யூரோ கிண்ணக் காற்பந்து தொடரில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டமொன்றில் போடப்பட்ட கடைசி நிமிட கோலால் அல்பேனியாவை வீழ்த்தியது பிரான்ஸ். இதனால் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 'நாக்அவுட்' சுற்றுக்கு முதல் அணியாக பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது. இரு அணிகளுமே அவ்வபோது கிடைத்த கோல் போடும் வாய்ப்பைத் தவறவிட்டனர். பிற்பாதி ஆட்டத்தின்போது அல்பேனிய வீரர் அடித்த பந்து எதிரணியின் வலைக்குள் செல்லாமல் கோல் கம்பத்தை உரசி சென்றது. அதேபோல், பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிரவுட்டும் பந்து நேராக வலைக்குள் செல்லும் வாய்ப்பை மூன்று முறை தவறவிட்டார். ஆட்டம் முழுவதும் கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில், அல்பேனியாவின் தடுப்பாட்டத்திற்கு 90வது நிமிடத்தில் முற்றுப்புள்ளி வைத்தது பிரான்ஸ்.
அப்போது அடில் ரமி கடத்திக் கொடுத்த பந்தை, மாற்று ஆட்டக்காரர் கிரிஸ்மேன் தலையால் முட்டி கோலாக்கினார். அதனைத்தொடர்ந்து காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது, பிரான்சின் கோலை சமன் செய்ய முனைப்புடன் விளையாடியது அல்பேனியா. ஆனால், ஆண்டரி தந்த பந்தை 92வது நிமிடத்தில் கோலாக்கி பிரான்சின் வெற்றியை உறுதி செய்தார் பாயெட். எனவே, 2-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தியது பிரான்ஸ்.
இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவு பட்டி யலில் முதல் இடத்தில் உள்ளது பிரான்ஸ். முதல் ஆட்டத்தில், ரூமேனியாவை 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்திய போதும் வெற்றிக்கான கடைசி கோலை பாயெட்தான் போட்டார். அடுத்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்வதற்கு முன்னரே பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஏற்கெனவே சுவிட்சர்லாந்திடமும் தோல்வியைத் தழுவிய அல்பேனியா, வரும் ஞாயிறன்று ரூமேனியாவை எதிர்கொள்கிறது.