சென்னை: முதன்முறையாக நடத்தப்பட்ட தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தூத்துக்குடியின் 'ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ்' அணி 122 ஓட்ட வித்தியாசத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியைத் தோற்கடித்து கிண்ணத்தைக் கைப்பற்றியது. முதலில் பந்தடித்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்களை எடுத்தது. அவ்வணியின் கௌஷிக் காந்தி 59, அபினவ் முகுந்த் 82*, தினேஷ் கார்த்திக் 55 ஓட்டங்களை எடுத்தனர். கடினமான இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணிக்குத் தொடக்கமே பேரதிர்ச்சியாக இருந்தது.
முதல் ஓவரிலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது அந்த அணி. சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இறுதியில் சேப்பாக்கம் அணி 93 ஓட்டங்களை மட்டும் எடுத்து படுமோசமாகத் தோற்றது. ஆட்ட நாயகனாக கணேஷ் மூர்த்தியும் தொடர் நாயகனாக திண்டுக்கல் அணியின் ஜெகதீசனும் (397 ஓட்டங்கள்) தேர்வு பெற்றனர்.