கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தில் ஒருபுறம் பல தொழில்கள் நலிவடைந்த போதும், இன்னொருபுறம் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு சூடுபிடித்த சில தொழில்களில் சரக்கு ஏற்றுமதி இறக்குமதியும் ஒன்று. இவ்வேளையில், அத்தொழிலில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களின் செயல் பாடுகள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சிலரின் கருத்துகளையும் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் விளக்கத்தையும் கேட்டறிந்து வந்தது தமிழ் முரசு.
கடுமையான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் கடந்த ஈராண்டுகளாக வெளிநாட்டிற்குச் செல்ல முடியாத சூழலில் இந்தியாவிலிருக்கும் தங்கள் உற்றார் உறவினருக்கு பொருள்களை அனுப்பிவைக்க சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் சேவைகளைப் பலர் நாடினர். ஆனால், லிட்டில் இந்தியாவின் கஃப் சாலையில் அதிகம் காணப்படும் இந்நிறுவனங்களை நாடிய வாடிக்கையாளர்களில் பலரும் மனவுளைச்சலும் ஏமாற்றமும் அடைந்ததாகப் புலம்பினர்.
காணாமல்போன நிறுவனம்
"கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு அனுப்பிய பொருள்கள் இன்னும் சென்று சேரவில்லை. இதுவரை பத்து முறைக்கு மேல் நிறுவனத்திற்கு நேரில் சென்று விசாரித்துவிட்டேன். சரக்குக் கொள்கலன் தாமதமாகச் சென்றுள்ளது, சுங்கவரி அலுவலகத்தின் பிடியில் உள்ளது, இன்னும் பத்து நாள்களில் சென்றுவிடும் என்பன போன்ற சாக்குப்போக்குகளை ஒவ்வொரு முறையும் கூறுகின்றனர். மாதங்கள் செல்லச் செல்ல நிறுவனத்தாரின் பதில்களில் உள்ள பொறுப்புணர்வும் பணிவும், பொருள்கள் சென்று சேரும் என்ற நம்பிக்கையும் குறைந்து, மனவுளைச்சலுக்கு ஆளாக்குகிறது," என்று குமுறினார் கட்டடப் பராமரிப்புத்துறைப் பொறியாளரான வை.இளஞ்சேரன், 40.
நண்பர்களின் பரிந்துரையின் பேரில் அந்நிறுவனத்தின்மூலம் தாம் பொருள்களை அனுப்பியதாக திரு இளஞ்சேரன் சொன்னார். ஐந்து ஆண்டுகளுக்குமுன் அதே இடத்தில் வேறு பெயரில் இருந்த நிறுவனம் வழியாக அனுப்பிய பொருள்களும் சென்று சேராத சூழலில் திடீரென ஒருநாள் அந்த நிறுவனம் மூடப்பட்டதை அடுத்து, காவல்துறையிடம் புகாரளித்தும் பயனில்லாமல் போனது என்றார் அவர்.
தம்மைப்போல் பலரும் அதே நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
பண்டிகைக்குமுன் பொருள்கள் சென்றுசேராததால் பரிதவிப்பு
நோன்பு பெருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள தம் குடும்பத்தினருக்கு புதிய ஆடைகள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் என பலவித பொருள்களையும் புதிதாக திறக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் வழியாக அனுப்பினார் ஷேக் அபுல், 52.
"2020ஆம் ஆண்டில் ஏறக்குறைய 135 கிலோ எடையுள்ள பொருள்களை அனுப்பி வைத்தேன். அவை கப்பல்மூலம் சென்று சேர்வதற்கு அதிகபட்சம் இரண்டு மாதங்களாகும் என்று அவர்கள் கூறியதால் நிச்சயம் நோன்பு பெருநாளுக்குள் சென்று சேர்ந்துவிடும் என்று நம்பினேன். ஆனால் பொருள்கள் சென்றுசேர ஏழு மாதங்கள் ஆயின," என்றார் திரு அபுல்.
ஒவ்வொரு முறையும் தனது பொருள்கள் எங்கே இருக்கின்றன, அவை எப்போது சென்று சேரும் என்று அபுல் விசாரித்தபோது, வெவ்வேறு காரணங்களைச் சொல்லிச் சரியான பதிலளிக்காமல் அந்தக் கடைக்காரர்கள் மழுப்பியதாகவும் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டபோது, அது பொருள்களை அனுப்புவதற்குச் செலவாகிவிட்டது என்று கூறி, தம்மை ஏமாற்றியதாகவும் வருந்தினார்.
ஆறு மாதங்களாகியும் சேராத பொருளும் பொறுப்பற்ற பதிலும்
புதிய சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றின் வழியாக இந்தியாவிலிருக்கும் தம் குடும்பத்தாருக்கு கிட்டத்தட்ட 800 வெள்ளி மதிப்புள்ள பொருள்களைச் சென்ற டிசம்பர் மாதத்தில் அனுப்பி வைத்த இல்லப் பணிப்பெண்ணான 48 வயது முத்துவேல் பரமேஸ்வரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
"என்னுடைய சொற்ப வருமானத்திலும் மிச்சம் பிடித்து வாங்கிய பொருள்களை அந்நிறுவனத்தை நம்பி அனுப்பி ஆறு மாதங்களாகிவிட்டன. பொருள்கள் எங்கே என்று கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள். பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று முறையிட்டாலும் முடியாது என்கிறார்கள். 'வேண்டுமானால் காவல்துறையிடம் புகார் செய்யுங்கள்' என்றும் சொல்கிறார்கள்," என்று கூறி, ஆதங்கப் பட்டார் திருவாட்டி பரமேஸ்வரி.
தாமதத்தால் பாதியில் நின்ற வீட்டுக் கட்டுமானப் பணிகள்
"இந்தியாவில் வீட்டுக் கட்டுமான பணிகளுக்காக இங்கிருந்து சுமார் 300 வெள்ளிக்கு 80 கிலோ எடையிலான மின்கம்பிகளைச் சென்ற அக்டோபர் மாதத்திலேயே அனுப்பி வைத்தேன். பொருள்கள் இன்னும் சென்று சேராததால் கட்டுமானப் பணிகள் தாமதமாகியுள்ளன," என்றார் கட்டுமானத்துறை ஊழியரான ரெத்தினம் மணிகண்டன், 25.
ஒரு நாளுக்கு 30 வெள்ளியைச் சம்பளமாகப் பெறும் இவர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் காக்கி புக்கிட்டில் அமைந்துள்ள தமது தங்குவிடுதியிலிருந்து லிட்டில் இந்தியாவரை சென்று, பொருள்களைப் பற்றி விசாரித்தும் பயனில்லை என்கிறார். சரியான தகவல்கள் கிடைக்கப்பெறாத சூழலில் தம்மைப்போல் பல வெளிநாட்டு ஊழியர்கள் அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களை நம்பி ஏமாந்தது இப்போதுதான் தெரிந்ததாகவும் அவர் கூறினார்.
நிலுவையில் நிற்கும் பொருள்கள்; நிறுவனத்தாரின் நிலைப்பாடுகள்
பல ஆண்டுகளாகச் சரக்கு ஏற்றுமதி இறக்குமதித் தொழில்செய்யும் நிறுவனங்கள், பொருளுக்கேற்ப கட்டணத்தைக் கணக்கிட்டு ஒரு கிலோவிற்கு ஏழு முதல் எட்டு வெள்ளிவரை கட்டணம் வசூலிக்கின்றன. சுங்க வரி, இதர பங்குதாரர்களுக்குச் சேரவேண்டிய பணம் போக, ஒவ்வொரு கிலோவிற்கும் ஏறக்குறைய ஒன்றரை வெள்ளி லாபம் பார்ப்பதாக சில நிறுவனங்கள் கூறின.
ஆனால், எந்தப் பொருளாக இருந்தாலும் ஒரு கிலோவிற்கு வெறும் மூன்றரை அல்லது நாலரை வெள்ளி என்று ஒரே விலையைச் சொல்லும் சில புதிய நிறுவனங்கள், பெரும்பாலும் தொழிலில் உள்ள அனைத்துப் பங்குதாரர்களுக்கும் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்துவிடுகின்றனர்.
இதனால், பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்புவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
"சில புதிய நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் குறைந்த விலையில் பொருள்களை வாங்கி அனுப்பும்போது, இந்தியத் துறைமுகத்தில் இருந்து பொருள்களைப் பெறும் நிறுவனங்கள் சுங்க வரி செலுத்த முடியாமல் தடுமாறுகின்றன. இதனால், பொருள்களைக் கொண்டு சேர்ப்பதில் தடங்கல்கள் ஏற்படுகின்றன," என்று 'எஸ்டி கார்கோ' நிறுவனத்தின் பொறுப்பாளர் காசிம் சரிபு, 33, கூறினார்.
"பொதுமக்களும் கட்டணம் மிக குறைவாக இருக்கின்றதே என்று நினைத்து, சரியில்லாத நிறுவனங்களிடம் பொருள்களைக் கொடுக்கும்போது, அவை குறித்த காலத்திற்குள் பத்திரமாகச் சென்றுசேர்வதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதுபோன்ற சில நிறுவனங்கள் பின்பற்றும் தவறான உத்திகளால் பல ஆண்டுகளாகச் சிறப்பாக இயங்கிவரும் நிறுவனங்களுக்கும் பொதுமக்களிடையே அவப்பெயர் ஏற்படுகிறது," என்றும் கூறி, திரு சரிபு வருத்தப்பட்டார்.
"சில வாடிக்கையாளர்களின் பொருள்கள் காலதாமதமாகச் சென்று சேர்ந்தால் அதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். விமானத்தில் ஏற்றப்படும் பொருள்களின் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால் அதைச் சரிசெய்ய மேலும் இரண்டு மூன்று நாள்கள் ஆகலாம். அதேபோல, கப்பல்வழி அனுப்பப்பட வேண்டிய பொருள்கள், சரியான சரக்குக் கப்பல் கிடைக்காவிடில் சிங்கப்பூர் துறைமுகங்களிலேயே 15 நாள்களில் இருந்து 20 நாள்கள்வரை தேங்கிவிட நேரிடும்," என்றார் 'ஸ்டார் கார்கோ' நிறுவனத்தின் 41 வயது நிறுவனர் திரு யூசுப் அலி.
அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், சில நேரங்களில் இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படும் பொருள்கள் இலங்கை வழியாகத் தூத்துக்குடித் துறைமுகத்தை அடைவதில் 10 முதல் 15 நாள்கள்வரை காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் திரு யூசுப் குறிப்பிட்டார். இருப்பினும், இதுபோன்ற எதிர்பாராச் சூழல்களைச் சமாளித்து வாடிக்கையாளர்களின் பொருள்களைச் சொன்னபடி 60 நாள்களுக்குள் சென்றுசேர்ப்பதே வழக்கம் என்றார் அவர்.
ஆனால், அதிக அளவில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் வேறு காரணங்களைக் கூறினர்.
"வாடிக்கையாளர்கள் சிலர் தங்கம் போன்ற அதிக விலைமதிப்புள்ள பொருள்களை எங்களுக்குத் தெரியப்படுத்தாமல் துணிகளுக்கு இடையிலும் வீட்டுப் பொருள்களுக்கு இடையிலும் மறைத்து வைக்கிறார்கள். ஆனால், சிங்கப்பூர் துறைமுகத்திலிருந்து இந்திய துறைமுகங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக சுங்கச் சோதனையில் பிரகடனப்படுத்தப்படாத பொருள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதனால், மொத்த கப்பலும் நிறுத்திவைக்கப்படுகின்றது," என்றார் ஒரு கடையின் நிறுவனர்.
காவல்துறையிடம் குவிந்த புகார்
2021 ஜனவரி - 2022 ஜூன் மாதத் தொடக்கம்வரை இரு நிறுவனங்களின்மீதே அதிக அளவில் புகார்அளிக்கப்பட்டுள்ளதாக 'கேஸ் (CASE)' எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது. 'தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ அண்ட் லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனத்தின்மீது 44 புகார்களும், 'இந்தியன் எக்ஸ்பிரஸ் கார்கோ அண்ட் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனத்தின்மீது 33 புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
'கேஸ்' அமைப்பை நாடிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் நான்கு முதல் 12 மாதங்கள்வரை பொருள்கள் சென்றுசேர காத்திருந்த பிறகே புகார் அளித்ததையும் பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவ்வித சரியான பதிலையும் அளிக்காததையும் 'கேஸ்' உறுதிசெய்தது.
அதே நேரத்தில், கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பதிவுகளின்படி, இரு நிறுவனங்களின் பங்குதாரரும் ஒருவர்தான் என்பதை 'கேஸ்' கண்டுபிடித்தது. இரு நிறுவனங்களையும் தொடர்புகொள்ள முயன்று தோல்வியுற்ற 'கேஸ்', வேறு சில வாடிக்கையாளர்களைப்போல் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது.
சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்துடனான தங்களது பிரச்சினைகளைத் தீர்க்க இயலாதவர்கள் 9795 8397 என்ற எண் அல்லது www.case.org.sg என்ற இணையத்தளம் வழியாக 'கேஸ்' அமைப்பிடம் உதவிகோரலாம்.
எவ்வளவு கட்டணம்? எத்தனை நாளாகும்?
சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானம் மற்றும் கப்பல் வழியாக சரக்குகளை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் வழியாக அனுப்பப்படும் பொருள்கள், ஏழு முதல் பத்து நாள்களுக்குள் அங்கு சென்றுசேர்வது வழக்கம்.
மாறாக, கப்பல் வழியாக அனுப்பப்படும் பொருள்கள் தமிழ்நாட்டிற்குச் சென்றுசேர
60 நாள்கள்வரை ஆகலாம். ஆனாலும், கப்பல்வழி அனுப்பப்படும் பொருள்கள்
30 முதல் 40 நாள்களுக்குள் தமிழ்நாட்டைச் சென்றடைந்து விடுவதாக சில நிறுவனங்கள் தெரிவித்தன.
பொருள்களை விமானம் வழியாக அனுப்பினால் கிலோவிற்கு பத்து வெள்ளி வரையும் கப்பல் வழியாக அனுப்புவதற்குக் கிலோவிற்கு மூன்று முதல் நான்கு வெள்ளி வரையும் கட்டணமாக வசூலிப்பதாக அந்நிறுவனங்கள் கூறின.