ரியாத்: லயனல் மெஸ்ஸி, கரிம் பென்சிமா, லூக்கா மோட்ரிச், ஹியூகோ லோரிஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட முன்னணிக் காற்பந்து ஆட்டக்காரர்களைத் தங்கள் பக்கம் இழுக்க முன்னணி சவூதி அரேபியக் குழுக்கள் முயன்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செர்ஜியோ ராமோஸ், யோர்டி அல்பா, செர்ஜியோ புஸ்கெட்ஸ், இங்கோலோ கான்டே, ஏங்கல் டி மரியா, ரொபர்ட்டோ ஃபிர்மினோ ஆகியோரும் அப்பட்டியலில் அடங்குவர் என்று கூறப்படுகிறது.
மெஸ்ஸியையும் பென்சிமாவையும் ஒப்பந்தம் செய்வதற்காக சவூதி அதிகாரிகள் பாரிசுக்கும் மட்ரிட்டுக்கும் சென்றுள்ளதாக அண்மைய தகவல்கள் கூறுகின்றன.
நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த பருவத்தில் பெருந்தொகைக்கு அல் நசர் குழுவுடன் இணைந்தார். அதனால், தங்களின் தொழில்முறை காற்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள முன்னணி வீரர்கள் பலரும் சவூதிக்கு இடமாற ஆர்வம் காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, உலகத்தரமான விளையாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என்று சவூதி அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதாக ‘ஏஎஃப்பி’ செய்தி வெளியிட்டுள்ளது.
“மிக வலிமையான, போட்டித்தன்மைமிக்க லீக்கையும் சவூதி காற்பந்துக் குழுக்களின் நிலையையும் உயர்த்துவதே இலக்கு,” என்று அந்த அதிகாரி கூறினார்.