வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதிக்குள் முதல்முறையாகத் தேர்தல் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழுவை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் பெறக்கூடும். ஆனால் அதற்கு முன்பு சங்கத்தின் விதிமுறை திருத்தப் பரிந்துரைகளை ஏற்பது குறித்த முடிவை எடுப்பதற்கு இம்மாதம் 24ஆம் தேதியன்று வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற வேண்டும். இந்தப் பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் 46 வாக்களிக்கும் உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பரிந்துரையை ஏற்று அதற்கு ஆதரவாக வாக்களித்தால் சங்கத்தின் நிர்வாகக் குழு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டால் தேர்தல் தாமதமடையக்கூடும். இந்நாள் வரை நிர்வாகக் குழு நியமன முறையில்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆர். வெங்கடாசலத்தின் அணியைச் சேர்ந்த திரு அல்ஃபிரட் டோட்வெல் 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை விரிவாக்கம் செய்து அதில் 18 பேர் இருக்கவேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்து அதற்கு ஆதரவு திரட்டி வருகிறார். இவரது பரிந்துரையை வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ள உறுப்பினர்கள் ஏற்றால் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுவது தாமதமாகலாம்.