சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்கான அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியும் ஸ்பெயினின் ரியால் மட்ரிட்டும் தகுதி பெற்றுள்ளன. பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவுக்கு எதிரான இரண்டாம் சுற்று காலிறுதி ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் சிட்டி வென்று முதன்முறையாக சாம்பி யன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையில் நடைபெற்ற முதல் சுற்று காலிறுதி ஆட்டம் 2=2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்திருந்தது. எனவே, ஒட்டுமொத்த கோல் கணக்கு அடிப்படையில் சிட்டி 3-2 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.
இரண்டாம் சுற்று காலிறுதி ஆட்டத்தின் முற்பாதி ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவின் கோல்காப்பாளர் சிட்டியின் செர்ஜியோ அகுவேரோவை பெ னால்டி எல்லைக்குள் கீழே விழச் செய்தார். இதனால் சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கோல் நிச்சயம் என்று கொண்டாட ஆரம்பித்த சிட்டி ரசிகர்களுக்கு ஏமாற்றம் காத்துக்கொண்டிருந்தது. பெனால்டி வாய்ப்பை எடுத்த அகுவேரோ பந்தை வலைக்குள் சேர்க்கத் தவறினார். மறுமுனையில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவின் இப்ராஹிமோவிச் ஃப்ரீ கிக் மூலம் அனுப்பிய பந்தை சிட்டியின் கோல் காப்பாளர் ஜோ ஹார்ட் அபாரமாகத் தடுத்து நிறுத்தினார்.