உல்ஃப்ஸ்பர்க்: சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர் விருதை பத்து முறை தனதாக்கிக் கொண்ட ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழு நேற்று அதிகாலை நடைபெற்ற இந்தப் பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் உல்ஃப்ஸ்பர்க் அணி யிடம் 0=2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் உல்ஃப்ஸ்பர்க்கின் ஆண்ட்ரே ஷுருல்ல என்ற விளையாட்டாளரை ரியாலின் கேசமிரோ தடுக்கி விட்டதாகக் கூறி உல்ஃப்ஸ்பர்க்குக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அதை கோல் வலைக்குள் புகுத்தி தமது அணிக்கு முன் னிலை பெற்றத் தந்தார் ரிக்கார்டோ ரொட்ரிகெஸ்.
இதற்குப் பின்னர் ரியாலிட மிருந்து முனைப்பான ஆட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர் களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரியால் மட்ரிட் குழுவின் மோசமான தற்காப்பு ஆட்டத்தால் உல்ஃப்ஸ்பர்க்குக்கு கிடைத்தது அடுத்த வாய்ப்பு. அந்த அணியின் புருணோ ஹென்ரிக்கே கொடுத்த பந்தை மேக்ஸ் ஆர்னால்ட் ரியாலின் கோல் வலைக்குள் புகுத்தி இரண்டாவது கோலை பெற்றுத் தந்தார். இந்த ஆட்டத்தில் ரியால் மட்ரிட் கோல் போடும் வாய்ப்புகள் என பெரிதாகக் கூறிக் கொள்ளும் அளவுக்கு உருவாக்கவில்லை என்று கூறப்பட்டாலும் உல்ஃப்ஸ்பர்க் தனது முதல் கோலை போடும் முன்னர் ரியாலுக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று மறுக்கப்பட்டதாக பிபிசி தகவல் தெரிவிக்கிறது.
இதற்கு முன்னர் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதியில் ரியால் தோற்றது 2004ஆம் ஆண்டில். அத்துடன், முதல் சுற்று ஆட்டத்தில் இரண்டு கோல் பின்னடைவை சரிசெய்து அடுத்த சுற்றுக்கு ரியால் முன் னேறியது 1987இல் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் தொடங்குமுன் பேசிய உல்ஃப்ஸ்பர்க் நிர்வாகி டீட்டர் ஹெக்கிங், தமது அணி வீரர்கள் ரியால் விளையாட்டாளர்களுக்கு தொல்லை கொடுப்பர் என்று கூறினார்.
நேற்றைய ஆட்டத்தில் ரியால் மட்ரிட்டின் நட்சத்திர விளையாட்டாளரான கிரிஸ்டியானோ ரொனால்டோவின் (நீல நிற சீருடையில்) கோல் போடும் முயற்சியை தடுக்கிறார் பிரேசில் நாட்டுத் தற்காப்பு ஆட்டக்காரரான டாண்டே. படம்: ஏஎஃப்பி