ஐந்து முறை உலகக் கிண்ண வெற்றியாளரான பிரேசிலை யூரோ காற்பந்து தொடரிலிருந்து வெளியேற்றியது சர்ச்சையை உண்டாக்கிய பெருவின் கோல். கிட்டத்திட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, காலிறுதிக்குக்கூட முன்னேறாமல் குழுக்களுக்கிடையிலான ஆட்டத்திலேயே பிரேசில் நடைகட்டியது இதுவே முதல் முறையாகும். கடந்த 1985ஆம் ஆண்டு முதல் பிரேசிலை வீழ்த்த முடியாத பெரு, நேற்று நடந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் இல்லாமலேயே முடிந்தது. பெருவின் மாற்று ஆட்டக்காரராக பிற்பாதி ஆட்டத் தில் களமிறங்கிய ராவுல் ருடியஸ் 75வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார். ஆனால், அவர் போட்ட கோலுக்கான பந்து கைகளில் பட்டுச் சென்றதாக பிரேசில் குற்றம் சாட்டியது. ஆனால், அதுபற்றி தனது உதவியாளர்களுடன் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கலந்தாலோசித்த நடுவர் அதை கோல் என்று உறுதிப்படுத்த வெற்றி பெரு பக்கம் சாய்ந்தது. அதன்பிறகு காயம் பட்டதற்கான கூடுதல் நேர ஆட்டத்தின்போது, பெருவின் கோலைச் சமன் செய்யக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டார் பிரேசில் ஆட்டக்காரர் எலியஸ். அவர் அடித்த பந்து வலைக்குள் செல்லாமல் கோல்காப்பாளரை மட்டும் தொட்டு சென்றது.
காலிறுதிக்குள் நுழைய ஒரு புள்ளி மட்டுமே வேண்டும் என்ற நிலையில், சமன் செய்திருந்தாலேயே பிரேசிலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும் இந்த தோல்வியால், பிரிவு பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது பிரேசில். தோல்வி பற்றி பேசிய துங்கா, "வெற்றி பெறவில்லை என்றால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், நாங்கள் என்ன செய்கிறோம் என்று எங்களுக்குத் தெரியும்," என்றார். மற்றோர் ஆட்டத்தில், ஹைத்தியை 4-0 என வீழ்த்திய எக்வேடார் குழு 'பி' பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததால் வெள்ளியன்று நடைபெறவுள்ள காலிறுதியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
எதிரணியின் வலைக்குள் பெரு வீரர் புகுத்திய பந்தை நடுவர் கோல் என்று உறுதிப்படுத்தியதால் ஏமாற்றமடைந்த பிரேசில் ஆட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி