கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பல மாத காலம் விடுதிகளிலேயே அடைபட்டுக் கிடக்க நேர்ந்த பல்லாயிரம் வெளிநாட்டு ஊழியர்களின் மனங்களில் எண்ண அலைகள் கட்டுக்கடங்காது ஆர்ப்பரித்து இருந்திருக்கலாம். அந்த அலையோசை, அவர்களை உளரீதியாகப் பாதித்துவிடாமல் தடுத்து, அவர்களின் மனநலம் பேண அரசாங்கமும் சமூக அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ப. பாலசுப்பிரமணியம்
கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொவிட்-19 தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து, தங்குவிடுதிகளில் 300,000க்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் அக்கட்டுப்பாட்டை விதித்தது. அது நடப்புக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில், ஊழியர்களின் மனநலம் குறித்து அலசி ஆராய்ந்து வந்தது தமிழ் முரசு செய்திக் குழு.
தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது, எதற்காக வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறோம் என்ற புரியாமை.
எழுத்து வடிவில் கொடுக்கப்பட்ட கொவிட்-19 சார்ந்த தகவல்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாததால் குழப்பம்.
மாற்றப்பட்ட இடத்தில் அடிப்படைத் தேவையான பொருள்கள் இல்லாமை, வேலை மற்றும் சம்பள விவகாரங்கள் குறித்த பதற்றம்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, தாய்நாட்டில் மோசமடையும் கிருமிப் பரவல் தங்களின் குடும்பத்தைப் பாதித்துவிடுமோ என்ற அச்சம்.
தங்குவிடுதிகளில் சென்ற ஆண்டு முடக்கநிலை அறிவிக்கப்பட்டதும் அரசு சாரா சமூக நல அமைப்புகள், மனிதவள அமைச்சுடன் அணுக்கமாகச் செயல்பட்டு தொடக்கச் சவால்களைச் சமாளிக்க உதவின.
அவற்றுள் ஒன்றான ஹெல்த்செர்வ் அமைப்பு, கடந்தாண்டு ஜூலை மாதம் வரை, வாரத்தில் மூன்று முறை மெய்நிகர் முறையில் ஆலோசனை வழங்கி வந்தது.
குறிப்பாக, இந்திய ஊழியர் ஒருவர் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கூ தெக் புவாட் மருத்துவமனையில் தமது உயிரை மாய்த்துக்கொண்டது பரவலாகப் பேசப்பட்டது.
அச்சமயம் ஹெல்த்செர்வ் அமைப்பின் தொண்டூழிய ஆலோசகர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வதற்கான காரணங்களைக் கண்டறியும் பணியில் இறங்கினர்.
உயிரை மாய்த்துக்கொண்டவர்க்கு நெருக்கமானவர்களும் சக ஊழியர்களும் மனத்தளவில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதை உணர்ந்து, அவர்களுக்கும் ஆலோசனை வழங்க முனைந்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆண்டு இறுதிவரை, ஏறக்குறைய 1,000 ஆலோசனை அமர்வுகளில் தொண்டூழியர்கள் ஈடுபட்டனர்.
“வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது அல்லது ஒரே அறையில் தனிமையில் இருப்பது வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சவாலாக விளங்கியது. தாயகத்தில் நடந்த குடும்ப விஷயங்களும் திருமணம் அல்லது குடும்ப உறுப்பினரின் மறைவுக்காகத் தாயகம் திரும்ப முடியாமல் போனதும் மனஉளைச்சலுக்கு வித்திட்டது,” என்றார் ஹெல்த்செர்வ் தொண்டூழிய ஆலோசகர் திருமதி துர்கா அறிவன், 40.
இப்படி திருமணத்திற்காகக் காத்திருந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர், தமக்கு வந்த ஒரு நோய் காரணமாக தம் உயிரையே மாய்த்துக்கொள்ள எண்ணம் கொண்டு இருந்தார்.
அந்நோயைக் குணப்படுத்த முடியும் என்று திருமதி துர்கா அந்த ஊழியருக்கு ஒரு மாத காலமாக நம்பிக்கை கொடுத்தார். இன்று அந்த ஊழியர் தாயகம் திரும்பி, குணப்படுத்தக்கூடிய நோய்க்கு சிகிச்சை பெற்றவாறு, திருமணமும் புரியவுள்ளார்.
ஹெல்த்செர்வ் அமைப்பின் உதவியை நாடும் ஊழியர்களில் ஏறக்குறைய 45% அபாய நிலையில் உள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் தம்மைத் தாமே காயப்படுத்திக்கொள்ள அல்லது உயிரை மாய்த்துக்கொள்ளும் சாத்தியம் உடையவர்களா என்று கணிக்கப்பட்டது. அதில் அதிகமான இந்திய ஊழியர்கள் இடம்பெறுகின்றனர் என்று ஹெல்த்செர்வ் அமைப்பு தெரிவித்தது.
“கொரோனா தொற்று ஒருவரிடம் நிரந்தரமாக இருந்துவிடாது. சக ஊழியருடன் அதிக பழக்கம் இல்லாவிட்டாலும், அவரிடம் நலம் விசாரிக்கும்போது தமது பிரச்சினைகளை அவர் பகிர்ந்துகொள்ளலாம், இதனால் அவரது மனஅழுத்தம் குறைய வாய்ப்புள்ளது,” என்றார் ஹெல்த்செர்வ் அமைப்பின் மனநல ஆலோசனை சேவைகள் பிரிவின் தலைவர் திரு ஜஸ்டின் பால்.
“சவால்மிக்க சூழலில் இருந்து விடுபடக்கூடிய மீள்திறனை வெளிநாட்டு ஊழியர்கள் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன,” என்று அவர்களுடன் இணைந்து செயல்பட்ட அனுபவத்தை திரு ஜஸ்டின் பகிர்ந்துகொண்டார்.
குடும்பத்தைக் காண ஏக்கம்
கட்டுமான ஊழியர் ம.அ. ரஞ்சித்குமார், 27, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்.
துவாஸ் பகுதியில் இவர் தங்கி இருக்கும் வெளிநாட்டு ஊழியர் விடுதியில் ஏறக்குறைய 80 பேர் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தங்குவிடுதிகளில் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள் நடப்பிற்கு வர, ‘AGWO’ அமைப்பின் தொண்டூழியர்கள் மாதமிருமுறை தங்களைத் தொடர்புகொண்டு, தேவையான பொருள்களை வாங்கித் தர உதவியதாக திரு ரஞ்சித் சொன்னார்.
முன்பு தமது பிரச்சினைகள் குறித்து எவரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் தானே சமாளித்துக்கொள்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்த அவர், இப்போது தொண்டூழியர்களிடம் மனம்விட்டு பேசப் பழகிக்கொண்டார்.
“தஞ்சாவூரிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகாலம் ஆகிவிட்டது. தற்போதைய நிலையில் குடும்பத்தினரின் நலன் குறித்தே மனஉளைச்சல் ஏற்படுகிறது. அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கமும் உள்ளது,” என்றார் திரு ரஞ்சித்.
விடுதிகளில் உடற்பயிற்சிக்கூடம் போன்ற வசதிகளை உருவாக்கினால் அது சக ஊழியர்களுக்கு உதவும் என்று அவர் நம்புகிறார்.
அவரைப் போன்றே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, உடல் நலம் தேறிய இன்னோர் இந்திய ஊழியர் கு.தினேஷ், 28.
முன்பு ஜூரோங் பகுதியில் பெரிய தங்குவிடுதியில் இருந்த திரு தினேஷ், கடந்த பிப்ரவரியில் பாசிர் ரிஸ்ஸில் அமைந்துள்ள தமது நிறுவனத்தின் தங்குவிடுதிக்கு இடம் மாறினார்.
அங்கிருக்கும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று கூறும் அவர், எதிர்காலத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கடைத்தொகுதி, வழிபாட்டுத்தலம் ஆகியவற்றுக்குச் சென்று வர அனுமதி கொடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று சொன்னார்.
மனநலம் பேண...
சென்ற ஆண்டு நடுப்பகுதியில் ஹெல்த்செர்வ் அமைப்பின் மெய்நிகர் சந்திப்புத்தளம் வாயிலாக வாரம் மும்முறை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கும் தொண்டூழியத்தில் ஈடுபட்டார் பிராமிசஸ் (வின்ஸ்லோ) மருந்தகத்தின் மூத்த மனநல மருத்துவர் டாக்டர் ஜேக்கப் ராஜேஷ் (படம்).
தனிமை உணர்வு, நம்பிக்கை இழத்தல், வேலையும் வருமானமும் பறிபோய்விடுமோ என்ற பதற்றம், வெளிநாட்டில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் தங்களின் நலம் பற்றிக் கவலை போன்ற உணர்வுகளை ஊழியர்கள் அனுபவித்ததாக டாக்டர் ராஜேஷ் குறிப்பிட்டார்.
“சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பிவிடுவரோ என்ற ஐயமும் அவர்களுக்கு இருந்தது. விடுதிகளில் பொழுதுபோக்கு வசதிகள் இருப்பது மனநலம் பேண வழிவகை செய்யும். ஆங்கிலம் கற்றல் போன்ற இணையம்வழி தாமாகவே கற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தித் தரலாம். விடுதி நடத்துநர்கள் வெளிநாட்டு ஊழியர்களின் உளவியல் தேவைகளைப் புரிந்துகொள்வதும் அவர்களின் பிரச்சினைகளைச் செவிமடுப்பதும் முக்கியம். கலை, கைவினை, இசை சார்ந்த நடவடிக்கைகளும் உதவும். எடுத்துக்காட்டாக, வண்ணம் தீட்டும் பொருள்களை அவர்களுக்கு வழங்கி, படம் வரையச் சொல்லலாம். https://www.facebook.com/Art4SGMW/ என்ற சமூக ஊடகப் பக்கம் வழியாக ஓவியப் போட்டியும் நடத்தப்படுகிறது,” என்றார் டாக்டர் ராஜேஷ்.
உணர்வுகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளாப் போக்கு
பெரும்பாலான இந்திய, பங்ளாதேஷ் ஊழியர்கள் தங்களது உணர்ச்சிகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதில்லை என்றார் AGWO என்ற வெளிநாட்டு ஊழியர் நல்வாழ்வு இயக்கத்தின் தோற்றுவிப்பு உறுப்பினர் திரு சாமுவேல் கிஃப்ட் ஸ்டீபன் (கீழ்ப்படத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவருடன்).
பெரும்பாலும் தமது இயக்கத்தின் உதவி எண்ணை அழைக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், உடல்நலம், உணவுப்பொருள்கள் தொடர்பில் உதவி கோருவர் என்றும் ஆனால் மனநலம் குறித்துப் பேசுவதில்லை என்றும் திரு சாமுவேல் சொன்னார்.
மனநலப் பிரச்சினை இருப்போர்க்கு உதவ, ஒவ்வொரு தங்குவிடுதியிலும் ஓரிரு வெளிநாட்டு ஊழியர்களுக்கு சக ஊழியர்களிடம் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான அறிகுறிகளைக் கண்டறியும் உத்திகளைக் கற்றுக்கொடுத்து, ஐயம் தரும் விதமாக நடந்துகொண்டால் உடனடியாக தங்களைத் தொடர்புகொள்ளும் முறையை AGWO கையாள்கிறது.
தற்போது வெளிநாட்டு ஊழியர்கள் ஏறத்தாழ 150 பேர், தங்களது தங்குவிடுதிகளில் மனநலத் தூதர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
“எங்களது அனுபவத்திலிருந்து, அபாய மனநிலையில் இருக்கும் பத்துப் பேரில் ஒருவர்தான் உதவி எண்ணுக்கு அழைப்பார். எஞ்சியோர் தாமாகவே காயப்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு,” என்றார் அவர்.
தக்க நேரத்தில் செயல்பட்டதில், துவாஸ், உட்லண்ட்ஸ் பகுதிகளில் வசிக்கும் இரு வெளிநாட்டு ஊழியர்களை உயிரை மாய்த்துக்கொள்வதில் இருந்து தடுத்துவிட்டோம் என்றார் திரு சாமுவேல்.
வெளிநாட்டு ஊழியர்களின் மனநலம் பேண, கிரிக்கெட் போட்டி போன்ற வெளிப்புற நடவடிக்கைகளையும் ‘கேரம்’ விளையாட்டு போன்ற உள்ளக நடவடிக்கைகளையும் AGWO நடத்தியது.
இணையம் வழியாக உடற்பயிற்சி உத்திகளை வெளிநாட்டு ஊழியர்களிடம் பகிர்ந்துகொண்டு, அவர்களின் உடற்பயிற்சிக் காணொளிகளை ‘வாட்ஸ்அப்’ செயலி வழியாக அனுப்பச் செய்து, ரொக்கப் பரிசுகளை வெல்லும் போட்டிகளும் இடம்பெற்றன.
இதுபோன்ற நடவடிக்கைகள், ஊழியர்களைத் தங்களது பிரச்சினைகளில் இருந்து மடைமாற்றி, நேர்மறையான சிந்தனைக்குத் திசைதிருப்ப உதவுவதாகக் கூறப்படுகிறது.
தங்களது வேலை அனுமதி அட்டை முடியும் தறுவாயில், மற்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர ஊழியர்கள் அனுப்பும் விண்ணப்பம் மனிதவள அமைச்சால் நிராகரிக்கப்படும்போது, அது அவர்களிடம் பெரும் மனஅழுத்தத்தை உண்டாக்குகிறது. ஏனெனில், இன்னொரு வேலை கிடைக்காமல் போனால் அவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றார் ‘TWC2 (Transient Workers Count Too)’ என்ற வெளிநாட்டு ஊழியர் நல அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருவாட்டி கிறிஸ்டின் பெலி.
நீரிழிவு போன்ற நாட்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் குறித்து ஊழியர்கள், முதலாளிகளிடம் தெரிவிப்பதில்லை. ஏனெனில், சொன்னால் தாயகத்திற்கு அனுப்பி விடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுவதாகக் கூறிய திருவாட்டி கிறிஸ்டின், அதற்கான மருந்தைத் தாயகத்திலிருந்து அவர்கள் வரவழைத்துக்கொள்வது வழக்கம் என்றும் சொன்னார்.
தங்குவிடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டதால் ஊழியர்கள் மருந்தைப் பெறுவது சிரமமாகிறது என்றும் அதனால் தங்களது அமைப்பு கூடுதலான ஊழியர்களுக்கு நாட்பட்ட நோய்களுக்கான மருத்துவத் தேவைகளுக்கு உதவி வருகிறது என்றும் அவர் கூறினார்.
ஊழியர்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய அமைச்சு
மனிதவள அமைச்சின் ‘ஏஸ் (Assurance, Care & Engagement Group)’ பிரிவு, வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
இரண்டாம் கட்ட தளர்வு (அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை) அறிவிக்கப்படுமுன், தங்குவிடுதிகளில் சமைக்கவும் விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. இதர பங்காளிகளுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதும் நடப்பில் இருந்தது.
மேலும், வெளிநாட்டு ஊழியர்களுக்கான பொழுதுபோக்கு நிலையத்திற்கு வாரத்தில் மூன்று முறையாவது ஊழியர்கள் செல்ல முடிந்தது.
ஆனால் அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி, பொழுதுபோக்கு நிலையத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால், பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில், தங்குவிடுதியில் உள்ள பேரங்காடிக்குச் செல்வது போன்றவற்றுக்கான அனுமதி தொடர்கிறது.
சமூகப் பங்காளிகளுடன் இணைந்து இணையவழிப் போட்டிகள், கற்றல் வாய்ப்புகளை ஊழியர்களுக்கு ‘ஏஸ்’ பிரிவு வழங்கி வருகிறது. மனநல உதவி தொடர்பான தகவல்கள், ‘FWMOMCare’ செயலி மூலம் ஊழியர்களிடம் பகிரப்படுகிறது.
கொவிட்-19 சூழல் மேம்பட்டதும், பொழுதுபோக்கு நிலையத்திற்குச் செல்ல அனுமதிக்கவும் படிப்படியாக இன்னும் அதிக பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவும் திட்டமுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்காக அரசாங்கம் புதியதொரு சுகாதாரக் கட்டமைப்பை இன்னும் சில மாதங்களில் ஏற்படுத்தவுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் நிலையம்
வெளிநாட்டு ஊழியர் நிலையம் (MWC) 24 மணி நேர தொலைபேசி உதவி எண்ணுக்கு அழைக்கும் சேவையை ஊழியர்களுக்கு வழங்குகிறது. இதில் வெளிநாட்டு ஊழியர்களின் தாய்மொழியில் பேசக்கூடியவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நாள்தோறும் 1,000 காணொளித் தொடர்புகள் மூலமாக உதவி தேவைப்படும் ஊழியர்களைச் சென்றடையும் முயற்சியில் நிலையம் இறங்கியது.
ஊதியம் தரப்படாமை, முறையற்ற வேலை அனுமதி அட்டை ரத்து உள்ளிட்ட பிரச்சினைகளை மனிதவள அமைச்சு அதிகாரிகள் தீர்க்கவும் அவை வழி ஏற்படுத்திக் கொடுத்தன.
இவ்வாறு பாதிப்படைந்த ஊழியர்களுக்கு நிதி ஆதரவு வழங்கவும் நிலையம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது.
தனது ஃபேஸ்புக் பக்கம் மூலமாக கற்றல் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஊழியர்கள் பங்குபெறவும் நிலையம் வழிவகுத்துள்ளது.
கடந்த மே தின வெளிநாட்டு ஊழியர் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழக நடிகை பவித்ரா லட்சுமியும் பாடகர் அறிவும் அத்தளத்தில் இணைந்தனர். நேரலையாக ஒளிபரப்பப்பட்ட அந்நிகழ்ச்சியை ஏறத்தாழ 58,000 பேர் பார்வையிட்டனர்.
தொண்டூழியர்கள் தேவை
ஹெல்த்செர்வ் (Healthserve) அமைப்பு 2006ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ பராமரிப்பு, மனநல ஆலோசனை, சமூக ஆதரவு எனப் பல்வேறு சேவைகளை வழங்கும் தொண்டூழிய அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான அவசர உதவி எண்ணை நாள்தோறும் 24 மணி நேரமும் செயல்படுத்த தொண்டூழியர்கள் தேவை. அவர்கள் மாதம் நான்கு மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரத்திற்கு தொண்டூழியத்தில் ஈடுபடலாம்.
குறைந்தது ஓராண்டு காலம் இதில் ஈடுபட கடப்பாடு கொண்டு இருப்பது உகந்தது. தொண்டூழியம் புரிய விரும்புவோர் குறைந்தது 23 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
தொண்டூழியப் பணியை ஆற்ற பயிற்சிக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
தமிழில் பேசக்கூடியவர்கள் அமைப்புக்குத் தேவை.
அவசரகாலத்தில் உதவும் தொண்டூழியராக, அவசர உதவி எண்ணுக்கு அழைப்போரின் பிரச்சினைகளைப் பொறுமையுடன் செவிமடுத்து, நிபுணத்துவ முறையில் அவர்களுக்கு உதவ வேண்டும்.
ஆங்கிலம் அல்லது உதவி கோரும் வெளிநாட்டு ஊழியர் இயல்பாகப் பேசக்கூடிய மொழியில் உரையாட வேண்டியிருக்கும்.
தொண்டூழியர்களாகச் சேர விரும்புவோர் volunteer@healthserve.org.sg என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகத் தொடர்புகொள்ளலாம்.