உலகின் தொன்மையான மொழியான தமிழ், சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக அரியணையில் வீற்றிருப்பது தமிழர்களின் பெரும்பேறு. சிங்கப்பூரில் வாழும் மொழியாக தமிழ்மொழி நிலைத்திருக்க அரசாங்கம் தமிழ்மக்களுக்குப் பல வாய்ப்புகளையும் வளங்களையும் வழங்கி வருகிறது. தற்போது கோலாகலமாக நடைபெற்றுவரும் தமிழ்மொழி விழா அதற்குச் சான்று. ஆனாலும், மக்கள் போதிய அளவில் அவ்வளங்களைப் பயன்படுத்துகிறார்களா எனும் கேள்வி எழுகிறது.
செம்மொழியாம் தமிழ்மொழி சிங்கப்பூரின் நான்கு ஆட்சிமொழிகளில் ஒன்றாக விளங்கி, பணத்தாள் முதல் ஊடகம் வரை சிங்கப்பூர்த் தமிழர்களின் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது. பொதுப் போக்குவரத்து நிலையங்களில் பயண அட்டையில் (ஈஸி-லிங்க்) பணம் நிரப்புதல், நூலகங்களில் தானியக்க இயந்திரம் வழியாக நூல்களை இரவல் பெறுதல், தானியக்க வங்கி இயந்திரங்கள் (ஏடிஎம்) எனப் பல இடங்களிலும் தமிழ்மொழித் தெரிவு வழங்கப்பட்டு வருகிறது.
ஆயினும், இனம், மொழி, சமயம் குறித்துக் கொள்கை ஆய்வுக் கழகம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சிங்கப்பூரில் வாழும் பெரும்பாலார் ஆங்கில மொழியை அவர்களின் முதன்மை மொழியாகக் கருதுவது தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூர் இந்தியர்களில் 43 விழுக்காட்டினர் ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கருதுகின்றனர் என்றும் வேலை, வர்த்தகச் சூழலில் தாய்மொழி உதவும் என 45% இந்தியர்கள் கருதுகிறார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது.
அந்த ஆய்வு, தமிழ்மொழியைக் குறிப்பாக எடுத்துக்கொள்ளாமல் பலவித இந்திய மொழிகள் பேசும் இந்தியர்களை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டது.
இருந்தாலும், பொதுவாக இங்கு மொழிகளின் பயன்பாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் போக்கு தெரிகிறது.
இத்தகைய சூழலில், தமிழ்மொழி இங்கு தொடர்ந்து நிலைத்திருக்க தமிழ் வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறார் இளம்பிறை இலக்கிய வட்டத்தின் துணைத்தலைவர் அ.முஹம்மது பிலால், 51.
“யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழர் பண்பாடு. சிங்கப்பூரில் வாழும் பல இனத்தவர்களையும் பல மொழிகளையும் ஆதரித்து வருகிறோம். ஆனால், தமிழை நாம் விட்டுத்தர முடியாது. தொடர்ந்து வாழும் மொழியாக இருக்க தமிழர்களான நாம் நம் மொழிக்கு வழங்கப்படும் வளங்களை முறையாகப் பயன்படுத்தவேண்டும்,” என்கிறார் திரு பிலால்.
ஆங்கிலம், தமிழ் என இரு மொழித்திறன் பெற்ற அவர், பொதுவான மருத்துவ சேவைகள் உட்பட அண்மைக் காலத்தில் கொவிட்-19 தடுப்பூசிகள் குறித்த விவரங்களையும் பதிவுமுறைகளையும் தமிழில் தெரிவுசெய்து அணுகுகிறார்.
தம் குழந்தைகள் இருவருடனும் வெளியே செல்லும்போது பொதுச் சேவைகளைத் தமிழில் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார் மருந்து தயாரிப்புத் துறையில் பணியாற்றும் திரு சுந்தர் பிலவேந்தர்ராஜ், 31.
“வேலைச் சூழல் காரணமாக பணியிடத்தில் 95% ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறேன். தனிப்பட்ட வாழ்வில் முடிந்த அளவிற்குத் தமிழ் பயன்படுத்துகிறேன். பிள்ளைகளுடன் நூலகத்திற்குச் சென்று நூல்களை இரவல் பெறும்போது தமிழ்மொழியைக் கட்டாயம் பயன்படுத்துவேன். இதனால் என் பிள்ளைகளும் தமிழ்ச் சொற்களை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது,” என்றார் அவர்.
தம் இரண்டு வயது மகன் தீரன் படிக்கும் பாலர் பள்ளியில் தமிழ் இல்லாததால் வீட்டில் தமிழ்க் கேலிச் சித்திரங்கள் பார்ப்பது, தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பது போன்ற நடவடிக்கைகளில் மகனை ஈடுபடுத்துவதாக அவர் கூறினார்.
“பொது இடங்களில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். தேசிய மொழிபெயர்ப்புக் குழு தேசிய அளவில் தமிழை வழங்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் இளையர்களைக் கவர மேலும் சுவாரசியமாக்கலாம். தொழில்நுட்பம், அசைவுப்படம், கேளிக்கை வடிவத்தில் தமிழ் இருந்தால் மேலும் பலர் அதனை அணுகுவர்,” என்பது திரு சுந்தரின் எண்ணம்.
ஆங்கிலத்தில் சேவைகளை பயன்படுத்துவதினால் வேகமாக வேலை முடிகிறது என்ற மாற்றுக் கருத்தை முன்வைத்தார் திரு செம்பியன் சோமசுந்தரம், 28.
“ஆங்கிலம் தெரியாதவர்கள் அதை தாய்மொழியில்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் சேவைகளை வேகமாகப் பயன்படுத்தி, அடுத்த வேலைக்குச் செல்லவே பார்ப்பார்கள். அன்றாடத் தேவைகளுக்கான சேவைகளைப் பொறுத்தவரை அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் திரு செம்பியன்.
“ஆனாலும், தமிழ்மொழியுடன் இணைந்திருக்க வேறு பல நிகழ்ச்சிகளும் வாய்ப்புகளும் உள்ளன. தமிழ்த் தெரிவுகளைப் பல இடங்களில் அரசாங்கம் வழங்கி வருவது பாராட்டுக்குரியது. கொவிட்-19 குறித்த விவரங்களும் பதிவுமுறைகளும்கூட தமிழில் வழங்கப்படுகின்றன. இந்த வளங்கள் இருப்பது தமிழர்களுக்கு முக்கியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகத்தில் தமிழ்
கடந்த 15 ஆண்டுகளாக நாள்தோறும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் உடனுக்குடன் செய்திகளைப் பதிவிட்டு வருகிறார் ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் திரு ஏ.பி.ராமன், 88.
“ஃபேஸ்புக் வழியாக தமிழ்மொழியைக் கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ் நன்கு தெரியாதவர்கள் கூட நல்ல தமிழில் பேசும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்,” என்றார் திரு ராமன்.
இணையம் தரும் வாய்ப்புகளை அனைவரும், குறிப்பாக இளையர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் தமிழ் வாழும் மொழியாக இருக்க இணையத்தில் தமிழ்மொழியுடன் ஒன்றிணைவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
ஆட்டம் பாட்டம் என கேளிக்கைக்கு மட்டும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாமல் படைப்பிலக்கியம், வாசிப்பு போன்றவற்றிற்கும் பயன்படுத்துவது அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயல்தலைவர் நா.ஆண்டியப்பன், 73.
“தமிழை இழக்காமல் இருக்க அடுத்த தலைமுறையினரின் பங்கு இன்றியமையாதது. மற்ற மொழிகள் தெரியாமல், தமிழ் மட்டும் தெரிந்தவர்கள்தான் தமிழ் வளங்களைப் பயன்படுத்தவேண்டும் என்றில்லை. தமிழர்களுக்குத் தமிழைப் பயன்படுத்த கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் புதையல்தான்,” என்றார் திரு ஆண்டியப்பன்.
வாங்க, பழகலாம்!
தமிழ் வளங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் இயன்றவரை தமிழைப் பயன்படுத்தி வருகிறார் நிதி ஆலோசகரான திருமதி ஹபிடா ஷா, 32 (படம்).
நூலகத்தில் நூல் இரவல் பெறும்போதும் பயண அட்டையில் பணம் நிரப்பும்போதும் தானியக்க வங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கும்போதும் இவர் தமிழ்மொழித் தெரிவை சொடுக்கியே பயன்படுத்துகிறார்.
“அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் பல இடங்களில் தமிழ்மொழிக்கான வளங்களை உருவாக்கி வைத்துள்ளன. அவற்றை நாம் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். அதைப் பயன்படுத்தத் தயங்கக்கூடாது,” என்கிறார் திருமதி ஹபிடா.
“நான் தமிழைத் தெரிவுசெய்வது கண்டு என் நண்பர்களே என்னைப் பார்த்து வியப்படைவது ஏன் என்று எனக்குப் புரிவதில்லை. அதுபற்றி அவர்களிடம் கேட்டால், ‘எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை’ அல்லது ‘எனக்குப் புரிவது கடினம்’ என்று சொல்லிவிடுகிறார்கள்,” என்று இவர் சொன்னார்.
“வளங்கள் இருக்கும்போது பயன்படுத்தாமல் அவற்றின் பயன்பாடு குறைந்து, அவை இல்லாமல் போன பிறகு குரல் எழுப்புவது, கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வது போன்றாகிவிடும்,” என்றார் திருமதி ஹபிடா.
பலதுறை மருந்தகங்களில் பாட்டியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது அங்கு தமிழ்மொழியில் உள்ள கையேடுகளையே இவர் எடுப்பது வழக்கம்.
“அவற்றால் எவ்வளவோ நன்மைகள் உண்டு. என் பாட்டிக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையில்லை. சிறந்த நல்வாழ்வுக் குறிப்புகளை அவரே படித்துப் புரிந்துகொள்கிறார். மேலும் அவருக்கான தேவைகளை அவரே அறிந்துகொள்ளவும் முடிகிறது,” என்கிறார் திருமதி ஹபிடா.
“பயன்படுத்துவதை இயல்பாக்கிக் கொண்டால் பழகிவிடும், புரிதலும் எளிதாகி விடும். தொடக்கத்தில் எனக்கும் சில சொற்களைப் புரிந்துகொள்ளச் சிரமமாகத் தான் இருந்தது. இப்போது நன்கு புரிகிறது. இதுவே மொழி வளர்ச்சிக்கும் அதிகரிக்கும் மொழிப் புழக்கத்திற்கும் ஒரு சான்றுதானே!” என்றார் இவர்.