கோல்கத்தா: இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் கைகளில் குறிப்பாக புவனேஸ்வர் குமாரின் கைகளில் மட்டும் ஒருமுறை அல்ல, ஐந்து முறை சிக்கித் திணறியது நியூசிலாந்து அணி. இந்தியாவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா சென்றுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. ஏற்கெனவே முதல் டெஸ்டில் மண்ணைக் கவ்விய நியூசிலாந்து அணி, கோல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் அரங்கில் வஞ்சம் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி நேற்று முன் தினம் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் களம் இறங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்தடிக்க களம் இறங்கியது.
முதல் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸைத் தடுமாற்றத்துடன் தொடங்கினாலும் சற்று ஆறுதலுடன் நிறைவு செய்தது இந்திய அணி. பின்பு நேற்று தனது ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி, புஜாரா (87), ரகானே (77), சாஷா (54 நாட் அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 316 ஓட்டங்களில் பெற்ற நிலையில் இறுதி விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் பந்தடிக்கக் களம் இறங்கியது நியூசிலாந்து. நியூசிலாந்தின் சரிவுப் பாதைக்கு சுழல் ஜோடி ஜடேஜாவும் அஷ்வினும் திட்டம் தீட்டினர். ஈடன் கார்டன் கிரிக்கெட் திடல் அதிக சுழலுக்கு உகந்த இடமாகத் திகழவில்லை. ஆனால் அதை சுழல் ஜோடி ஜடேஜாவையும் அஷ்வினையும் பொருட் படுத்தவில்லை.
நியூசிலாந்தின் ரோஸ் டெய்லரைப் (வலது) ஓட்டம் எடுக்க விடாமல் தடுக்க முற்படும் இந்திய கிரிக்கெட் அணியினர். படம்: ராய்ட்டர்ஸ்