சிங்கப்பூரில் வளரும், இளம் தலைமுறையினரிடம் தமிழ்மொழியில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்க அரசாங்கமும் சமூகமும் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக, அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆண்டுதோறும் ஒரு மாத காலத்துக்கு தமிழ்மொழி விழா கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு தமிழ் மொழி விழா 15வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், தமிழ் ஆர்வமும் புழக்கமும் எவ்வளவு தூரம் உள்ளது, தமிழின் தொடர்ச்சியை உறுதிசெய்ய என்ன செய்யலாம் என்பது குறித்து இளையர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை தமிழ் முரசு நடத்தியது.
தமிழ்மொழியே தமிழர்களின் அடையாளம் என்று சிங்கப்பூரில் தமிழ் இளையர்கள் கருதுகிறார்கள். இளையர்களில் 49 விழுக்காட்டினரின் அன்றாட புழங்குமொழிகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாகத் தமிழ் இடம்பெறுகிறது.
இளையர்களின் தமிழ்ப் புழக்கம், ஆர்வம், அக்கறை குறித்து தமிழ் முரசு 100 பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் தமிழ் என்றும் வாழும். எனினும், வளமான எதிர்காலம் அமைய திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பலரது கருத்து.
வீடு, வேலை, சமூகச் சூழல்களில் பெரும்பாலும் தமிழ் பயன்படுவதை ஆய்வு காட்டியது.
தமிழில் பேசுவதும் எழுதுவதும் எல்லாத் தரப்பினரையும் எட்டுவதில்லை, பேசி பழக்கம் இல்லாததால் பொதுவில் தமிழில் பேச கூச்சம், ஆசிரியர்களின் ஊக்குவிப்பு இல்லாமை போன்றவை தமிழ் பயன்பாட்டிற்கான சில தடைகளாக இருப்பதாக ஆய்வு சுட்டியது.
உயர்கல்வி நிலைய மாணவர்கள் தமிழுடன் இணைந்திருக்க வாய்ப்புகளை உருவாக்குவதும் வேலை செய்யும் நடுத்தர வயதினருக்கு ஏற்ற தமிழ் நிகழ்ச்சிகள் தேவை என்பதும் பலர் முன்வைத்திருக்கும் கருத்து.
சிறார்களுக்கான தமிழ்க் கல்வியை மேலும் சுவாரசியமாக்கு வது, சமூக ஊடகங்களில் தமிழ்ப் பதிவுகளை அதிகமாக்குவது, தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்ள மேலும் முயற்சி எடுப்பது போன்ற பல்வேறு கருத்துகளும் சிந்தனைகளும் பகிரப்பட்டன.
அதோடு இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவில் எம்மாதிரியான நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என்பதையும் சிலர் விவரித்தனர்.
40 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொண்ட இவ்வாரம் நடத்தப் பட்ட இந்த ஆய்வில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டோர்.
இளம் பெற்றோராகவும், அடுத்த தலைவர்களாகவும் தலையெடுத்து வரும் இந்த இளையர்களிடம் தமிழ் மொழி மீது பற்றும் ஆர்வமும் தங்கள் மொழியைத் தங்கள் பிள்ளைகளிடம் சேர்க்க வேண்டும் என்ற வேட்கையும் இருப்பது இந்த ஆய்வில் உள்ளங்கை நெல்லிக்கனி யாகத் தெரிந்தது.
வீட்டில் தமிழ் பேசுவோர் அதிகரிப்பு
வீட்டில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் கலந்துகொண்ட இளையர்களில் 88 விழுக்காட்டினர் வீட்டில் தமிழ் பயன்படுத்துவதாக கூறினார். 69 விழுக்காட்டினர் நண்பர்களுடன் தமிழ் பேசுகிறார்கள்.
32 விழுக்காட்டினர் சமூகத்தில் தமிழ் புழங்குகின்றனர். வேலையிடத்தில் 17 விழுக்காட்டினர் தமிழ் பேசுகின்றனர்.
“என் குடும்பத்தினருடன் உணர்வுபூர்வமாக பேசும்போது தமிழில்தான் பேசுவேன். தமிழ் பேச வேண்டும் என்று கட்டாயமாக நான் பேசுவதில்லை. பாட்டி, பெரியவர்கள், உறவினர்களுடன் தமிழில் பேசும்போதுதான் அணுக்கமாக உணர முடிகிறது,” என்றார் 29 வயது திருமதி பிரியாதேவி.
“உணர்வுபூர்வமாக ரசித்துக் கேட்கும் பாடல்களில் வரும் சொற்க ளின் பொருளைத் தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. படங்கள், பாடல்கள், உணர்வுபூர்வமான உரையாடல்கள் தமிழில் இருக்கும்போது அதன் உணர்வுநிலையும் புரிதலும் வேறு என்றார் அவர்.
குடும்பத்தாருடனும் தமிழ் நண்பர்களுடனும் தமிழிலேயே உரையாடும் 31 வயது வங்கி நிர்வாகியான திரு சக்திகுமார், இதன் வழி மற்றவர்களைத் தமிழிலும் பேச ஊக்கப்படுத்துகிறார்.
பாலர் பருவத்தில் ஆர்வம்
ஏற்பட வேண்டும்
தமிழ், புழங்கும் மொழியாக அடுத்தடுத்த தலைமுறைகளில் நீடிக்க தமிழ்மொழி கற்றல், கற்பித்தலிலும் தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் மேலும் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை பலரும் முன்வைத்தனர்.
சிறு வயதிலேயே தமிழ் கற்பது கடினம் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால், வாழ்நாள் முழுவதும் தமிழை அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். தமிழைச் சொல்லித்தருவதைவிட, தமிழில் ஆர்வத்தைத் தூண்டி விடுவதே முக்கியம் என்பது 38 வயது திருவாட்டி அய்ஷா இக்பால் முன்வைக்கும் கருத்து.
‘தி ஏபிசிஸ் ஆஃப் தமிழ் ஃபார் கிட்ஸ்’ (The ABCs of Tamil for Kids) என்ற இணைய வர்த்தகத் தளத்தை நடத்தி வரும் அய்ஷா,
சிறார்களுக்கு பார்த்தல், கேட்டல், தொடுதல் உள்ளிட்ட ஐம்புலன்களையும் ஈர்க்கும் வளங்கள் தேவை என்ற அவர், இதில் தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை விளக்கினார்.
இருமொழி அட்டைகளுடன் இவர் உருவாக்கியுள்ள திறன்செயலியில், சிறார்கள் உயிர்பெற்று வரும் விலங்குகளுடன் விளையாடலாம்; அசையும் பொருட்களைப் பயன்படுத்தி மகிழலாம். செயலியில் உள்ள காட்சிக்கு இணையான சொற்களும் உச்சரிப்புகளும் சிறாரை ஆர்வத்துடன் பங்கேற்கத் தூண்டுகின்றன.
“இக்கால குழந்தைகள் திறன்பேசியில் விளையாட விரும்புகின்றனர். தொழில்நுட்பம் இணைந்த தமிழ் வளங்கள் மேலும் உருவாகவேண்டும்,” என்று வலியுறுத்தினார் அய்ஷா.
பள்ளிக்குப் பிறகு தமிழ் பேச...
தமிழ் பேச, எழுத, படிக்க போதிய வாய்ப்புகள் இல்லை என்பது 43 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
“பள்ளிக் காலத்துக்குப் பின்னர் தமிழ் பேசும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. வீட்டிலும் நண்பர்களிடமும் தமிழ் பேசாத, வேலையிடத்தில் தமிழ்ப் புழக்கம் தேவையில்லாத இளையர்கள் காலப்போக்கில் தமிழை முற்றிலும் கைவிடுகிறார்கள்,” என்றார் சட்டம் பயிலும் 23 வயது மாணவி சாம்பவி ராஜாங்கம்.
சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழக நான்காம் ஆண்டு மாணவியான சாம்பவி, நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வரும் தொழில்நுட்ப யுகத்தில் தமிழ்ப் பயன்பாடு என்பது சிரமமாக உள்ளது என்றார்.
புதிய சொல்லாக்கங்கள் இடம்பெற்றாலும் முறைப்படுத்தப்படாமல் உள்ளன. ஊடகங்கள், கல்வி நிலையங்கள், அரசாங்கம், அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் ஒரே சொல்லைப் பயன்படுத்துவது முக்கியம். அப்போதுதான் அந்தச் சொல் புழக்கத்திற்கு வரும் என்றார் அவர்.
எடுத்துக்காட்டாக, வீடியோ ஆங்கில வார்த்தைக்கு ஒளிப்பதிவு, ஒளிநாடா என பல சொற்கள் இருந்தாலும், காணொளி என்பது இப்போது பரவலான பயன்பாட்டில் உள்ளதால் எல்லாரும் அதனைப் பயன்படுத்துகிறார்கள்.
பலருக்குத் தமிழ்ப் புழக்கம் உயர்நிலைப் பள்ளியோடு நின்றுவிடுவதாகக் கூறிய திரு சக்தி குமார், உயர்கல்வி நிலையங்களில் தாய்மொழிப் பயன்படுத்த வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
தேர்வுப் பாடமாக இல்லாமல், கலை, இலக்கியம், நடவடிக்கைகள் மூலம் தாய்மொழிப் பயன்பாட்டு வாய்ப்பிருந்தால் மொழியில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும் என்றார் திரு சக்திகுமார். கணக்கியல் துறையில் பட்டம் பெற்று வங்கியில் பணிபுரியும் இவர், தமிழ்மொழி ஆர்வத்தால் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படித்தவர்.
கலை, இலக்கியம் வழி தமிழ்
தமிழ்ப் பயன்பாட்டுக்கு கலை, இலக்கியம் முக்கியமாக இருப்பதாக ஆய்வில் பங்கேற்ற பலரும் கூறினர்.
சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்களைப் படித்து தமிழ் ஆர்வம் அதிகரித்ததாகக் கூறினார் மருத்துவ துறை மாணவியான 23 வயது இஸ்ரின் ஃபர்ஹானா. தேசிய பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் சங்கே முழங்கு போன்ற நிகழ்ச்சிகள் தமிழைப் புழங்க வாய்ப்பளிப்பதாகக் கூறினார். பள்ளிக் காலத்திலிருந்து கலாசார நிகழ்ச்சிகள் தமிழோடு இருக்க உதவுவதாக அவர் கூறினார்.
நாடகம் எழுதுவதன் மூலம் தமது தமிழ்மொழி ஆற்றல் வளர்வதாகக் கூறினார் 34 வயது திரு அமீன். ஊடகத்துறை, திரைப்படத் துறையில் மேலும் உயர, தமிழ் ஊடக அனுபவம் உதவியதாக அவர் கூறினார். அவர் தற்போது தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் ஊடகத்துறையில் பணியாற்றுகிறார்.
சமூக ஊடகங்களில் தமிழ்
இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு அதிகமாக இருப்பதைப் போல் தோன்றினாலும் 100 பேரில் ஒருவர்தான் சமூக ஊடகத்தில் தமிழைப் பயன்படுத்துகிறார்கள்.
“சமூகப் பிரச்சினைகள், தமிழ்க் கலைப்படைப்புகள் பற்றிய கலந்துரையாடல் பக்கங்கள் தமிழில் இடம்பெற வேண்டும். ‘டிக் டாக்’ போன்ற புதுத் தளங்களில் உள்ளூர் தமிழ்ப் பதிவுகள் இருந்தால் இளையர்களைச் சென்றடையும்,” என்றார் திருமதி பிரியாதேவி.
‘தமிழ் டேல்ஸ்’ என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தை விரும்பி பார்ப்பதாகக் கூறிய பிரியா, தமிழ் வார்த்தைகளின் தோற்றம், அர்த்தம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் படிக்க பிடிக்கும் என்றார்.
தமிழில் அதிகமான சமூக ஊடகத்தளங்கள் இல்லை என்றும் இளையர்களை ஈர்க்கும் வகையில் சமூக ஊடகங்களில் அதிகமான தமிழ்ப் பதிவுகள் வேண்டும் என்றும் கருத்துரைத்தார் அவர்.
தமிழில் மீம்ஸ் இளையரைச் சென்றடையும் என்ற 27 வயது திவ்யலஷ்மி கணேசன், அதிகாரபூர்வமற்ற, கட்டுப்பாடுகளற்ற தளங்களில் தமிழ்ப் பயன்பாடு இடம்பெறுவது முக்கியம் என்றார்.
இன்ஸ்டகிராம் போன்ற தளங்களில், நகைச்சுவைத் தமிழை ரசிக்க ‘யெஸ்கெக்’ பக்கம் போன்ற தமிழ்ப் பக்கங்கள் உருவாக்கலாம்.
இயல்பான உரையாடல்கள், நகைச்சுவை, கிசுகிசுப்புகள், ரகசியங்கள், குறைகூறுதல், புலம்புதல் இப்படி மனதுக்கு நெருக்கமான விஷயங்கள் எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழியின் புழக்கம் அதிகமாக இருக்கும். எனவே அதற்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது சிலரின் கருத்து.
மொழிபெயர்ப்பு மூலம்
வளரும் மொழி
சிங்கப்பூரில் மொழிபெயர்ப்புத் தேவை இருப்பதால் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ளவும் புழங்கவும் அதிக வாய்ப்பு ஏற்படுவதாக சிலர் கருத்துரைத்தனர்.
இந்தியப் பணிப்பெண்களுக்கு மேம்பாட்டு வகுப்புகள் நடத்தும் ‘வுமன் ஆஃப் சக்தி’ குழு நிறுவனர்களில் ஒருவர் 30 வயது வைஷ்ணவி நாயுடு.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொவிட் கிருமித்தொற்றுப் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில் சுதாதாரப் பராமரிப்புத் துறை முன்களப் பணியாளர்களுடன் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்புகொள்ளப் பயன்படும் இணையத்தளம் ஒன்றை இளையர்கள் சிலர் உருவாக்கினர். ஆங்கில மருத்துவ வார்த்தைகளை இவர்கள் தமிழில் மொழிபெயர்த்தனர்.
தமிழர்களிடம் தொடர்புகொள்வதற்கு தமிழ்மொழி எவ்வளவு முக்கியம் என்பதை கொவிட்-19 சூழல் உணர்த்தியது என்றார் வைஷ்ணவி.
பணியிடத்தில் பொதுமக்களுக்காக சிலவற்றைத் தமிழில் மொழி பெயர்க்கும் உமா மகேஸ்வரி, இதன் மூலம் தமது தமிழ் வளம் அதிகரிப்பதாகக் கூறினார்.
வேலையிடத்தில் அவ்வப்போது சிறு சிறு மொழி ெயர்ப்புகளைச் செய்வதாக ஆய்வில் பங்கேற்ற மேலும் சிலர் கூறினர். இது அவர்களது தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிப்பதுடன் தமிழ்மொழிக்கு இருக்கும் அங்கீகாரம் உயர்வு உணர்ச்சியைத் தருவதாகக் கூறினார்.