லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்துக் குழுவான ஆர்சனலுடன் தனது ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தை தொடர்வதாக ஜெர்மனி ஆட்டக்காரர் மெசுட் ஓஸில் (படம்) கூறியிருக்கிறார். இப்போது நடந்துவரும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி தகுதிச் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்தபின் ஒப்பந்த நீட்டிப்புப் பேச்சு வார்த்தையில் தான் கவனம் செலுத்தவுள்ளதாக ஓஸில் தெரிவித்துள்ளார்.
ஆர்சனலுடனான ஓஸிலின் ஒப்பந்தம் இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதமுள்ளன. எனினும், அவரைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக அவருக்கு ஆர்சனல் கணிசமான ஊதிய உயர்வு அளிக்கக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
"ஆர்சனலுடன் 2018ஆம் ஆண்டுவரை எனக்கு ஒப்பந்தம் உள்ளது. எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டி காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் நான் தேசியக் குழுவில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினேன். இப்பொழுது நாங்கள் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடர விரும்புகிறோம்," என்று ஓஸில் சொன்னார்.