லண்டன்: பிரான்ஸ், லெஸ்டர் சிட்டி ஆகிய குழுக்களைச் சேர்ந்த பிரபல மத்தியத் திடல் ஆட்டக்காரர் என்கொலோ கான்டேயை இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஜாம்பவான் செல்சி 30 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தப்படி கான்டே செல்சிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில் லெஸ்டர் சிட்டிக்காக விளையாடிய கான்டே அக்குழுவுக்காக 40 முறை களமிறங்கி லீக் பட்டத்தை வெல்வதற்குப் பெரும் பங்காற்றினார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியில் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற பிரெஞ்சு குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார். "ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய குழுக்களில் ஒன்றான செல்சியுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கனவு நனவாகி உள்ளது. சிறந்த பயிற்றுவிப்பாளரான அன்டோனியோ கொன்டேயுடனும் செல்சிக்கு விளையாடும் திறமைமிக்க மற்ற வீரர்களுடனும் சேர்ந்து விளையாடும் வாய்ப்பை நிராகரிக்க எனக்கு மனமில்லை," என்றார் 25 வயது கான்டே. "கான்டேயை லெஸ்டரில் தக்கவைத்துக் கொள்ள அவரது சம்பளத்தை உயர்த்தி நீண்டகால ஒப்பந்தத்தை வழங்கினோம். இருப்பினும், அவர் செல்சியுடன் இணைய விருப்பம் கொண்டுள்ளார் என்பது தெளிவானது," என்று லெஸ்டர் சிட்டி கூறியது.