அதிக எதர்பார்ப்புடன் நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் பொதுக்கூட்டம் முழு மையடையாத நிலையில் திடீரென முடித்துக்கொள்ளப் பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கருதப்பட்டது. பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருந்தால் வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் முதல் முறையாகத் தேர்தல் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழுவை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் பெற்றிருக்கக்கூடும்.
ஆனால் இந்தத் திருத்தங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. உறுப்பினர்களிடையே மேலும் பல கருத்துகளைச் சேகரிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்பதற் காக பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெறவில்லை என்று தெரி விக்கப்பட்டது.
சங்கத் தலைவர் ஸைனுதீன் நூர்தீனையும் துணைத் தலைவர் பெர்னட் டானையும் பொறுத்தவரை, உறுப்பினர்களிடம் கருத்து சேகரிப்பதற்குத் தேவையான கால அவகாசத்தை நீட்டிக்க நேற்று முன்தினமே தீர்மானிக்கப்பட்டது. "தீர்வு காணக்கூடிய கருத் துகள் முன்வைக்கப்படும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அப்படி நடக்காததால் வேறு வழி இன்றி பொதுக்கூட்டம் முழுமை அடையாத நிலையில் முடித்துக் கொள்ளப்பட்டது," என்றார் திரு டான். வாக்களிக்கும் உரிமை கொண்ட சங்க உறுப்பினர்களிடம் கருத்து சேகரிப்பதற்கான இறுதி நாள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கருத்து சேகரிக்கப் பட்டதும் பரிந்துரைகளை நடை முறைப்படுத்த உலகக் காற்பந்துச் சம்மேளனத்திடம் (ஃபிஃபா) அவை சமர்ப்பிக்கப்படும்.
பொதுக்கூட்டம் முழுமையடையாமல் முடித்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசும் காற்பந்து சங்கத் தலைவர் ஸைனுதீன் நூர்தீனும் (இடது) துணைத் தலைவர் பெர்னட் டானும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்