திருமதி தேன்மொழி ராஜன் வேலையை விடுவதற்கு நிறுவனத்தில் நிலவிய இனப் பாகுபாடு காரணமாக இருந்தது. அவர் வேலையிலிருந்து விலகியபோது, அவரது மிக நெருங்கிய சீனத் தோழியான ப்ரிசில்லா ஆங்கும் நிறுவனத்தின் போக்கு பிடிக்காமல் உடன் விலகினார்.
அவருக்கும் குடும்பதினருக்கும் பல சீன நண்பர்கள் இருக்கிறார்கள். இவர் குழம்பும் பிரியாணியும் சமைத்து சீன நண்பர்களுக்குக் கொடுப்பார். சீனப் புத்தாண்டுக்கு தேன்மொழி குடும்பம் அவர்கள் வீட்டுக்குச் செல்லும். எனினும் பேருந்தில் அருகில் அமரும்போது சிலர் மூக்கை மூடிக் கொள்வதும், நிறம் குறித்த கிண்டல்களும் பள்ளிக் காலத்தில் அவர் அனுபவித்தவை.
“இலைமறைகாயாக எப்போதும் இருந்து வரும் இனவாதம் பற்றிய விழிப்புணர்வு அவசியம். அதேநேரத்தில் இதைச் சர்ச்சையாக்கக்கூடாது என்பது இரு பிள்ளைகளுக்குத் தாயான திருமதி தேன்மொழியின் கருத்து.
இனவாதம் பெரிதும் தலைதூக்காமல் இங்குள்ள சிறுபான்மையினரின் வாழ்வும் வாய்ப்புகளும் பெருமளவு பாதிக்கப்படாமல் இதுவரை சிங்கப்பூர் அரசாங்கம் நாட்டின் பல இன பல மொழி பல சமயச் சூழலை மிகவும் நுணுக்கமாக சமாளித்து வந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியும் வெளித்தாக்கங்களும் மிகவும் அதிகரித்துள்ள இன்றைய சூழலில், இதுகுறித்து பொதுவெளியில் விரிவாகவும் ஆழமாகவும் பேசப்படாமல் இருப்பது தேவையற்ற ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் வழிவிட்டுள்ளதாக சமூகவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
திறன்பேசிகளின் மூலம் வளர்ந்துள்ள கண்காணிப்புத் தொழில்நுட்பமும் இனம் குறித்த பொது கலந்துரையாடல்கள் ஏற்றக்கொள்ளக் கூடியவை என்ற அதிகரித்து வரும் எண்ணமும் இனவாத போக்கை அதிகம் வெளிப்படுத்துகிறது என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியின் உதவிப் பேராசிரியரான முனைவர் லாவண்யா கதிரவேலு.
சமூக ஊடகங்களின் தாக்கம்
தற்போது இன, சமய பாகுபாடுகள் தொடர்பான சம்பவங்கள் அதிகமாகி இருப்பதாகத் தெரிவதற்கு சமூக ஊடகங்கள்தான் முக்கிய காரணம். முன்பு பெரிய இனக்கலவரம் போன்ற விஷயங்கள்தான் செய்தியாகும். தற்போது சிறிய விஷயங்கள்கூட செய்தியாகிவிடு கிறது என்று குறிப்பிட்டார் சமூகவியலாளர் முனைவர் அ.வீரமணி.
இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம் என்றார் அவர்.
“ஒன்று, 1979ல் அறிமுகமான சிறப்பு உதவித்திட்டப் பள்ளிகளில் ஆங்கிலத்தையும் மாண்டரினையும் உயர்தரத்தில் படித்த கல்வியில் உயர்பிரிவு மாணவர்கள் பலருக்கு இந்தியர், மலாய்க்கார்களின் பண்பாடும் கலாசாரமும் பெரிதாகத் தெரியாது. அதேபோல், தற்போது இங்குள்ள இந்தியப் பள்ளிகளில் வளர்பவர்களுக்கு சீன கலாசாரமோ, மலாய் பண்பாடோ தெரியாது. இத்தகைய தனித்தனிக் குழுமங்களாக சமூகப் பிரிவுகள் உருவாகிறது.
“மற்றது, சீனாவின் துரித வளர்ச்சி சிங்கப்பூர் சீனர்களுக்கு உயர்வுணர்ச்சியைத் தந்துள்ளது. மேலும் சீனா, இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் இங்கே புதிதாகக் குடியேறுபவர்களுக்கு இந்நாட்டின் வரலாறு, போக்கு, கலாசாராம், இன உறவுகள் குறித்த புரிதல் குறைவு,” என்றார் முனைவர் அ.வீரமணி.
கேலிப் பேச்சு பழக்கமாகிறது
இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் அவ்வாறு செய்வதால் ஒருவித அதிகாரம் பெற்றவர்களாக உணர்கின்றனர். அதனால் அவ்வாறான போக்கை கைக்கொள்கின்றனர் என்று கூறினார் ‘கிளப் டு கேர்’ எனும் இந்திய சமூகத்தினருக்கான மனநல ஆலோசனை சமூகக் குழுவின் தலைவரான மனநல ஆலோசகர் திருவாட்டி ஷர்மினி என். ராமசந்திரா, 49.
வன்முறை மிகுந்த குடும்பத்தில் வளர்ந்த ஒருவருக்கு அத்தகைய செயல்கள் சாதாரணமான செயலாகத் தெரியும் சாத்தியம் அதிகம் இருப்பது போன்றே இது வும். சிறு வயதில் கேலியாகப் பேசும், கேட்கும் இனவாதக் கருத்துகள் திருத்தப்படாதபோது பெரியவரான பின்னர் சாதாரணமாகப் பேசுகிறார்கள் என்று அவர் விளக்கினார்.
பலதுறைத் தொழிற்கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் தொடர்பான இனவாத செயலைச் சுட்டி கருத்துரைத்த அவர், பெரும்பான்மை சமூகத்துடன் ஈடுபடுவதன் மூலம் சிறுபான்மையினர் ஏற்றம் பெரும் நிலை உருவாகிறது என்ற மனப்போக்கைக் கொண்டிருப்பார் என்றார். சிறுபான்மையினர் தமது சக்தியைத் தட்டிச்செல்வார்கள் என்ற மனநிலை அந்தச் செயலுக்குக் காரணம் என்கிறார்.
பயமே அடிப்படை
வெங்காயத்தை உரித்துப்பார்ப்பதுபோல் இந்த விஷயத்தை பார்க்கும்போது, கோபம், எரிச்சல், வெறுப்பு எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது பயம் என்பது புரியும் என்று கூறுகிறார் மனோதத்துவ நிபுணர் டாக்டர் சீதா.
இதில் அடிப்படையானது பயம்தான். பயத்தின் வெளிப்பாடுதான் மற்ற எல்லாம். எல்லா வகையிலும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. இந்தப் பாதுகாப்புக்கு ஆபத்து வரும்போது அல்லது சவாலுக்கு உட்படுத்தப்படும்போது ஒன்று தப்பித்து ஓடுவது அல்லது எதிர்த்து நிற்பதே மூளையின் இயல்பு. இதில் எந்தச் செயல் வெற்றிபெறும் என்பதைப் பொறுத்து மூளை முடிவெடுக்கும்.
கொள்ளைநோய் போன்ற சூழல் வாழ்க்கையை சிரமமாக்குகிறது. இந்தச் சிரமத்துக்கான காரணத்தை நமது மூளை எவ்வாறு பதிவு செய்திருக்கிறது என்பதைப் பொறுத்து, அது செயலாற்றுகிறது என்ற அவர், மூளையின் செயல்பாட்டை அண்மைய தொற்று சம்பவம் மூலம் விளக்கினார்.
“எடுத்துக்காட்டாக, இந்தியாவில் இருந்து வைரஸ் வருகிறது. என்னைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியாவிலிருந்து வருபவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். என்பது மூளையில் பதிகிறது. இவ்வாறு பதிவு செய்வது சரியா என்று மூளையிடம் கேட்க வேண்டும். அதை கேள்வி கேட்காவிட்டால், மூளை தவறாக யோசிக்கத் தொடங்கிவிடும். மூளை ஒரு சிறந்த இயந்திரம். அது தன்னியல்பில் செயல்படும். அது இரவில் தூங்கும்போது தகவல்களைச் சேகரிக்கிறது. தூக்கத்தின் ஆழத்தைப் பொறுத்தே, மூளை தகவல்கள் சேமிப்பும் சரியான வரையறையில் இருக்கும்,” என்று விவரித்தார் டாக்டர் சீதா.
நமக்குத் தெரியாத ஒன்று பயத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பு இல்லை என மூளை உணரும்போது, இயற்கையான குணம் வெளிப்படும். தகவல்கள் அதிகரிக்க அதிகரிக்க சவால்களும் கூடுகின்றன என்றார் டாக்டர் சீதா.
இந்தியராகவும் தலை அங்கி அணியும் பெண்ணாகவும் இனவாதத்தை எதிர்நோக்குவதாகக் கூறிய குமாரி நஸிமா பேகம், 28, சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக இருப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம் என்றார். இந்தியர்களே தம்மை விலக்கி வைத்த சம்பவங்களும் உண்டு என்றார் அவர்.
பேசாததால் வரும் பிரச்சினை
இந்தியர் வீட்டில் சாம்பிராணி போடுவது அருகில் வசித்த மலாய் குடும்பத்துக்கு பல ஆண்டுகாலமாக தீராத பிரச்சினையாக இருந்தது. கூப்பிட்டுப் பேசியபோது, மலாய்காரர் வீட்டில் இருந்த வயதான அம்மாவுக்கு சாம்பிராணிப் புகையால் ஆஸ்துமா அதிகரிப்பது தெரியவந்தது. அதுவரையில் இந்தியக் குடும்பத்துக்கு இது தெரியாமல் இருந்தது. சாமி குடும்பிடுவதைத் தடுக்கிறார்கள் என்ற வெறுப்பே அவர்களிடம் வளர்ந்தது.
இதற்கு காரணம் இருவருக்கும் இடையே தொடர்பு இல்லாததுதான் என்று தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் கடந்த 22 ஆண்டுகளாக சமரச மன்றத்தின் நடுவராகப் பணியாற்றி வரும் 59 வயது திரு ப. திருநாவுக்கரசு.
பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை வருவதற்கு முக்கிய காரணம் தொடர்பு இல்லாததுதான். அக்கம்பக்கத்தினருடன் பேசி, அவர்களைத் தெரிந்துகொள்ள அவர்கள் பேச வேண்டும் என்று காத்திருக்கிறோம். தொடர்பு இல்லாதபோது, நம்பிக்கை குறைகிறது. இதனால் பேதங்களும் பாகுபாடுகளும் வளர்கின்றன என்று குறிப்பிட்டார் அவர்.