சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் காற்பந்து நட்சத்திரங்களான சுந்தரமூர்த்தி, ஃபாண்டி அகமது ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இரண்டு வாரங்களுக்குமுன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகினார் பெர்ன் ஸ்டாங்க. இதையடுத்து, மீண்டும் ஒரு வெளிநாட்டவரையே அப்பதவியில் அமர்த்த சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் (எஃப்ஏஎஸ்) திட்டமிட்டிருந்ததாகக் கூறப் பட்டது. ஆனால், தேசிய குழுவின் மூத்த வீரர்களில் பலர் சுந்தரம் மற்றும் ஃபாண்டிக்கு ஆதரவாகக் கருத்துரைத்ததால் எஃப்ஏஎஸ் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டதாக நம்பப்படுகிறது.
2012ஆம் ஆண்டு மலேசிய சூப்பர் லீக்கில் மீண்டும் அடி எடுத்து வைத்த லயன்ஸ்XII குழு வின் பயிற்றுவிப்பாளராக இரு ஆண்டுகள் செயல்பட்ட திரு சுந்தரம், தமது 2வது ஆண்டில் குழுவைப் பட்டம் வெல்ல வைத்தார்.