ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் (பாராலிம்பிக்) இந்தியாவுக்காகத் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றுள்ளார். உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை மாரியப்பன் பெற்றார்.
இதற்கு முன்பு 1972ஆம் ஆண்டில் நீச்சல் வீரர் முர்லிகன்ட் பெட்கர் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியிலும் 2004ஆம் ஆண்டில் திடல்தடப் போட்டி வீரர் தேவேந்திர ஜகாரியா ஈட்டி எறிதலிலும் தங்கம் வென்று இருந்தனர். 21 வயது மாரியப்பன் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர். மாரியப்பன் ஐந்து வயதாக இருக்கும்போது பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந் தார். அதன் விளைவாக அவரது வலது முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதி செயல் இழந்தது.
கடந்த மார்ச் மாதம் துனிசியாவில் நடந்த கிராண்ட்ப்ரீ போட்டியில் 1.78 மீட்டர் தாண்டி பாராலிம்பிக் போட்டிக்கு மாரியப் பன் தகுதி பெற்றார். தகுதி பெறு வதற்கு 1.60 மீட்டர்தான் தேவைப் பட்டது. மாரியப்பன் தங்கம் வென்ற அதே உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மற்றோர் இந்திய வீரருக்கு வெண்கலம் கிடைத்தது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் பட்டி 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு வெண்கலம் வென்ற வருண் சிங்குக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரி வித்துள்ளார். இருவரும் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து இருப்பதாக அவர் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகையைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.