மும்பை: வான்கடே விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தோற்கடித்தது. முதலில் பந்தடித்த பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 37 ஓட்டங்களையும் அணித்தலைவர் விராத் கோஹ்லி 33 ஓட்டங்களையும் எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த மும்பை அணிக்கு அருமையான தொடக்கம் தந்தார் அணித்தலைவர் ரோகித் சர்மா.
அவர் 44 பந்துகளில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்சருடன் 64 ஓட்டங்களைக் குவித்தார். ஐந்தாவது வீரராகக் களம் கண்ட கைரன் பொல்லார்ட் 19 பந்துகளில் 39 ஓட்டங்களை விளாச, இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிக்கோட்டைத் தொட்டது மும்பை அணி. போட்டிக்குப் பின் பேசிய ரோகித், "க்ருணால் பாண்டியா, ஹர்பஜன் சிங் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியின் முக்கிய ஆட்டக்காரர்களை வெளியேற்றினர். அதுதான் எங்கள் திட்டம். அது நன்றாகவே செயல்படுத்தப்பட்டது," என்றார்.