நெருக்கடியான தருணங்களைக் கையாள்வது உள்ளிட்ட பல விஷயங்களை இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அனில் கும்ளே கற்றுத் தருவார் என்று தான் நம்புவதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இந்திய அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான அனில் கும்ளே பற்றி மேலும் பேசிய அவர், "ஒரு சில போட்டிகளில் மீள முடியா நெருக்கடியான தருணங்கள் ஏற்படலாம். அந்தத் தருணங்களை எப்படி அணுகுவது என்பது முக்கியமானதாகும். "கடினமானத் தருணங்களை எதிர்கொண்டு அவற்றிலிருந்து இருந்து மீண்டு, தொடர்ந்து அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பது முக்கியமான ஒன்றாகும். இதைத்தான் கும்ளே இந்திய வீரர்களுக்கு கற்றுக் கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். "20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ள கும்ளே யுடனான எனது அனுபவம் அபார மானது. அவரிடமிருந்து வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி யுள்ளது. அவரும் தான் கற்றுக் கொண்ட அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விருப்பமானவரே," என்று கூறினார் டெண்டுல்கர்.
மேலும், கும்ளேவிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக்கொள்ளுமாறும் இந்திய வீரர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தன்னுடைய உதவி எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் எனவும் உறுதியளித்துள்ளார். சச்சின், கங்குலி உள்ளிட்டோர் அடங்கிய பிசிசிஐ தேர்வுக் குழுதான் அனில் கும்ளேவை தலைமை பயிற்றுவிப்பாளராகத் தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட்இண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணியை முதன் முறையாக கும்ளே வழி நடத்து கிறார். இதற்கான இந்திய அணி யினர் அந்நாட்டிற்குச் சென்று உள்ளனர். இந்திய அணியினரின் பொழுது போக்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தின்போது நேற்று முன்தினம் கரீபிய தீவுகளைச் சுற்றிப் பார்த்தனர். இந்திய அணியினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ள அப்புகைப்படங்கள் ரசிகர் களிடையே வேகமாக பரவி வருகின்றன. வரும் 21ஆம் தேதி முதல் நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்பாக, இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. முதல் பயிற்சி -ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
வீரர்களுக்கு அபராதம்
இதற்கிடையே, தாமதமாக வரும் வீரர்களுக்கு $50 அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியை கும்ளே அறிமுகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. "வீரர்கள் ஒழுங்கைக் கடை பிடிக்க வேண்டும். வீரர்கள் எப்பொழுது விரும்பினாலும் அவர்களுடன் கலந்து பேச நான் தயாராக இருக்கிறேன். "வேலை, ஒழுக்கம், நகைச் சுவை, ஓய்வு எல்லாம் ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். "நீண்ட நாட்கள் நடைபெற உள்ள இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் உதவி பணி யாளர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்," என்று கும்ளே வீரர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.
டெஸ்ட் தரவரிசை
அனைத்துலக கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தர வரிசை பட்டியலில் 112 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 118 புள்ளி களுடன் முதலிடத்திலும் 111 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3வது இடத்திலும் உள்ளன. விரைவில் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2-1 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினால், 2வது இடத்துக்கு முன்னேறும்.
நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினர் கரீபியத் தீவுகளைச் சுற்றிப்பார்த்தனர். அப்போது கோஹ்லியுடன் (வலது) எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார் கும்ளே (இடது). படம்: இணையம்