தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் அனுபவத்தைப் பற்றி புகார் செய்யவோ அதைப் பற்றி நண்பர்களிடம் சொல்லவோ முடியாத நிலைக்கு 24 வயது ஷர்வேஷ் லக்ஷ்மணன் ஆளானார். அவர் சொல்வதை நம்புவார்களா என்ற அச்சமே அதற்குக் காரணம். தற்போது பாலின, பாலியல் மற்றும் பெண்கள் சார்ந்த முதுநிலைப் படிப்பை வான்கூவர் நகரில் மேற்கொண்டு வரும் இந்த சிங்கப்பூரர், சிங்கப்பூரின் பிரபல அமைப்பான 'மைனோரிட்டி வொய்ஸ்' இணை நிறுவனர்.
நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இவர், 'என்ன செய்வது? எப்படி உதவி நாடுவது? மருத்துவ உதவியை நாட வேண்டுமா?' போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவித்தார். பெற்றோரிடம் நடந்ததைக் கூறியபோது, "ஆண்களை எப்படி பாலியல் பலாத்காரம் செய்யமுடியும்? அதை நிறுத்த நீ ஏதாவது செய்திருக்க வேண்டும்!" என்ற பதில் வந்தது, இன்றும் ஷர்வேஷின் மனதில் நிற்கிறது.
சுற்றியிருப்போர் முதலில் பாதிக்கப்பட்டவர் கூறுவதை நம்பவேண்டும். பாதிக்கப்பட்டவரின் நலனை உறுதி செய்யவேண்டும்.
சிங்கப்பூரில் பாலியல் சார்ந்த கல்வி சிறுவயதிலிருந்தே துவங்க வேண்டும் என்று நம்புகிறார் ஷர்வேஷ். இளையர்களுக்குத் தகுந்த, போதிய தகவல்களைத் தருவது அவசியம் என்றார் அவர்.