லாகூர்: அண்மை காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமாகச் செயல்பட்டு வருவதற்கு அவ்வணி வீரர்கள் பலருக்குப் போதிய படிப்பறிவு இல்லாததும் ஒரு காரணம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷாரியர் கான் தெரிவித்துள்ளார். குவெட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போதைய வீரர்களில் டெஸ்ட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் ஒருவர் மட்டுமே பட்டப் படிப்பு முடித்திருப்பவர் என்று சுட்டிக் காட்டினார்.
"பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளவர்களில் மிஸ்பாவைத் தவிர்த்து ஒருவர்கூட பட்டதாரி இல்லை. நன்கு படித்த வீரர்கள் இல்லாததே அணியின் அண்மைய மோசமான செயல்பாடுகளுக்கு முதன்மையான காரணம்," என்றார் அவர். "எதிர்காலத்தில் எங்களால் முடிந்த அளவிற்கு படித்த வீரர்களை அணியில் தேர்வு செய்யவும் ஊக்கப்படுத்தவும் முயலுவோம். இப்போதுள்ள திறனாளர்களையும் மெருகூட்டுவோம்," என்றும் அவர் சொன்னார்.
மேலும், ஒழுங்கு நடத்தைகளை, உடற்தகுதியைப் பொறுத்தமட்டில் எந்தவிதச் சமாதானமும் செய்து கொள்ளக்கூடாது என்று வாரியம் முடிவு செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒழுக்கமாகவும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ளாததால்தான் அகமது ஷெஷாத், உமர் அக்மல் ஆகிய இருவருக்கும் அணியில் வாய்ப்பு மறுக்கப் பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.