லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டம் ஒன்றில் ஆர்சனல் 3=0 எனும் கோல் கணக்கில் செல்சியைப் புரட்டி எடுத்துள்ளது. ஆட்டம் தொடங்கி 11 நிமிடங்களில் ஆர்சனலின் முதல் கோல் புகுந்தது. செல்சியின் தற்காப்பில் ஏற்பட்ட குளறுபடியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அலெக்சிஸ் சஞ்செஸ் கோல் போட்டார். ஆர்சனல் ரசிகர்களின் கொண்டாட்டம் தணிவதற்குள் மூன்று நிமிடங்கள் கழித்து தியோ வால்காட் இரண்டாவது கோலைப் போட்டார். தனது நிலை இனி இதைவிட மோசமடையாது என்று நம்பிக்கையுடன் இருந்த செல்சிக்கு 40வது நிமிடத்தில் புகுந்த ஆர்சனலின் மூன்றாவது கோல் பீதியை ஏற்படுத்தியது.
இந்த கோலை மெசுட் ஒசில் போட்டார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஜாம்பவான்களில் ஒன்றான செல்சியை 3=0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்த தமது வீரர்களை ஆர்சனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர் வெகுவாகப் பாராட்டினார். மற்றோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 4=1 எனும் கோல் கணக்கில் நடப்பு வெற்றியாளரான லெஸ்டர் சிட்டியை வென்றது. யுனைடெட் குழுவுக்கான கிறிஸ் ஸ்மாலிங், ஜுவான் மாட்டா, மார்கஸ் ரேஷ்ஃபர்ட், பால் பொக்பா ஆகியோர் கோல் போட்டனர். யுனைடெட்டின் நான்கு கோல்களும் முற்பாதி ஆட்டத்தில் போடப்பட்டன.
ஆர்சனலின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் தியோ வால்காட். படம்: ராய்ட்டர்ஸ்