர் சிந்தனைசெலவுகளையும் கழிவுகளையும் முடிந்த வரையில் குறைத்துக்கொண்டு வாழும் ‘ஃபீரகனிஸம்’ என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றும் திரு டேனியல் டே, விரயமாகும் உணவைத் தேடிச் சேகரித்து உண்பவர். குப்பைத்தொட்டிகளில் இருந்தும் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களை எடுத்துக் கழுவி, சமைத்துப் பயன்படுத்துபவர்.
ஒருமுறை லிட்டில் இந்தியாவில் விரயமாகும் உணவுப் பொருட்களைச் சேகரிக்கப் போன டேனியல் அங்கு அளவுக்கு மீறிய உணவுப் பொருட்கள் விரயமாவதை அறிந்தார். இந்த விரயத்தை, தேவைப்படுவோருக்கான உதவியாக மாற்ற 2018ல் அவர் திருவாட்டி ஜூடி டானுடன் இணைந்து தொடங்கியதுதான் ‘எஸ்ஜி ஃபுட் ரெஸ்கியூ’ அமைப்பு.
தற்போது 350 தொண்டூழியர்ளையும் ஃபேஸ்புக் குழுவில் கிட்டத்தட்ட 15,400 உறுப்பினர்களையும் கொண்டு நாடாளாவிய முறையில் செயல்படும் இந்த அமைப்பினால் பலன் பெறுவோர் ஏராளம். உணவு விரயமும் பெருமளவு தடுக்கப்படுகிறது.
‘எஸ்ஜி ஃபுட் ரெஸ்கியூ’ என்ற அமைப்புடன் ‘ஃபுட் ரெஸ்கியூ செங்காங்’, நண்பர்கள் மூலம் உருவாக்கிய தனிப்பட்ட தொண்டூழிய அமைப்பு என்ற பல குழுக்களுடன் இணைந்து கடைகளிலிருந்து விரயமாகும் உணவுப் பொருட்களைச் சேகரித்து விநியோகிக்கும் பணியில் இறங்கியுள்ள திருமதி மடில்டா, “உணவும் உணவுப் பொருட்களும் வீணாவது சிங்கப்பூரில் ஒரு பெரிய பிரச்சினை,” என்று தெரிவித்தார்.
வீணாகும் உணவுப்பொருள் ஒருபுறம் தேவைப்படுவோர் மறுபுறம்
கடந்த 2019ல் 744,000 டன் உணவு விரயம் ஆனது என்று தேசிய சுற்றுப்புற வாரிய புள்ளிவிவரம் சுட்டுகிறது. இது ஓராண்டு காலத்தில் சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் அன்றாடம் இரண்டு குவளை சோறு வழங்குவதற்கு ஈடானது. இதில் 18% மட்டுமே மறுபயனீடு செய்யப்படுகின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரின் உணவுப் பொருள் விரயம் 20 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் 5.8 மில்லியன் சிங்கப்பூர் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் தேவையான அளவு உணவில்லாமல் வாழ்கின்றனர்.
கிட்டத்தட்ட 350,000 சிங்கப்பூர் மக்கள் உணவு, உடை, உறைவிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளுக்கு சிரமப்படுகிறது என்பதை மக்கள்தொகை புள்ளிவிவரம் காட்டுகிறது.
விரயத்தைத் தடுக்கவும் இல்லாதோருக்கு உதவி செய்யவும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரே நேரத்தில் இரு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ‘எஸ்ஜி ஃபுட் ரெஸ்கியூ’ அமைப்பு முனைகிறது.
‘எஸ்ஜி ஃபுட் ரெஸ்கியூ’ லிட்டில் இந்தியாவில் வார நாட்களில் பகல், இரவு என இரு வேளைகளில் 32 கடைகளிலிருந்து விரயமாகும் உணவுப் பொருட்களைச் சேகரிக்கிறது.
‘வெஜ்ஜி ரெஸ்கியூ @ லிட்டில் இந்தியா’ பிரிவு செவ்வாய், வெள்ளி தோறும் காலை 10.30 மணி முதல் நண்பகல் வரை செயல்படுகிறது.
‘லிட்டில் இந்தியா வெஜ்ஜி கலெக்ஷன்’ பிரிவு திங்கள், வெள்ளி தினங்களில் இரவு 9 முதல் 10.30 மணி வரை இயங்குகின்றது.
கடைகளில் திரட்டும் காய்கறிகளை ஈசூன், தெம்பனிஸ், தோ பாயோ பொங்கோல், டெக் வாய் ஆகிய வட்டாரங்களில் உள்ள சமூக குளிர்பதனப் பெட்டிகளில் கொண்டு சென்று தொண்டூழியர்கள் வைப்பார்கள்.
இப்பெட்டிகள் சமூக மன்றங்களால் அமைக்கப்பட்டவை. உணவு விரயமாவதைத் தவிர்க்க மக்கள் இங்கு உணவுப் பொருட்களை வைக்கலாம். தேவைப்படுவோர் இங்கிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
அன்றைக்கே பொருட்கள் காலியாகிவிடும் என்றார் வெஜ்ஜி கலெக்ஷன் பிரிவை வழிநடத்தும் தொண்டூழியர் குமாரி லீ யன் லிங், 37.
காய்கறிகளை நாள்தோறும் வாங்க இயலாதோர் பலர் இருப்பதால் விற்கப்படாத காய்கறிகளை மனிதநேய அடிப்படையில் தாம் பணிபுரியும் கடை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுத்துவருவதாக தேக்கா சந்தையிலுள்ள ஹஜ்ஜி எம் என் ஷாகுல் ஹமீது காய்கறிக் கடையில் பணியாற்றும் வி. மணிகண்டன், 30 கூறினார்.
நன்கொடையாளர்களைப் பாதுகாக்கும் சட்டம்
விரயம் என கழிக்கப்பட்ட உணவுப் பொருட்களைச் சமைத்து உண்பவர்களுக்கு உடல்கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் அதனால் கடைக்குப் பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று சில வாடிக்கையாளர்கள் அச்சம் தெரிவிப்பதாக சொன்னார் மடில்டா.
“உணவின் தரத்தை மதிப்பிட்ட பின்னரே அதை விநியோகம் செய்கிறோம். மக்களும் ஓர் உணவுப் பொருளை உண்பதற்கு உகந்ததா என்பதை ஆராய வேண்டும்,” என்றார் அவர்.
உணவுப் பொருட்கள் நன்கொடை வழங்குபவர்களைப் பாதுகாக்கும் ‘குட் சாமரிட்டன் ஃபுட் டோனேஷன் அக்ட்’ சட்டத்தை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் திட்டமிடுகிறார்.