“எனக்கு தமிழ் படிக்க பிடிக்கும். பெற்றோர் நிறைய ஊக்குவிப்பார்கள். உறவினர்கள், நண்பர்களுடன் தமிழில் பேசுவது வழக்கம். வீட்டில் தமிழ் திரைப்படங்கள் பார்க்கவும் ஆசை,” என்று கூறினார் தமிழில் சரளமாகப் பேசும் தாரா தேவி ரோபன், 12.
டச்சு மொழி பேசும் தந்தை திரு மார்க் ரோபன், 52, தமிழ் பேசும் தாயார் 49 வயது பிரியா எனப்படும் திருமதி பாலசுப்பிரமணியம் வெங்கடப்பிரியா தம்பதியின் முதல் மகள் தாரா. ‘டேயி’ உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை ஒன்றில் படிக்கும் அவர் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தில் ‘ஏ’ தரம் பெற்றார்.
எதிர்காலத்தில் விளம்பரத் துறையில் வேலை செய்ய விரும்பும் தாரா, நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றான தமிழ் தெரிந்திருப்பதால் வேலை வாய்ப்புகள் உருவாகலாம் என்று குறிப்பிட்டார்.
“தமிழின் பெருமைகளை உணர்ந்த என் கணவர் அதை நம் பிள்ளைகளின் தாய்மொழியாக்க சம்மதித்தார். அதுபோக பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் ஒன்றாக படித்து, வளர தமிழ் ஏதுவாக இருக்கும் என்றும் அவர் கருதினார். சிறு வயதிலிருந்தே எனக்கு தமிழின் மீது ஆர்வம் உண்டு. என் பெற்றோர் ஆங்கிலத்தில் பேசமாட்டார்கள். தமிழோடு வளர்ந்ததால் என் வாழ்வில் அம்மொழிக்கு முக்கிய இடமுண்டு. தமிழ் ஒரு வர்த்தக மொழி என்பதைவிட அது ஓர் உணர்வுபூர்வமான மொழி எனலாம்,” என்றார் பிரியா.
தாரா வளரும்போது வீட்டில் தமிழ் பேசும் பணிப்பெண் இருந்த தால் அவர் தமிழ் மேம்பட்டது என்றார் பிரியா.
தாரா சரளமாகத் தமிழ் பேசி னாலும் அவரின் தங்கை 7 வயது நிலா தேவி தமிழில் சிரமப்படுவதாக குறிப்பிட்டார் திருமதி பிரியா.
“என் இளைய பெண் நிலா தமிழ் பேசுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இல்லை. ஆனால் இப்போது தமிழ் கற்பதற்குத் துணைப்பாட வகுப்புகளில் சேர்த்துள்ளேன். என்னிடம் பேசும்போது தமிழில் தான் பேசவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி இருக்கிறேன். தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ் புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறேன்,” என்று பிரியா குறிப்பிட்டார்.