பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் 2013ஆம் ஆண்டு அவரது காதலியான ரீவா ஸ்டீன்காம்பை சுட்டுக்கொன்ற வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதும் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் கூறின.
தண்டனைக்கு எதிராக பிஸ்டோரியஸ் தரப்பிலும் அரசாங்கத் தரப்பிலும் மேல்முறையீடு செய்ய முடியும். கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 வயதான பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை தாழ்ப்பாளிட்டிருந்த ஒரு கழிப்பறையில் நான்கு முறை சுட்டார். ரீவா ஸ்டீன்காம்பை துப்பாக்கியால் சுட்டதை ஒப்புக்கொண்ட பிஸ்டோரியஸ், அச்சத்தின் விளைவாகவும் யாரோ திருடன் என்று எண்ணி தவறுதலாகவும் தனது காதலியைச் சுட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பிஸ்டோரியஸ் எதிர்நோக்கிய வேளையில் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. சிறு வயது முதலே செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டுள்ள பிஸ்டோரியஸ் ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் ஆறு தடவை தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தவர்.
காதலியைக் கொலை செய்த வழக்கில் தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியசிற்கு அங்குள்ள நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தண்டனை விதிக்கப் பட்டதும் அவர் உடனடியாக சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். படம்: எஎஃப்பி