பொங்கோல் வட்டாரத்தில் உள்ள பிடிஓ வீட்டுத் திட்டம் முடியும் தேதி ஓராண்டுக்கு மேலாக தாமதம் அடைந்ததால் அதில் வீடுகளை வாங்கியோருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) கூறியுள்ளது.
வாட்டர்வே சன்ரைஸ் 2 எனும் அத்திட்டத்தில் ஏழு அடுக்குமாடி புளோக்குகளும் அவற்றில் 1,014 வீடுகள் அமைந்திருக்கும். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் 94 பிடிஓ திட்டங்களில் ஓராண்டுக்கு மேல் தாமதம் அடைந்திருப்பது இத்திட்டம் மட்டுமே.
வீட்டின் விலை, ஒப்பந்தத்தின்படி வீட்டுச்சாவி ஒப்படைக்கப்படவேண்டிய தேதியைவிட எவ்வளவு காலம் தாமதம் ஏற்பட்டது என்பதைப் பொறுத்து இழப்பீடு தீர்மானிக்கப்பபடும் என்று வீவக நேற்று ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்சிடம் கூறியது.
இழப்பீட்டுத் தொகை $700க்கும் $10,500க்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் சராசரி இழப்பீட்டுத் தொகை $5,000 ஆக இருக்கும் என்றும் வீவக தெரிவித்தது.
அடுத்த ஆண்டு நான்காம் காலாண்டுக்கும் 2023ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வீடுகள் ஒப்படைக்கப்படும்.
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட வாட்டர்வே சன்ரைஸ் 2 திட்டம், இவ்வாண்டு முதல் அல்லது இரண்டாவது காலாண்டில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் திட்டத்தைக் குத்தகைக்கு எடுத்த லியன் ஹோ லீ கட்டுமான நிறுவனத்தின் மோசான செயல்பாட்டால் அதை அடுத்த ஆண்டு முதல் இரண்டு காலாண்டுகளுக்குள் முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. குத்தகை எக்ஸ்பேண்ட் கன்ஸ்ட்ரக்ட்ஷன் எனும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் கொவிட்-19 சூழல் ஏற்படுத்திய ஊழியர் பற்றாக்குறை, வேண்டிய கட்டுமானப் பொருட்கள் கிடைக்காதது போன்ற காரணங்களால் மேலும் தாமதம் ஆனது.