கொவிட்-19 கிருமியுடன் மக்கள் தங்களது வழக்கமான அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக சிங்கப்பூர் புதிய இயல்புவாழ்க்கைக்குத் திட்டமிட்டு வருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் அண்மையில் கூறினார்.
"அவ்வப்போது சிலர் கிருமித் தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என்பதை ஏற்றுக்கொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதே சிங்கப்பூரின் இலக்காக இருக்க வேண்டும்," என்றார் திரு லீ.
கொவிட்-19 சிங்கப்பூரர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து வாழும் ஒன்றாக மாறிவிடும் என்று அண்மையில் பிரதமர் லீ கூறியது, பல வாரங்களாக இதர அமைச்சர்கள் கூறிய அம்சங்களுடன் ஒத்துப்போவதாக இருந்தது.
கிருமிப் பரவலை சமாளிக்க அமைக்கப்பட்டுள்ள அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், குறைந்தது மூன்று முறையாவது கொரோனா கிருமித்தொற்று "வெளியேறப்போவதே இல்லை" என்று கூறியுள்ளார்.
கொவிட்-19 உடன் சிங்கப்பூர் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கடந்த மே மாதம் மத்தியில் கூறினார். வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் கொவிட்-19 நிரந்தரமான ஒன்று என்றும் வரும் ஆண்டுகளில் கிருமித்தொற்றின் அலைகள் இயல்பான ஒன்றாகி விடும் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டின் இறுதி முதல் உலகின் பல பொது சுகாதார நிபுணர்கள் கொவிட்-19 நம்முடன் வாழும் ஒரு நோயாக மாறிவிடும் என்பதைக் கூறிவருகின்றனர்.
ஆனால் கொவிட்-19 இன்னும் உலகளவில் முழுவீச்சில் பரவி வருவதால் தற்போதே அதை 'என்டமிக்' என்று சொல்லக்கூடிய நம்முடன் வாழும் நோயாக வகைப்படுத்த இயலாது என்றும் சில நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளனர்.
சார்ஸ், எச்1என்1 நோய்த் தொற்றுகளிலிருந்தும் டெங்கி, சளிக் காய்ச்சல் போன்ற சமூகத்தில் எப்போதுமிருக்கும் நோய்களிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களைத் தொடர்ந்து ஒரு நோய் அடிக்கடி பாதித்தாலோ தொடர்ந்து நீடித்தாலோ அது நிரந்தரமான நோயாக கருதப்படுகிறது என்று தேசிய தொற்று நோய் மையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின்.
பெருமளவில், அதிவேகத்தில் பெரும்பான்மை மக்களைப் பாதித்து வரும் தற்போதுள்ள உலகளாவிய நோய்ப் பரவல் சூழலில், சார்ஸ்-கோவ்-2 எனும் கொவிட்-19ன் பின்புலத்தில் உள்ள கிருமி, என்டமிக் எனும் நிரந்தர நோய்க்கு இரு படிகள் கீழே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வாரத் தொடக்கம் வரை, உலகளவில் 3.5 மில்லியன் பேருக்கு மேல் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர். கடந்த 2019 டிசம்பர் முதல் 170 மில்லியனுக்கும் மேலான மக்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நோய்ப் பரவல் சூழலுக்கும் நிரந்த நோய்க்கும் இடையில் 'எபிடெமிக்' எனும் நிலை உள்ளது. திடீரென, எதிர்பார்க்காத நிலையில் நோய்த் தொற்று அதிகரித்தால் அதை 'எபிடெமிக்' என்று குறிப்பிடுவர்.
பழக்கப்பட்ட நோயாகக்கூடிய கொவிட்-19
ஜனவரியில் நேச்சர் எனும் அறிவியல் சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வில் 100ல் 90 விழுக்காடு வல் லுநர்கள், வரும் ஆண்டுகளில் கொவிட்-19 உலக மக்களிடையே அடிக்கடி ஏற்படும் நோயாக இருக்கும் என்று கூறிள்ளனர்.
சீனா, நியூசிலாந்து போன்ற சில நாடுகள் கொவிட்-19ஐ ஒடுக்கினாலும் பல நாடுகளில் அது கைமீறி போகக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சா சுவி ஹோக் பொதுப் பள்ளியின் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் கூறினார்.
2020 நடுப்பகுதியில் சீனாவில் வாழ்க்கை வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது. கொவிட்-19 கிருமியை எதிர்த்து உடனடியாக செயலில் இறங்கும் நியூசிலாந்து, விக்டோரியா மாநிலத்தில் தொற்று ஏற்பட்டதும் ஆஸ்திரேலியாவுடனான விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்தியது.
சிங்கப்பூரும் உள்ளூர் கிருமிப் பரவல் அதிகரித்ததால் மே 16 முதல் ஜூன் 13 வரையில் மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
இவ்வேளையில் முழுமையான நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற 70 முதல் 90 விழுக்காடு மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை கூறியுள்ளனர்.
ஆசிய-பசிபிக் நுண்ணுயிர்உயிரியல் தொற்றுநோய் சமூகத்தின் தலைவரான பேராசிரியர் பால் தம்பையா, கிருமி உருமாறுவது மெதுவடைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
மற்ற ஆய்வாளர்கள், சாதாரண சளிக்காய்ச்சல் போல தொற்று நீடித்திருக்கும் என்றும் பரவலாக இருக்கும் நம்புகின்றனர்.
உலகில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் சளிக் காய்ச்சலால் ஆண்டொன்றுக்கு 650,000 பேர் உயிரிழக்கின்றனர்.
சிங்கப்பூரில் ஆண்டு முழுவதும் சளிக்காய்ச்சல் இருந்து வருகிறது. ஆண்டுக்கு 600 பேர் அதற்கு இரையாகின்றனர் என்று அண்மைய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
எனவே, இந்நோய் அடிக்கடி வரக்கூடிய ஒரு நோயாக இருக்கும் என்பதும் அதனுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்பதும் பலர் நிபுணர்களின் கருத்து.
சிங்கப்பூரில் நிரந்தரமாக உள்ள தொற்றுகளாக, சளிக் காய்ச்சல், டெங்கி, கை, கால், வாய்ப் புண் நோய், காசநோய், ஹெப்படைடிஸ் ஏ, பி, சி, இ ஆகிய ஐந்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சளிக் காய்ச்சல் தொற்று ஆண்டு முழுதும் ஏற்படுகிறது. ஆண்டின் தொடக்கத்திலும் மத்தியிலும் இறுதியிலும் அதன் தொற்று மேலோங்கியிருக்கும்.
ஆண்டு முழுதும் டெங்கித் தொற்று ஏற்பட்டவாறே உள்ளது. சென்ற ஆண்டு சிங்கப்பூரில் ஆக அதிகமாக 35,315 பேருக்கு டெங்கி பாதிப்பு ஏற்பட்டு அவர்களில் 32 பேர் இறந்துள்ளனர்.
ஆண்டு முழுவதும் பாலர் பருவத்தினருக்குப் பொதுவாக ஏற்படும் கை, கால், வாய்ப் புண் நோய் பெரியவர்களுக்கும் தொற்றும் அபாயத்தை விளைவிக்கிறது. திடீரென 2000ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் வரை ஏற்பட்ட அந்த நோயால் 3,790 பேர் பாதிக்கப்பட்டு இரு வாரங்களுக்குப் பாலர் பள்ளிகள் மூடப்பட்டன. அந்த ஆண்டு நால்வரும் 2001ஆம் ஆண்டு இந்நோயால் மூவரும் உயிரிழந்தனர்.
முதியோரில் 30 விழுக்காட்டினருக்கு காசநோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் தென்படாமலும் தொற்றும் அபாயம் இல்லாமலும் இருக்கும் பட்சத்தில் பின்னர் 10 விழுக்காட்டினருக்கு அதன் வீரியம் கூடுகிறது. ஹெப்படைடிஸ் நோய்களில் புதிய சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுவ தில்லை எனினும் 2015ல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஹெப்படைடிஸ் சி தொற்று ஏற்பட்டது.
தகவல்கள் தேசிய தொற்று நோய் மையத்திலும், சுகாதார அமைச்சிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் பெறப்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் ஜஸ்டின் ஓங் எழுதிய கட்டுரையின் சுருக்கம்