கான்பூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட் டியின் நான்காவது நாள் முடிவில் இந்திய அணி 340 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. கான்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அதன் முதல் இன்னிங்சில் 262 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. கடைசி 8 ஓட்டங்களில் 5 விக்கெட்டுகளை அது இழந்தது. இந்திய வீரர் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டிக்கு முன் அஸ்வின் 36 போட்டிகளில் 193 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தது மூலம் 197 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 377 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியாவின் அபாரப் பந்தடிப்பால் நியூசிலாந்து வீரர்கள் தடுமாறினர்.
இதனை அடுத்து பந்தடிக்கத் தொடங்கிய நியூசிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. அதன் தொடக்க வீரர்கள் குப்தில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். லாதம் இரண்டு ஓட்டங்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். இவர்கள் இருவரையும் அஸ்வின் வெளியேற்றினார். இதையடுத்து, களமிறங்கிய வில்லியம்சன் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அஸ்வின் அனுப்பிய பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது, மிக விரைவாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். அனைத்துலக அளவில் மிக விரைவாக 200 விக்கெட்டுகளைச் சாய்த்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சாய்த்து மிக விரைவாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்தியர் எனும் பெருமையை நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (வலது) பெற்றார். படம்: ஏஎஃப்பி