கொழும்பு: ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் 1=1 என்று சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற, நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழிதீர்த்தது இலங்கை அணி. பூவா தலையா வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமாக விளையாடிய நிலையில் அடுத்து வந்த குசால் மென்டிஸ், மேத்யூஸ், குசால் பெரேரா ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், ஃபால்க்னர், ஸாம்பா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. அடுத்து வந்த மேத்யூ வேட் பொறுப்புடன் ஆடி 76 ஓட்டங்களை விளாசி நம்பிக்கை அளித்தார். ஆனால் அவர் ஆட்டமிழந்த பிறகு, அணியின் ஓட்ட விகிதம் சரியத் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 206 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.
ஆஸியின் புதிய அணித்தலைவர் இந்நிலையில், தொடரில் மீதமுள்ள 3 ஒருநாள் போட்டிகளுக்கும் இரண்டு 20 ஓவர் போட்டிகளுக்கும் ஆஸ்திரேலிய அணியின் புதிய தலைவராக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரில் முழுமையாக கவனம் செலுத்துவதற்காகவே ஸ்மித்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, வார்னர் தலைவராக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.