ஆசியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இருக்கும் 20க்கு மேற்பட்ட நாடுகளுக்கு விமானம் தவிர்த்த பயணம் மேற்கொண்டார்.
பல இன்னல்களை எதிர்கொண்டாலும் அறிமுகமே இல்லாத பலரது உதவி, சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் குளிரில் நடுங்கியபடி கழித்த இரவு, சிறை பிடிக்கப்பட்ட திகில் சம்பவம் என தமது 9 மாத பயண அனுபவங்களை தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் கணேஷ்.
சாகசப் பயணங்களை சிறு வயது முதலே தொலைக்காட்சிகளில் பார்த்து ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட செல்வகணேஷமூர்த்தி பாலகிருஷ்ணன், தேசிய சேவை முடித்ததும் வித்தியாசமான தொலைதூரப் பயணம் மேற்கொள்ளத் தயாரானார்.
ஆசியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, வடஅமெரிக்கா ஆகிய கண்டங்களில் இருக்கும் மொத்தம் 23 நாடுகளை கடக்க பேருந்து, ரயில் பயணங்கள் மட்டுமின்றி, நடைப் பயணம், வழியில் செல்லும் வாகனங்களில் உதவி கேட்டு ஏறிச் செல்லுதல் எனப் பயணம் செய்த கணேஷ் கனடாவின் மாண்ட்ரியலுக்கு 9 மாதங்களில் சென்று சேர்ந்தார். இந்தப் பயணத்தை மேற்கொண்டபோது அவருக்கு வயது 20.
"இத்தனை நாடுகளைக் கடந்த பயணம் விமானப் பயணமாக இருந்திருந்தால் பலவித மனிதர்களுடனான சந்திப்பு, அவர்களது கலாசாரம் பற்றி புரிந்துகொள்ளுதல் போன்றவை வாய்க்காமல் போயிருக்கும். ஆனால், புதுவித கலாசாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது, சுவாரசியமான மனிதர்களை சந்திப்பது, அவர்களது வாழ்க்கை முறைகளைப்பற்றித் தெரிந்து கொள்வது என இவ்வித பயணத்தில் பல அம்சங்கள் என அனைத்தையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என விரும்பினேன்," என்றார் கணேஷ்.
சிங்கப்பூரிலிருந்து கனடாவிற்கு அவர் மேற்கொண்ட 9 மாத பயணத்திற்கு மொத்தம் $10,000 செலவு செய்திருக்கிறார்.
தினசரி செலவுக்கு $25 மட்டும்
பயணம், உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் தினசரி $25 மட்டுமே ஒதுக்கி வைத்திருந்தார் கணேஷ். $25ல் சொகுசான நட்சத்திர
விடுதிகளில் தங்குவதோ, பெரிய உணவகங்களில் உண்பதோ முடியாத காரியம்.
இந்த 9 மாதங்களில் கணேஷ், வீதிகளில் தூங்கி, மலிவான பேக் பேக்கர் ஹாஸ்டல் அல்லது உள்ளூர்வாசிகள் வீடுகளில் இலவசமாகத் தங்கி செலவுகளை கட்டுக்குள் வைத்துக்கொண்டார்.
பொதுவாக தெரியாத இடங்களில் பயணம் செய்யும்போது பாதுகாப்பு கருதி முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் மேற்கொள்வது வழக்கம்.
ஆனால், கணேஷ் தன்னுடைய இந்தப் பயணத்துக்காக அதிகம் திட்டமிடவில்லையாம். போகிறபோக்கில் சூழலுக்கேற்ப தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்.
துணிச்சலுடன் வடகொரியாவில்
பயணத்திற்கிடையே, திடீரென துணிச்சலாக முடிவெடுத்து வடகொரியாவிற்குச் சென்றார் கணேஷ்.
ஆனால், அவர் அங்கு இருந்த காலத்தில், வெளி உலகத்துடன் இருந்த தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டு இருந்தது. வட கொரியாவிலிருந்து சீனாவுக்கு சென்று சேர்ந்ததும் வடகொரியாவில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டார் அவர்.
வட கொரியாவில் 'பாப்' கலாசாரம் 70களின் ஒரு பின்னடைவாக இருப்பதையும், அது பொதுவாக தேசபக்தியை பறைசாற்றும் வகையில் இருப்பதாகவும் தமது பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார். வடகொரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களின் நிலை, வாழ்க்கை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவரது சமூக ஊடகப் பதிவுகள் அமைந்தன.
மனம் கவர்ந்த கிர்கிஸ்தான்
அழகிய நிலப்பரப்பு, தெற்கில் பனி மூடிய மலைகள், வடக்கில் புல்வெளிகள், கனிவான மக்கள், மலிவான விலை என பல நல்ல அம்சங்களுடன் தம் மனங்கவர்ந்த நாடாக கிர்கிஸ்தான் அமைந்தது என்றார் கணேஷ். ரஷ்ய மொழி தெரியும் என்பதால் கிர்கிஸ்தானில் மக்களுடன் உரையாடுவது அவருக்கு எளிதாக இருந்தது.
ரஷ்ய மொழியுடன் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, பார்சி ஆகிய மொழிகளிலும் புலமை வாய்ந்தவர் இவர்.
ஒரு நாட்டை பற்றிய புரிதலுக்கும் அம்மக்களுடனான உரையாடல்களுக்கும் மொழி முட்டுக்கட்டையாக இருக்கலாம். அதைக் களையும் நோக்கில் பல மொழிகளைக் கற்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார் கணேஷ்.
தனது பயணங்களில் தனக்கு மிகவும் பிடித்தது தாம் சந்திக்கும் சுவாரசியமான மனிதர்கள்தான் என குறிப்பிட்ட கணேஷ், இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
கலங்க வைத்த கருணை உள்ளம்
உஸ்பெகிஸ்தானில் புகாரா எனும் பகுதியின் கடை வீதியில் இரவு நேரத்தில் கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு ரஷ்ய பெண்மணி (இடது படம்) அவரை எழுப்பி தனது வீட்டில் வந்து தங்கும்படி அழைத்தாராம்.
தம்முடைய நாட்டுக்கு விருந்தினராக வந்த ஒருவர் இப்படி வீதியில் படுத்துறங்குவதைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்த மாது கூறியதாக நினைவு கூர்ந்தார் கணேஷ். இதுபோன்ற கருணை உள்ளம் கொண்ட பல மனிதர்களை தனது பயணங்களில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் கூறினார்.
"நான் ஈரானுக்குச் சென்ற சமயத்தில் அந்நாடு பொருளாதார ரீதியில் பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருந்தபோதும், அங்குள்ள மக்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை எனக்கு மிகவும் விலை உயர்ந்த நல்ல உணவைச் சமைத்து கொடுத்தனர். நான் கிர்கிஸில் உள்ள கிராமங்களுக்குச் சென்றபோது, அங்குள்ள கடைக்காரர்கள் எனக்கு பிஸ்கட், கைக்குட்டைகள் போன்றவற்றைப் பரிசளித்தனர்," என்று பலதரப்பட்ட மக்களின் அன்பு பரிமாறல்கள் பற்றிக் குறிப்பிட்டார் கணேஷ்.
வீட்டிலிருந்து வெளியேற விடாமல் சிறை... திகில் சம்பவம்
கணேஷின் பயண அனுபவங்கள் அனைத்தும் சுமூகமானவையாக அமைந்துவிடவில்லை. பல நல்ல மனிதர்களைச் சந்தித்திருந்தாலும் பல அபாயமிக்க அனுபவங்களையும் ஆபத்தான நபர்களையும்கூட அவர் எதிர்கொள்ள நேரிட்டது.
தஜிகிஸ்தானில் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தபோது, அந்த வீட்டின் உரிமையாளர் தன்னை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு
வெளியேவிட மறுத்ததுடன், கணேஷ் அங்கிருந்து வெளியேறிவிடாதபடி கதவுக்கு வெளியே காவலுக்கும் படுத்திருந்தாராம்.
இரவு நேரத்தில் வீட்டு உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் அறையின் சன்னல் வழியாக வீட்டிலிருந்து வெளியேறி தப்பித்ததாக தமது திகில் அனுபவத்தையும் பதிவு செய்தார் கணேஷ்.
தம்முடைய வீட்டில் தங்காமல் வேறு ஒருவரின் வீட்டுக்குச் சென்று கணேஷ் தங்கிவிடக்கூடும் என்றும் தம்முடைய வருமானம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தால் அந்த நபர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் குறிப்பிட்ட கணேஷ், இத்தகைய சில கசப்பான அனுபவங்கள் தம்முடைய பயண ஆர்வத்தை சற்றும்
அசைத்துவிடவில்லை என்றார்.
வியட்னாமுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு ஆங்கில ஆசிரியருடன் தங்கியிருந்தார் கணேஷ். அந்த ஆசிரியரின் மாணவர்கள் ஹூ நகரை கணேஷுக்கு சுற்றிக்காட்டினர். அப்போது மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்த சில பயிற்சிகள் அளித்ததாகவும் குறிப்பிட்டார் கணேஷ்.
உலக அதிசயத்தில் மறக்க இயலாத நீண்ட இரவு
சீனாவின் பெய்ஜிங் நகருக்குச் சென்றிருந்தபோது கணேஷுக்கு தங்குவதற்கு ஏற்ற இடம் கிடைக்கவில்லையாம். அந்த நகரிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும் சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் முகாமிட்டு அந்த இரவைக் கழித்தார் கணேஷ்.
ஆளரவமற்ற அந்தப் பகுதியில் அப்போதைய வெப்பநிலை -20 டிகிரி செல்சியஸ். வீசிய பலத்த காற்று குளிரை மேலும் அதிகரித்தது. கொடுமையான தனிமை. தாகமாக இருந்தபோதும் தண்ணீர்கூட அருந்தமுடியவில்லை. அவர் கொண்டு சென்ற தண்ணீர் போத்தலிலேயே உறைந்து போயிருந்ததாம்.
"குளிரைத் தாங்கும் விதத்தில் கனமான ஆடைகள் அணிந்திருந்தாலும் சமாளிக்க முடியவில்லை. குளிரால் நடுங்கியவாறே படுத்
திருந்தேன். நான் அங்கு மூட்டிய தீ சிறிதளவு இதமான வெப்பதைத் தந்தது. இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இருந்தாலும் அந்த நீண்ட இரவு என் வாழ்க்கையில் மறக்கமுடியாத இரவு. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவரில் ஒரு இரவு தங்கும் வாய்ப்பு அனைவருக்கும்
கிடைத்துவிடாது." என்றார்.
தனது பயணத்தை 31 ஆகஸ்ட் 2019 அன்று நிறைவு செய்தார். திறந்த மனதுடன், வரம்புகளை உடைத்தெறிந்து முழுமையான அனுபவத்தை இந்தப் பயணத்தின் போது பெற்றிருக்கிறார் கணேஷ்.
தற்போது கனடாவில் பட்டப் படிப்பு பயின்று வரும் கணேஷ் படிப்பை தொடர சிங்கப்பூரிலிருந்து மீண்டும் கனடாவிற்கு சென்றார்.
கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து பயணங்கள் சாத்தியப் படும்போது கியூபா, வடஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லவும் மாண்ட்ரியலில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் தவிர்த்த பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார் கணேஷ்.
"சுதந்திரமாக உலகைச் சுற்றி பயணம் செய்ய கணேஷ் விரும்பியதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அவர் பல நாடுகளுக்குச் சென்று பலரைச் சந்தித்தால்தான் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தினமும் எங்களுடன் தொலைபேசி வழி தொடர்புகொள்ள வேண்டும் என்ற அன்புக் கட்டளை மட்டும் விதித்தோம். சில சமயங்களில் அது சாத்தியமில்லாதபோது அடுத்து அவர் பேசிய பிறகே மனம் அமைதியடையும்," என்றார் கணேஷின் தந்தை திரு பாலகிருஷ்ணன்
பாவாடைசாமி.
தனியாகப் பயணத்தைத் தொடங்கிய கணேஷுக்கு தம் மனதில் தோன்றிய எண்ணங்களையும் சுவையான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும்விதமாக அமைந்த குறிப்புகள் புத்தகமாக உருவெடுத்தன.
அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்க 11 நாட்கள் மேற்கொண்ட கப்பல் பயணத்தின்போது புத்தகத்தை எழுதத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட கணேஷ், 'The Long Direction' என்ற அந்தப் புத்தகத்தை 2018ஆம் ஆண்டில் வெளியிட்டார்.