ரியோ டி ஜெனிரோ: சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் (படம்) ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி போட்டியில் இடம்பெற மாட்டார். அதற்குப் பதிலாக அவர் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி போட்டியிலும் 100 மீட்டர் எதேச்சை பாணி போட்டியிலும் கவனம் செலுத்தவிருக்கிறார். இந்த 100 மீட்டர் போட்டிகளில் முழு கவனத்தையும் செலுத்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக நீச்சல் போட்டியில் 100 மீட்டர் எதேச்சை பாணி போட்டியில் ஸ்கூலிங் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
நாளை தொடங்கும் ஒலிம்பிக் போட்டிக்கான நான்கு நீச்சல் போட்டிகளில் ஸ்கூலிங் தகுதி பெற்றிருந்தபோதிலும் இரண்டில் மட்டுமே அவர் போட்டியிடுகிறார். 200 மீட்டர் ஏதேச்சை பாணி போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அவர் முன்பே முடிவு செய்து அறிவித்திருந்தார். இரண்டு போட்டிகளில் மட்டும் போட்டியிடுவது குறித்து ஸ்கூலிங், டெக்சஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது பயிற்றுவிப்பாளர் எடி ரீஸ் ஆகியோருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் நீச்சல் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் செர்ஜியோ லோபெஸ் தெரிவித்தார். "இரண்டு போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவது குறித்து ஸ்கூலிங் யோசித்து வந்தார். எடி ரீசுடன் கலந்துரையாடிய பிறகு 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் போட்டியிடும் திட்டத்தை கைவிட்டுள்ளோம். அதற்குப் பதிலாக 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் அவர் போட்டியிடுவார். அந்தப் போட்டியில் அவர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன," என்று 1988ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற லோபெஸ் கூறினார்.
இந்நிலையில், சிங்கப்பூரின் மற்றொரு நீச்சல் வீரரான குவா செங் வென் தாம் தகுதி பெற்ற மூன்று போட்டிகளிலும் பங்கெடுக் கிறார். அவர் ஆண்களுக்கான 100 மீட்டர் மல்லாந்து பாணி நீச்சல் போட்டி, 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் வண்ணுத்துப்பூச்சி பாணி ஆகிய போட்டிகளில் போட்டியிடு கிறார். அவரது தமக்கையான டிங் வென் மகளிருக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி போட்டியில் பங்கெடுக்கிறார். ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்குகின்றன.