பார்சிலோனா: ஸ்பானிய லீக் காற்பந்தாட்டத் தொடரில் 39 ஆட்டங்களாக பார்சிலோனோ பெற்று வந்த தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது ரியால் மட்ரிட். நீண்ட நேரத்திற்குப் பிறகு, 56வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோல் விழுந்தது. பார்சிலோனாவின் பிக்கே அந்த கோலை அடித்தார். அந்த கோலை 62வது நிமிடத்தில் சமன் செய்தார் கரீம் பென்சிமா. இப்பருவத்தில் ஸ்பானிய லீக்கில் இதுவரை 21 கோல்களை அடித்துள்ளார் கரீம் பென்சிமா. இவர் கோல் கணக்கில் முதல் நிலையில் இருக்கும் ரொனால்டோவைவிட எட்டு கோல்கள் பின்தங்கியுள்ளார்.
இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்றதால், ரியால் மட்ரிட் குழுத் தலைவர் செர்ஜியோ ரமோஸ் 83வது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார். ஆனால், அடுத்த இரண்டு நிமிடத்தில் கோல் அடித்தார் ரியால் குழுவின் நட்சத்திர வீரர் ரொனால்டோ. எனவே 2=1 என்ற கோல் கணக்கில் வென்றது ரியால் மட்ரிட். வெற்றிக்கு வித்திட்ட ரொனால்டோவின் இந்த கோலால் ரியால் மட்ரிட் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பார்சிலோனாவைவிட ஏழு புள்ளிகள் பின்தங்கியுள்ள ரியால் மட்ரிடுக்கு இன்னும் ஏழு ஆட்டங்கள் விளையாட வேண்டியுள்ளது.
இந்நிலையில், ஸ்பானிய லீக்கை ரியால் மட்ரிட் வெல்லும் வாய்ப்புள்ளதாக கேரத் பேல் நம்பிக்கை தெரிவித்தார். "லீக் தொடரைக் கைப்பற்ற வேண்டுமானால், நாங்கள் இந்த ஆட்டத்தை வெல்லவேண்டிய நிலை இருந்தது," என்றார் பேல். இந்த வெற்றி, இப்பருவத்தில் இனி வரும் ஆட்டங்களைச் சிறப்பாக விளையாட நம்பிக்கை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
ரியால் மட்ரிட் குழுவிற்கான இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார் ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்