லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கிறிஸ்டல் பேலஸ் தகுதி பெற்றுள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் கிறிஸ்டல் பேலஸ் முதன்முறையாக எஃப்ஏ கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டி ஆட்டத்தில் பலம் பொருந்திய மான்செஸ்டர் யுனைடெட் குழுவை பேலஸ் சந்திக்கும். நேற்று முன்தினம் வெம்பிளி விளையாட்டரங்கத்தில் நடை பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் வாட்ஃபர்ட் குழுவை பேலஸ் 2=1 எனும் கோல் கணக்கில் தோற் கடித்தது. ஆட்டம் தொடங்கி ஆறு நிமிடங்களிலேயே பேலஸ் குழுவின் முதல் கோல் புகுந்தது.
கார்னர் வாய்ப்பு மூலம் வந்த பந்தை நோக்கிச் சீறிப் பாய்ந்த யானிக் பொலாசி, அதைத் தலையால் முட்டி வலைக்குள் புகுத்தினார். அவர் அனுப்பிய பந்து வாட்ஃபர்ட் கோல்காப்பாளரை மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே கோல் போட்ட பேலஸ் அதனைத் தொடர்ந்து மெத்தனமாக இருந்து விடாமல் கோல் வேட்டையில் இறங்கியது. இருப்பினும், முற்பாதி ஆட்டத் தில் அதனால் ஒரே ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது.
ஆட்டத்தின் 55வது நிமிடத் தில் வாட்ஃபர்ட் ஆட்டத்தைச் சமப்படுத்தியது. சுதாரித்துக்கொண்ட பேலஸ் முனைப்புடன் விளையாடி 61வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டது. வாட்ஃபர்ட்டின் தற்காப்பு சிறிது நேரம் கண்ணயர்ந்தது போல் தென்பட, பேலசின் விக்கம் தலையால் முட்டி அனுப்பிய பந்து, பேலசை இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைத்தது.