இம்மாதம் ஏழாம் தேதி நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலுடன் மல்லுக்கட்டவிருக்கிறது வேல்ஸ். இது இரு அணிகளுக்கு இடையிலான மோதலாகப் பார்க்கப்படாமல் இரு பெரும் ஆட்டக்காரர்களான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (படத்தில் இடது ஓரம்), வேல்சின் கேரத் பேல் ஆகியோருக்கிடையிலான மோதலாகக் காற்பந்து ரசிகர்கள் காண்கின்றனர்.
இவ்விருவருமே ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழுவிற்கு விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்றபோதும் பெயருக்குத்தான் நண்பர்கள் என்றும் இருவருக்கிடையிலும் அவ்வப்போது உரசல்கள் எழுவதுண்டு என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, காற்பந்து வரலாற்றில் முன்னில்லாத அளவாக அதிக விலைகொடுத்து பேலை ரியால் குழு வாங்கியது ரொனால்டோவுக்குப் பிடிக்கவில்லை என்று அப்போது செய்திகள் வெளியாகியது நினைவிருக்கலாம். இதனால் இருவரில் யார் சிறந்தவர் என்பதை எடைபோடும் களமாக அரை இறுதிப் போட்டி அமையும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்