உலகில் நிரந்தர கிருமித்தொற்றாக கொவிட்-19 இடம்பிடிக்கப் போகிறது. இந்தக் கொள்ளைநோய் சூழலில்தான் மக்கள் வாழ்க்கை நடத்த வேண்டும். 2019க்கு முன்பிருந்த வாழ்க்கை நடைமுறைகள் இனிமேல் இருக்காது. பள்ளிகள், வேலையிடங்கள், பொழுதுபோக்குகள் என மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மாற்றத்துக்கு உட்பட்டே இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
வருங்காலத்தில் விடுமுறைக்கு வெளிநாட்டுக்குச் செல்ல ஆயத்தமாகும்போது, காலையில் லேசான சளி இருப்பது போலிருந்தால், விமான நிலையம் செல்லுமுன் முகக்கவசம் அணிய வேண்டும்.
காலை உணவை முடித்ததும் கொவிட்-19 இருக்கிறதா என சுயமாக பரிசோதனை செய்து, கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். பிறகு உடன் பயணம் செய்பவர்களையும் பரிசோதனை செய்து எவருக்கும் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். விமான நிலையத்துக்கு செல்லுமுன் முன்அனுமதி முறையில் அனைவரின் பரிசோதனை முடிவுகளையும் சமர்பித்து, கூடுதலாக மேலும் ஒரு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமானால் அதையும் போட்ட பிறகே விமானப் பயணத்தை தொடங்கலாம்.
விமானத்தில் அமரும்போது மலிவு விலை டிக்கெட் பெற்றிருந்தாலும் உங்கள் இருக்கைக்கும் மற்ற இருக்கைகளுக்கும் இடைவெளி எப்போதும் போல் இல்லாமல் அதிகமாகவே இருப்பதைக் கவனிப்பீர்கள்.
பல நிபந்தனைகளையும் ஏற்று பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே வருங்காலத்தில் பயணம் இருக்கும் என்று தொற்று நோய்கள், பொதுச் சுகாதாரம், கல்வி, பயணத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரர்களின் வாழ்க்கை முறை, விளையாட்டில் இருந்து, கல்வி கற்பது, வேலை செய்வது, ஒருவருடன் ஒருவர் பழகுவது வரை அனைத்திலும் அடிப்படை மாற்றங்கள் ஏற்படும் சாத்தியம் தெரிகிறது.
வருங்காலத்தில் ஏற்படக்கூடிய இந்த வாழ்க்கை முறை மாற்றத்தில் தெளிவின்மையும் நிச்சயமற்றதன்மையும் நிறைந்திருக்கும். இதை ஏற்றுக்கொண்டு சூழலுக்கு ஏற்ப நம்மை சரிசெய்து ெகாண்டு வாழ்வது சவால்மிக்க ஒன்று. அதற்கு சிங்கப்பூரர்கள் தங்களை தயார்ப்படுத்திக் ெகாள்ள வேண்டும்.
இதுபற்றி அண்மையில் உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங் இந்தக் கிருமி ஒழியும் என தாம் நம்பவில்லை என்றார். அதேநேரத்தில் இக்கிருமி தொடர்ந்து ஆட்டிப் படைக்கும் என்றும் அவர் நினைக்கவில்லை. கிருமியோடு வாழப் பழகும் புதிய வழக்கநிலை பற்றி விளக்கிய பிரதமர் லீ, அவ்வப்போது சிறிய அளவிலும் பெரிதாகவும் கிருமிப் பரவலை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
ஓராண்டின் உயிரிழப்பைப் பொறுத்து பொதுச் சுகாதார நடவடிக்கைகள் அமையும் என்பது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளி, உலக சுகாதார பிரிவின் இணைப் பேராசிரியர் ஜெரமி லிம் கூறும் கருத்து.
கொள்ளைநோய்க்கு எதிராக, அரசாங்கங்கள் தேவைப்படும்போது மட்டும் நடவடிக்கைகள் எடுக்கும் போக்கை கைவிட்டு, பொதுவாக சில நடவடிக்கைகளை எப்பொழுதும் மேற்கொள்வது சிறந்தது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் ஆலிவர் மோர்கன் கூறியுள்ளார்.
இதில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாது. மாறாக, “ஜப்பானியர்களைப்போல் மூக்குச் சளி அல்லது சளிக் காய்ச்சல் ஒருவருக்கு இருக்கும்போது, அது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க அவர் முகக்கவசம் அணிய வேண்டும்,” என்றார் சோ சுவீ ஹாக் பொது சகாதாரப் பள்ளியின் மற்றோர் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக்.
பரிசோதனை செய்வது, தடமறிவது, தனிமைப்படுத்துவது, தடுப்பூசி போடுவது, சமூகப் பொறுப்புணர்வு, ஆகிய இவையே நமது முக்கிய உத்திகளாக தொடர்ந்திருக்க ேவண்டும் என்றார் தேசிய தொற்று நோய் மைய பேராசிரியர் லியோ யீ சின்.
கொவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியை ஆண்டுதோறும் போட்டுக்கொள்ளும் சளிக் காய்ச்சல் தடுப்பூசியுடன் இணைத்துவிடலாம் என்பது ஆசிய-பசிபிக் மருந்தக நுண்கிருமி, தொற்றுச் சங்கத்தின் பேராசிரியர் பால் தம்பையாவின் கருத்து.
சமூக அளவில் பாதுகாப்பு தூர இடைவெளி போன்றவை வர்த்தகங்களுக்குக் கூடுதல் செலவு வைக்கும். இதற்குப் பதிலாக நகர வடிவமைப்பு, திட்டமிடல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
குளிரூட்டிக்கு மாற்றாக, கட்டடங்களில் உயரமான கூரைகள், விசாலமான சன்னல்கள் இவற்றுடன் கட்டடங்களுக்கு உள்ளும் வெளியிலும் நல்ல காற்ேறாட்டம் இருக்கும்படி செய்யலாம் என்று கருத்துரைத்தார் பேராசிரியர் லிம்.
காற்றை வடிகட்டும் முறை, கடைத் தொகுதிகளில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, பொதுப் போக்குவரத்து மையங்களில் நடமாட்டத்தைச் சீர்படுத்துவது போன்றவற்றுடன் தொற்று உள்ளவர்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற வழி செய்வது ஆகியவை என்யுஎஸ் கொள்கை ஆய்வுக் கழகத்தின் டாக்டர் வூ ஜுன் ஜீ, முன்வைக்கும் பரிந்துரைகள்.
பள்ளி, வேலை
வீட்டிலிருந்து கல்வி கற்பது, வேலை செய்வது, இவற்றுக்கு அப்பாலும் நிபுணர்கள் சிந்திக்கத் தவறவில்லை.
“குழு விளையாட்டுகள், வாழ்நாள் நட்புவட்டம் போன்றவற்றை அனுபவிக்காத ஒரு தலைமுறையை தற்பொழுது காண்கிறோம். இவையெல்லாம் இனி எப்படி நிகழும்,” என்று கேள்வி எழுப்பினார் தேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் குவா.
கல்வி போதிப்பது என்பது இதைவிட மேலும் குறுகிய குறிக்கோளுடனான ஒன்றாக இருக்கும் என்று எச்சரிக்கும் இவர், கல்வி என்பது பாடம் சொல்லிக் கொடுப்பது என்ற அளவிற்கு சுருங்கிவிடும். “மனிதத் தொடர்புகள் இல்லை எனில் கல்வி கற்பது எப்படி அர்த்தமுள்ளதாக அைமயும்,” என்பது இவரின் கேள்வி.
வகுப்பறைகளில் நேரடியாகக் கல்வி கற்பதை முடிந்தவரையில் சாத்தியமாக்க புதிய பாதுகாப்பான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் சென்ற மாதம் கூறினார்.
வேலை செய்வது தொடர்பாக கருத்துக்கூறிய சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக சமூகவியலாளர் பேராசிரியர் போலின் ஸ்டிரான், அலுவலக முறை காணாமல் போனாலும், ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படும் வர்த்தகங்கள் தழைக்கும் என்றார்.
இதை முறையாகக் கையாண்டால், தனிநபர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ள வழியில் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும் சக ஊழியர்கள், மேலாளர்கள் தங்களுக்கு இடையிலான உறவு முறையை பயனுள்ள ஒன்றாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்றும் இவர் சொன்னார்.
புதிய எல்லைக்கோடுகள்
அரசாங்கங்களிடம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு இராது என்பதை மக்களும் ெகாள்கை வகுப்பாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் என்றார் டாக்டர் வ.
இதில், நாடுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார் பேராசிரியர் லியோ. “அனைவருக்கும் கிடைக்கக்கூடிய நிலையில், சுகாதாரப் பராமரிப்பு சேவை, தனிநபர் பாதுகாப்பு சாதனம், தடுப்பூசி மருந்து, தொழில்நுட்பம், தகவல் பரிமாற்றம், கண்காணிப்பு, ஆய்வுகளை விரைவுபடுத்துவது,” என்று விவரித்தார் இவர்.
இனி வரக்கூடிய தொற்றுநோயை எதிர்கொள்ள, சுற்றுச்சூழலுடனான மனித உறவுகள் மேம்படவேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் டாக்டர் மோர்கன் கூறுவதாகும்.
உலகிலுள்ள குறைவான வளங்களை மனிதர் சூறையாடுவது தடுக்கப்பட வேண்டும் என்ற டாக்டர் குவா, தற்போது இதைச் சரிசெய்ய உலக சமூகங்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றார்.